Thursday, May 28, 2009

தொலைக்காட்சி எதிரில்






விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்
அருகில் இருப்பவர்
தோளைத் தட்டுகிறார்கள்


கேவிக்கேவி அழுகிறார்கள்
பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து
கௌளி சொல்கிறார்கள்


வாயைக்குவித்து வியக்கிறார்கள்
இப்படிப் பார்த்ததே இல்லையெனப்
பகிர்ந்துகொள்கிறார்கள்


பூரித்துப் போகிறார்கள்
கைகளைக் கொட்டுகிறார்கள்
இப்படித்தான் இருக்கவேண்டும்
அல்லது இருக்கப்போகிறேன்
என்கிறார்கள்


பதறி நடுக்குறுகிறார்கள்
ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப்பிடித்துக்கொள்கிறார்கள்


சீச்சீ என்கிறார்கள்
லஜ்ஜையுடன் பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கிறார்கள்
அல்லது கையை விரிக்கிறார்கள்


பல்லைக் கடிக்கிறார்கள்
நானாய் இருந்தால்
இப்படிச் செய்திருக்கமாட்டேன்
என்கிறார்கள்

விசையை அணைத்தபின்
தானியங்கிபோல்
நடக்கிறார்கள்
தொங்கிய முகத்துடன்
மௌனித்தவாறே
வெவ்வேறு பாதைகளில்



அநங்கம், மலேசியா
மே2009 இதழ்

3 comments:

ச.முத்துவேல் said...

ரொம்ப நல்லா இருக்குது. திரையரங்கில்கூட ஒரு படத்தைப் பார்த்துவிட்டு வெளி வரும்போது, அப் படம் சார்ந்த உணர்வுகளில், கனவுகளில் இருப்போம். ஆனால், வெளியுலகம் வந்ததும் நம் நிதர்சனம் சுடும்.

நட்புடன் ஜமால் said...

திரைப்படமா

சீரியலா

கனவுகளில் மிதக்கவே அநேகருக்கு(என்னை போன்றோருக்கும்) விருப்பம் போல ...

யாத்ரா said...

கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.