Sunday, March 12, 2006

இனிக்கும் இலக்கியம்

குறிஞ்சிப்பாட்டு


ஞாயிறு அந்தி நேரம்- தமிழிலக்கியத்தை ஞாலத்தில் பரப்பும் காலம். சிந்தனைக்கு விருந்தளிக்கும் சிங்கை வானொலிக்கும் அன்பு நேயர்களுக்கும் என் வணக்கம்.

சங்க இலக்கியத்தின் கண்களான பத்துப்பாட்டு மற்றும் எட்டுத்தொகையுள் இன்று பத்துப்பாட்டில் உள்ள குறிஞ்சிப்பாட்டின் இனிமையைப் பருகிடுவோம் வாருங்கள். இதோ கபிலரின் கவித்திறம்.

ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை

(பாடலின் ஒரு பகுதி)

தினைப்புனம் காக்கச் சென்ற தலைவியும் தோழியும் தாங்கள் உடுத்தும் தழை உடைக்காகவும் அணியும் மாலைகளுக்காகவும் பலவகை மலர்களைப் பறித்தனர் என்று கூறும் இடத்தில் 99 மலர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு வரியிலும் மும்மூன்று பூக்களாக மாறி மாறி கோக்குமழகு இப்பாமலையாகிய பூமாலையை மணங்கமழச் செய்கிறது. அழகிய குமரியாக மட்டுமன்றி, அறிவின் செல்வியாகவும் தலைவியைக் காட்டத்துடிக்கிறார் புலவர்.

தோழியுடன் சென்ற தலைவி மலையருவியில் நீராடினாள். வேட்டையாடும் பொருட்டு வந்த தலைவனுடைய வேட்டை நாய்கள் மீது அவளுக்கிருந்த அச்சத்தைத் தலைவன் நீக்கினான். புதுப்புனல் வெள்ளத்திலிருந்தும் மதயானையிடமிருந்தும் மங்கையைக் காத்தான். காதல் மலர்ந்தது. நாள்தோறும் சந்திப்பு தொடர்ந்தது. வழியிடை அச்சம் மற்றும் காலந்தாழ்ச்சியினால் சோர்வுற்றாள் தலைவி.

வாரணம் நிறைந்த மலைக்கு - இவள் போகும்
காரணம் என்னவோ?
மெலிவடையும் தலைவி- அவள்
நிலை கண்டுசெவிலிக்கோத் தலைவலி.
வந்திட்டாள் அன்புத் தோழி-
தந்திட்டாள் திருமணச் செய்தி.
தலைவன் தலைவியின்
கரம் பிடிக்க வரம்
கேட்பதை அறிவித்தாள்.

சங்கத் தமிழ்க் கவிதை- இது
காட்டுவதோ புதுப்பாதை.
அகத்திணைச் செய்திகளுக்கு
வழித்துணையாய் வருவது
தொண்ணுற்றொன்பது மலர்கள்.
மிகத் தொன்மையானதொரு பாடல்.
தாவரவியலில் ஒரு தேடல்.
குறிஞ்சிக் கபிலர் இதன் தந்தை
பறித்திடும் மலர்களின் எண்ணிக்கை
தருவதோ விந்தை.

உளவியல் அறிந்திட்ட மேதை
உள்ளத்தில் சொறிவதோ போதை.

பூக்களின் பெயர்களை மிகுதியாகக் கூறுவது கால நீட்டிப்புப் போல் தோன்றுகிறது. கூர்ந்து நோக்கினால் இது தலைவியின் அறிவாற்றலைப் புலப்படுத்துகிறது. தன் களவொழுக்கத்தைத் தோழி முதலில் எடுத்துரைத்தால் செவிலிக்குச் சினம் ஏற்படும் என்று கருதி அவள் சினம் தணிவதற்கும் அறிவியலைத் துணை கொள்கிறாள் தலைவி.

களவியலில் அறிவியலோடு உளவியலும் அமைந்திட்ட குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தேனூற்று.

கோபத்தினால் வரும் எதிர்வினையைத் தவிர்க்க, சிக்கலான விடயத்தைக் கூட பிறர் ஏற்றுக்கொள்ளும் வகையில் மேலாண்மைத் திறனுடன் செப்பிடும் வித்தை - அக்காலத்திற்கு மட்டுமன்றி எக்காலத்திற்கும் பொருந்தும் விந்தை.
நம் தினசரி வாழ்வில் சினத்தினைத் தவிர்ப்போம் ,இனிமையைச் சேர்ப்போம். சற்று சிந்தித்து பேசினால், சினத்திற்கு இடமேது. சினம் வந்திட்டால், சிரிப்பு சென்றுவிடுமே! ஆத்திரம் உத்திரத்தைத் தொட்டால், நட்டம் சொல்பவர் கேட்பவர் இருவருக்கும் தானே.

இப்பாடல் எழுந்த காரணம் என்பதை அறிந்தால் நமக்கு வியப்பாக இருக்கும்- ஆரிய அரசன் பிரகதத்தன் தமிழ்ச்சுவையை அறிய விழைந்திட்டான். தமிழர்க்கே உரிய அகத்திணையின் சிறப்பை உணர்த்தவும் தமிழ்ச்சுவையை ஊட்டவும் பாரியின் நண்பர் கபிலர் கூறி மகிழ்ந்தக் குறிஞ்சிப்பாட்டு தமிழுக்கு ஒரு தாலாட்டு. திக்கெட்டட்டும் இதன் பேச்சு வியக்கவைக்கும் தமிழின் வீச்சு.

ஆம், ஆரிய அரசன் தமிழின் சிறப்பை அறிந்து உணர்ந்தது மட்டுமன்றி தன் தமிழறிவைப் பெருக்கி குறுந்தொகையில் ஒரு பாடல் இயற்றியிருக்கிறான் என்றால், தமிழராகிய நாம் தமிழை தரணியேற்றா வேண்டுமல்லவா, தமிழருடன் தமிழில் பேசுவோம். நம் அடுத்த தலைமுறைக்கு தமிழிலக்கியங்களைத் தங்கத்தட்டில் வைத்து தந்துமகிழ்வோம்.

இதோ அந்தப் பாடல்பகுதி

ஒண்செங் காந்த ளாம்ப லனிச்சம்
தண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கொடு வேரி தேமா மணிச்சிகை
யுரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிள
மெரிபுரை யெறுழஞ் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடச
மெருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமல ராவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குறுகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி யதிரல் பெருந்தண் சண்பகங்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்தற்
றாழை தளவ முட்டாட் டாமரை
ஞாழன் மௌவ நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மராஅம் பல்பூந் தணக்க
மீங்கை யிலவந் தூங்கிணர்க் கொன்றை
யடும்பம ராத்தி நெடுங்கொடி யவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந் துவாரம்
தும்பை துழாஅய் சுடாப்பூந் தோன்றி
நந்தி நறவ நறும்புன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
யாரங் காழ்வை கடியிரும் புன்னை
நரந்த நாக நள்ளிரு ணாறி"


கலாப மயில் பலா மரங்கள் நிறைந்த குறிஞ்சி நிலமே வஞ்சியின் களம். உவமைக்குக் கூட அவள் திணைக்குரிய பொருட்களையே கூறவேண்டும் என்று பகர்ந்துள்ளது தொல்காப்பியம். பிற திணைப் பூக்களின் நாமம் தலைவி கூறக்கேட்பது மாயம்.

முல்லைக்குரிய பிடவம், முல்லை, கொன்றை , தோன்றி தோன்றுகிறது. தாமரை, குவளை, வஞ்சி, காஞ்சி, காயா, மருதம் அருமையான மருதநிலத்தைச் சேர்ந்தவை. நெய்தலும் தாழையும் ஞாழலும் புன்னையும் நெய்தலுக்குரியனவே. குரவம் மரா பாதிரி பாலையைச் சேர்ந்தது கபிலரே. வெவ்வேறு நேரங்களில் பூக்கும் இம்மலர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள் என்று நாங்கள் அறிவோம்.

அழகு நிறைந்த தலைவி, செறிவுள்ளவளாக மட்டுமல்ல அவளை அறிவுள்ளவளாகவும் காட்டுவது மங்கை போகப்பொருளல்ல என்பதை நாநிலமும் அறியட்டும் என்று நினைத்தீரோ கபிலரே.

ஐந்திணைப் பொருள்களின் அறிவை ,அரிவை பெற்றிருக்கிறாள் என்பதன் மூலம் தலைவியை அவள் அறிவைக்காட்டி அறிமுகப்படுத்தியுள்ள கவிஞர் பெருந்தகையே, இன்றைய இந்த இருபத்தோறாம் நூற்றாண்டில் கூட பெண்களாகிய நாங்கள் விழைவது அதுவே. எங்கள் அறிவை முன்னிலைப்படுத்துங்கள். எங்கள் பண்பைப் பகருங்கள். புறத்தோற்றத்தை மட்டும் பார்ப்பதை புறந்தள்ளுங்கள்.

அன்புள்ளங்களே அடுத்தவர் மனமுறிய பேசாமல், மனம் அறியப் பேசுவோம், பெண்மையைப் போற்றுவோம். தமிழைத் தரணியில் ஏற்றுவோம். சிறப்பாக வாழ்வோம் வளர்வோம் வாருங்கள்.

நன்றி
வணக்கம்

இனிக்கும் இலக்கியம் நிகழ்ச்சியில் சிங்கப்பூர் வானொலியில் 12.3.06 அன்று மாலை ஒலிபரப்பானது

Friday, March 10, 2006

ஈவ் டீசிங்கிற்கு தீர்வு உண்டா?- சிறுகதை

வண்டியில் சென்றுகொண்டிருந்த பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியான செய்தியை நாளிதழில் படித்தபோது சிறு வயதில் படித்த Little Red Riding Hood என்ற கதை நினைவுக்கு வந்தது.

கதையில் ஓநாய் சிறுமியையும் பாட்டியையும் விழுங்கிவிடும்; பின் ஒரு வேடன் ஓநாய் வயிற்றைக்கிழித்து அவர்களை பத்திரமாக வெளியே எடுப்பான். இங்கு,......

சிவப்புத் தொப்பிக்குட்டி


முல்லைவனம் ஒரு அழகிய ஊர். அங்கு சிந்தாமணி என்ற சிறுமி தன் தாயுடன் வசித்து வந்தாள்.

அவள் எந்த வண்ண உடை அணிந்தாலும் சிவப்பு நிறத் தொப்பி ஒன்றை எப்போதும் அணிந்து கொண்டிருப்பாள். அது அவள் பாட்டி அவள் அம்மாவின் தாயார் வெளியூர் சுற்றுலா சென்றபோது அவளுக்காக வாங்கி வந்தது. அது வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதை அவள் ஒரு போதும் அணியாமல் இருந்ததில்லை. அதனால் அவள் தாய் உட்பட பலரும் அவளை சிவப்புத் தொப்பிக்குட்டி என்று அழைப்பது வழக்கமாகி, அவள் நிஜப்பெயரான சிந்தாமணி எல்லோருக்கும் மறந்துவிட்டது.


ஒரு நாள் மாலை அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் பின்னே ஓடியவாறு அவள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அம்மா கூப்பிடுவதைக்கேட்டு வீட்டிற்குள் ஓடோடி வந்தாள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். தெரிந்தவர் மூலம் கேள்விப்பட்டேன்".

"ஐயோ பாவம். என் பாட்டி தனியாக எப்படி கஷ்டப்படுகிறாரோ , நான் வேண்டுமானால் போய் ஏதேனும் உதவி செய்துவிட்டு வரட்டா அம்மா?"

"என் தங்கமே! உனக்குத்தான் எத்தனை நல்ல மனது. நம்மைவிட்டால் பாட்டிக்கு உதவி செய்ய வேறு யார் இருக்கிறார்கள். இதோ பாட்டிக்கு ஒரு சம்படத்தில் ரவைக்கஞ்சியும், சில பழங்களும் ஒரு கூடையில் போட்டுத் தருகிறேன். போய் கொடுத்துவிட்டு வருகிறாயா?"

"ஆகட்டும் அம்மா அப்படியே தோசைமாவு இருந்தால் அதையும் ஒரு டப்பாவில் போட்டுக் கொடுங்கள். நாளை பாட்டி சமையல் செய்ய வேண்டாம் பாருங்கள்"

"என் கண்ணே உனக்கு எத்தனை முன் யோசனை. ஆனால் எனக்கு ஒரு கவலை இருக்கிறது. நம் முல்லைவனத்துக் காட்டைக் கடந்து அல்லவா நீ போக வேண்டும். இப்போதே சாயங்கால வேளையாகிவிட்டது.. நீ சேலையூர் போய் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வர இரவாகி விடுமே".

"அதனால் என்னம்மா!" நான் என்ன நடந்தா போகப் போகிறேன்?. இது போன்ற வெளி வேலைகளுக்காகக் எனக்கு மிதிவண்டி வாங்கித் தந்திருக்கிறீகள்; அதில் மின்னலெனப் போய்வருவேன்."


"அதற்கில்லை. ஆனால் காட்டுவழிச் செல்லும் போது அந்தப் பொல்லாத ஓநாய் வந்தாலும் நீ திரும்பிப் பார்க்காதே. அது கூட எதுவும் பேசாதே. பாட்டி வீட்டுக்குப் போனோமா வந்தோமா என்று வந்துவிடு. ஆனால் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்கிவிடு. அதற்குத் தானே தற்காப்புக்க்கலையைக் கற்றுக் கொள்ளவைத்திருக்கிறேன்."

அம்மா கொடுத்த உணவுப் பொருள்களோடு சிவப்புத் தொப்பிக்குட்டி பாட்டிக்குத் தான் செய்திருந்த ஒரு சிறு அவசர மணியடிக்கும் கருவி, ஒரு பொட்டலத்தில் மிளகாய்ப்பொடி மற்றும் சில சிறு பொருள்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வரட்டும் அந்தப் பொல்லாத ஓநாய்; எப்போது பார்த்தாலும் தனியாக யாராவது இளம் பெண்கள் வந்தால், அவர்களை கலாட்டா செய்வதே அதற்கு வழக்கமாகிவிட்டது.
போன மாதம் வளர்மதி எப்படி அழுதாள். அதுமட்டுமா, அதற்கு முன்னால் இன்னும் எத்தனை பேருக்குத் தொல்லை கொடுத்திருக்கிறது. எத்தனை முறைதான் காவலரிடம் ஓடுவது;

இதன் கொட்டத்திற்கு முடிவு கட்டத்தான் அவள் ஒரு திட்டம் தயார் செய்திருக்கிறாளே, ஆனால் அதைப் பயன்படுத்த இன்னும் துறைத்தலைவரிடம் அனுமதி பெறவில்லை; அந்த ரகசியம் அவளுக்கும் அவள் அறிவியல் ஆசிரியைக்கும் மட்டுமே தெரிந்தது;

ஓநாய் மீது பொங்கி வந்த கோபத்துடன் தன் வண்டியை வேகமாக ஓட்டிய போதும் அவள் கோபம் தீரவில்லை.

போன முறை பள்ளி ஆராய்ச்சி சாலையிலிருந்து சேலையூர் நூலகத்திற்குச் செல்லும்போது இதே காட்டுப்பகுதியில் அவளைக் கடிக்க அந்த ஓநாய் வந்தது. அப்போது அவளைக் காப்பாற்றியது அவள் கற்ற கலை. ஆம் அவள் களறிப் பயட்டுத் தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து சரியாக அடியும் உதயும் பெற்ற அந்த ஓநாய் வாயில் வந்த ரத்தத்தைத் துடைத்தவாறு நொண்டிக்கொண்டே அவளைத் திரும்பித் திரும்பிப்ப் பார்த்துக்கொண்டே ஓடியதை இப்போது நினைத்துப் பார்த்து ஹாஹாஹ்ஹா என்று பலமாகச் சிரித்தாள்.

காட்டுப் பகுதியில் நடந்துசென்ற வேறு சிலர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, என்ன இந்த நேரத்தில் கிளம்புகிறாய்? பாட்டி வீட்டுக்கா போகிறாய்?" அவள் வீட்டிற்குப் பின்புறம் வசித்து வந்த தாத்தா கேட்கவும்,

" ஆமாம் தாத்தா, சேலையூர் பாட்டிக்கு உடம்பு சரியில்லை; அம்மா கொடுத்திருக்கும் கஞ்சியை பாட்டியிடம் கொடுத்துவிட்டு வரப்போகிறேன். நாளைக்குப் பள்ளி இருக்கிறதே. நான் சடுதியில் போய்விட்டு வரவேண்டும்" என்றவாறு வேகமாக வண்டியை ஓட்டினாள்.

"ஓஹோ, போ போ கொடுத்துட்டு திரும்பி வருவே இல்லை. அப்போ நல்லா காடு இருண்டுவிடும்.; ஆட்களும் குறைந்துவிடும்; உன்னை என்ன செய்கிறேன் பாரு! என்னை என்ன அடி அடித்தாய்" பொருமியவாறு அந்தப் பெரிய ஆலமரத்தின் பின் ஒளிந்து கொண்டு முறைத்த அந்த இரு விழிகளை யாரும் கவனிக்கவில்லை.

காட்டைத் தாண்டி சேலையூர் பாட்டி வீடு வந்து சேர்ந்தாள். சோர்வுடன் படுக்கையில் இருந்த பாட்டியைக் கனிவுடன் விசாரித்து ஆதரவுடன் கஞ்சியைப் புகட்டினாள். வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

"பாட்டி உங்களுக்கு ஏதேனும் புத்தகம் படித்துக் காட்டட்டுமா?"

"சிவப்புத் தொப்பிக்குட்டி, நீ இவ்வளவு செய்ய்ததே போதுமடா! நேரத்துடன் வீட்டுக்குப் போய்ச்சேர், அம்மா கவலையுடன் இருப்பாள் இல்லையா?" என்று அன்புடன் கூறி அவள் தலையைத் தடவி, " இரு ; நேற்று கடைத் தெருவில் பணியாரம் வாங்கினேன் ; அப்படியே இருக்கிறது. பையுடன் கூடையில் போடுகிறேன் என்றவாறு கூடையின் அடியில் இருந்த சிறு மிளகாய்ப்பொடிப் பொட்டலத்தை ஏதோ குப்பைக்காகிதம் என்று நினைத்துத் தூரப் போட்டுவிட்டு பணியாரப் பையை உள்ளே வைத்தார்.

சிவப்புத் தொப்பிக்குட்டியும் அதை கவனிக்கவில்லை; "சரி பாட்டி, நான் போய் வருகிறேன். அந்தக் கருவியை நான் சொல்லித் தந்தபடி பயன்படுத்துங்கள்; உங்களுக்கு , மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."

"ஆங்- சொல்ல மறந்துவிட்டேன் தொப்பிக்குட்டி. நேற்றுக் கடைத்தெருவில் உங்களூர் தீபனைப் பார்த்தேன். உன்னைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னான். இந்த ஆண்டு அறிவியலில் ஆராய்ச்சியில், இளம் அறிவியலாளர் கார்மேகம் நினைவுப் பரிசு உனக்குத்தானாம்."

"அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்; எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது".

"நன்றாய் இருக்கிறது போ. கொக்குக்குத் தன் தலையில் வெண்ணெய் இருப்பது தனக்கே தெரியாதாம். உன்சிறு வயதிலிருந்தே உன் அம்மாவுக்கும் எனக்கும் உன்னைப் பற்றிய கனவுகள் பல. நீ பிறந்தது முதல் உன் ஒவ்வொரு வெற்றிக்கும் சந்தோஷப்படுவோம். ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் மனம் தளராமல் அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாய் என்று உன் அம்மா கேட்பாள். நீயும் சூட்டிகையுடன் இருக்கிறாய். நீ பெரிய பெரிய சாதனைகள் புரிவாய். நூறாண்டு வாழ்வாய்" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.

தொப்பிக்குட்டி உற்சாகத்துடன் , கவிஞர் மணிமேகலையின் ' புதியான கண்டுபிடிப்போம், பொங்கிவா தங்கமே" என்ற பாடலைப் பாடியவாறு காட்டில் நுழைந்தபோது நன்றாக இருட்டி விட்டிருந்தது. இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருந்தனர். வீட்டிற்குச் செல்ல காட்டிலேயே மூன்று பாதைகள் இருந்தன. ஊராட்சி ஒன்றியத்தின் விளக்குகள் ஆங்காங்கே கண்சிமிட்டின.

அம்மா இரவு உணவைத் தனியாகச் சாப்பிடமாட்டார்; அப்பா வேறு பணி காரணமாக வெளியூரில் இரண்டு திங்களாக இருக்கிறார். பேராசிரியர் கண்ணன் நம்பி, சென்ற தேர்வில் அவள் சிறந்து விளங்கியதற்காக அறிவியல் அதிசயங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்; தன்னிடமே இருக்கும் என்றாலும் அதை உடனே படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் பொங்க அவள் வண்டி மிதிப்பதில் வேகம் காட்டியபோதுதான் அது நடந்தது.

" தொப் தொப் என்று யார் யாரோ குதிக்கும் ஒலி.. அவள் பாதையில் குறுக்கே குதித்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டாள்".

'ஆ இதோ அந்த ஓநாய்-' அவளைப் பார்த்துக்க்கொண்டே நெருங்க, வேகத்தைக் கூட்டினாள். "ஹாஹ்ஹா" எக்காளச் சிரிப்பு இடப்புறமும் வலப்புறமும் கேட்க, அவளைச் சுற்றி ஒன்றல்ல, நான்கு ஓநாய்கள் நின்று கொண்டிருந்தன.

" ஏய் தொப்பிக்குட்டி, என்ன முழிக்கிறாய்? இதோ இவன் தற்காப்புக்கலையில் வல்லவன், அவன் வேகமாக ஓடுவதில் சிறந்தவன். இவன் எங்கள் நால்வருக்கும் உன்னைப் போலவே வண்டி கொண்டு வந்திருக்கிறான். எப்படி வசதி? ஓடுகிறாயா, இல்லை மிதிவண்டியில் ஏறிக்கொண்டு ஓட்டப்போகிறாயா? நாங்களும் உன்னைச் சுற்றி ஓட்டிக்கொண்டு வருகிறோம்". கெட்ட ஓநாய் மற்ற ஓநாய்களைக் காட்டியவாறு கொக்கரித்தது.

சின்னச் சிவப்புத் தொப்பிக்குட்டிக்கு வியர்த்துக் கொட்டியது. இது அவள் ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. கள்ள ஓநாய்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மெல்ல அவளைச் சுற்¨த் துவங்கின.
தொப்பிக்குட்டி, வண்டியிலிருந்து இறங்கவில்லை; "ஓநாயே நீயும் உன் நண்பர்களும் மிகுந்த அறிவாளிகள்; உங்கள் வீரதீர பராக்கிரமத்தை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்" என்று பேசியவாறு, தன் வண்டியில் கைக்கருகில் இருந்த ஒரு விசையை அழுத்த அடுத்த வினாடி, அந்த வண்டி புதிய உந்து சக்தி பெற்று பூமியிலிருந்து உயரத் துவங்கியது.

என்ன ஏது என்று ஓநாய்க் கூட்டம் புரிந்து கொள்ளும் முன் சிவப்புத் தொப்பிக்குட்டி இருபது அடி உயரத்திற்கு வண்ண்டியுடன் மேலே போனாள்.

" முட்டாள் ஓநாய்களே! இந்த விசைப்பொறி பெண்கள் மட்டுமே இயக்கக்கூடியது.. வேறு யாரும் விசையை இயக்கினால் மேலே பறந்து காற்றில் ஓடாது. பெண்களுக்கு மட்டுமே உள்ள எஸ்டரோஜன் ஒரு அணு அளவு இருந்தால் மேலே உடனே பறந்துவிடும்படி வடிவமைத்திருக்கிறேன்" என்று சொல்லியவாறு கார்ற்ரில் முல்லைவனம் நோக்கி ஓட்டினாள்.

மஞ்சரி 2006

Sunday, March 05, 2006

அந்த மலர்க்கூட்டம்- சிறுகதை

அந்த மலர்க் கூட்டம்


வீட்டிற்கு கிளம்பிய தோழியை பஸ் நிலையம் வரை கூட செல்ல என் ப்ளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது, "குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ" மலர்ந்த முகத்துடன் ஒரு குட்டி மலர்கூட்டம் என்னைப் பார்த்து கேட்க, "ஹலோ யங் லேடீஸ், ஐ ஆம் பைன்" என்று உற்சாகத்துடன் நான் உரைக்க, அவர்களைக் கடந்து சென்ற பிறகு என் தோழி வசந்தி," என்ன மீனா, " இவர்கள் யார்" என்று புதிராக வினவினாள்.


"இவர்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த குழந்தைகள், இதோ அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளி மாணவியர்," என்றேன்.


நான் ஒன்றும் பள்ளி ஆசிரியையோ அல்லது பள்ளியில் பெற்றோர் குழுவின் உறுப்பினரோ கிடையாது. என் குழந்தைகளும் வேறு பள்ளியில் படித்துவந்தார்கள். பின் எப்படி இத்தனை பள்ளி மாணவிகள் எனக்கு நட்பாகினர் அது ஒரு சுவையான கதை.


சில மாதங்களுக்கு முன் நான் முதுகலைப் பட்டப்படிப்பு ஒன்றைத் தபால் மூலம் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே அறையில் படித்துப் படித்து சற்றே சலிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் எங்கள் ப்ளோக் கீழ்தளத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலியில் அமர்ந்து காற்றாட படிக்கலாம் என்று கீழே புத்தகமும் கையுமாக நான் கீழே வந்திறங்கி வசதியாக அமர்ந்து பாடங்களைப் படிக்கத் துவங்கினேன்.

மணி மதியம் நான்கு இருக்கலாம். என் பிள்ளைகள் மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள். நான் படிக்கத் துவங்கி பத்து நிமிடங்கள் கூட ஆகியிராது, திடீரென்று ஒரு சிறு ஆரவாரம் ; நிமிர்ந்து பார்த்தேன், ஏழெட்டு பள்ளி மாணவியர் பள்ளிச் சீறுடையில் என்னை நோக்கி, புத்தகப்பையுடன் வந்து கொண்டிருந்தனர். மலாய், சீன, இந்திய மாணவிகள் என்று கலந்திருந்த நட்பு வட்டம் அது.


நான் உட்கார்ந்திருந்த பெஞ்சு ஒரு பெரிய அரை வட்டத்தினதாக இருந்தது. அதில் நடுவில் நான் அமர்ந்துகொண்டிருந்தேன். நான் தொடர்ந்து படிக்கத்துவங்கினேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது. உரத்த குரலில் ஏதோ பேசியவாறு என் இரு புறமும் மாணவிகள் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேளை அவர்கள் பள்ளி விட்டவுடன் தினமும் இங்கு வந்து அமர்ந்து பேசுவார்கள் போலிருக்கிறது; சரி வேறு எங்காவது போகலாம் என்று நினைத்தேன்.


"ஹேய், வாட் ஆர் யூ ரீடிங்? என்று அலட்சியமாக கேட்ட பெண்குழந்தைக்கு பதிமூன்று அல்லது பதினாங்கு வயது இருக்கலாம். அடுத்த வினாடி மற்றொரு சிறுமி ஒரு சிகரெட்டை பையிலிருந்து எடுத்து என்னவோ மிகவும் பழக்கமானது போல் பற்றவைத்து என் முகம் அருகில் புகையை விட்டாள். அடுத்த வினாடி அங்கிருந்து எழுந்து சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடுத்தேன்.


மனமே சற்று நிதானமாக இரு என்று பரபரத்த என் மனதிற்கு ஒரு சிறு கடிவாளம் போட்டேன். முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக்கொண்டேன். எங்களுக்குள் நிகழ்ந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் என்பதால் அதை தமிழில் உங்களுக்குத் தருகிறேன்.
நான் உற்சாகமான குரலில்," ஹாய் யங் லேடீஸ் ( இளம் பெண்களே) நான் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்; காற்றாடப் படிக்கலாம் என்றுதான் இங்கு வந்தேன்," நட்போடு புன்னகைத்தேன்.


"அலோ, நான் வின்னி" என்றாள், முதலில் என்னை அதட்டலுடன் விசாரித்த சிறுமி. சிறுமிகளில் ஓரிருவர் தத்தம் பெயர்களைச் சொல்லி என்னிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் ஏது பேசாது இருந்தனர்.


"என்ன பள்ளி விட்டது தோழிகளுடன் சந்தோஷமாக அரட்டையா" வேடிக்கையாகக் கேட்டேன்.


அப்போது என் முகம் அருகில் புகை ஊதிய சிறுமி சற்று நகர்ந்து கொண்டு வெட்கத்துடன் நெளிந்ததை கவனித்தாலும் பார்க்காததுபோல் இருந்தேன்.


அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஏழு பேரும் தத்தமது பெயரைக் கூறி, தங்கள் வகுப்பு, தங்கள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.


உயர் நிலை ஒன்று படிகக்கிறார்களாம். பள்ளி நேரம் முடிந்த பின் இங்கு அல்லது எதாவது ஒரு இடத்தில் அரட்டை அடித்துவிட்டுத் தான் போவார்களாம்.


"என்ன படிக்கிறீர்கள் ஆண்ட்டி?'


"தமிழ் இலக்கியம்"


உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, கணவர் என்ன செய்கிறார், வேலைக்கு போகிறீர்களா, சரமாரியான கேள்விகள்."எங்களுக்குத்தான் வேறு வழியில்லை' நீங்கள் எதற்கு படித்துக் கஷ்டப்படுகிறீர்கள். ஷாப்பிங், டி.வி. என்று நேரத்தைச் செலவழிக்கலாமே?" இது கேத்தி.


"திருமணத்திற்கு பின் சிங்கப்பூர் வந்த நீங்கள் ஏன் வேலையைத் தொடரவில்லை?"-இது பர்வீன்


"பரவாயில்லையே குழந்தைகள் சற்று வளர்ந்தபிறகு மேலே படிக்க ஆரம்பித்துவிட்டீர்களே" அனிதா


"நான் புகைப்பதை நீங்கள் ஆட்சேபிக்கப் போகிறீர்களா?"- செல்வி ஐயத்துடன் கேட்டாள். அவள் பின்னால் இருந்த ரீகா அடுத்த சிகரெட்டை எடுத்துக்கொண்டிருந்தாள்.


"கட்டாயம் ஆட்சேபிக்க மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல; உங்களுடன் பேசியதில் நீங்கள் புத்திசாலி குழந்தைகள் என்பதை அறிந்து கொண்டேன்; நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பிதான் இப்படிச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, "சிறு புன்னகையுடன் நிதானமாகக் கூறினேன்.


"ஆம் சரிதான், நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் ஆண்ட்டி," என்றாள் ரிகானா;

"எங்கள் வீட்டில் இன்று காலை பெரிய சண்டை; என்னை எல்லோரும் தங்கள் இஷ்டப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்; என்ன அநியாயம் தெரியுமா?"


அவள் மேலே பேசியதிலிருந்து நான் எல்லோரும் என்பது அவள் அருமைத்தாயையும் தந்தையையும் குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.


"நீ சுதந்திரதை எதிர்பார்க்கிறாய் இல்லையா"


"ஆமாம்' என்று அவள் மட்டுமன்றி எல்லோரும் ஒட்டுமொத்தமாக தலையாட்டினார்கள்.


"எப்போதுபார்த்தாலும் படி, படி, படி, இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்கு- தொலைக்காட்சிப் பார்க்காதே, கணினியில் விளையாடிக்கொண்டே இருக்காதே, என்று சதா ஒரு தொணதொணப்பு; அவர்கள் மட்டும் நன்றாக பார்க்கிறார்கள், நாங்கள் துறவி மாதிரி இருக்க வேண்டுமாம்"


"வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் ஒரே டார்ச்சர்( சித்திரவதை), அவள் இப்படி படிக்கிறாள், இவள் இவ்வளவு மதிப்பெண் வாங்குகிறாள், உனக்கு என்ன கேடு- இன்னும் நிறைய பயிற்சித் தாள் செய்து பழகு ஆயிரம் கணக்கு போட்டால் தான் நூறுறுக்கு நூறு வாங்கலாம்-, இது கேத்தி, வின்னி, செல்வி, பர்வீன், அனிதா, ரீகா, ரீகானா எல்லோரும் ஒட்டு மொத்தமாக மூக்கால் அழுதார்கள்.


"கொஞ்சம் படிப்பைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு வேறு எதாவது பேசலாமா?"


சட்டென்று எல்லார் முகமும் பிரகாசம் அடைந்தது.


"உங்களுக்கு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இல்லையா ஆண்ட்டி?"- ஒரு துடுக்குக்காரியின் கேள்வி.


"இருக்கிறார்கள். உங்கள் வயதுதான், அதனால் தான் உங்களுடன் பேச எனக்கு ஆர்வம் இருக்கிறது.


அதற்குள் இரண்டு இளசுகள் களுக்கென்று சிரித்துக்கொண்டனர். "ஏ, சொல்லாதே அனிதா கண்சாடைகாட்டினாள். மற்றொருவள் " ஆண்ட்டி, உங்களை இந்த பெஞ்சில் பார்த்தவுடன், இங்கிருந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான் மறு வேலை என்று பேசிக்கொண்டாள் இவள்," என்றாள்.


"உங்களில் யார் யாருக்கு படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் அதாவது விளையாட்டு, நாடகம், பாட்டு, ஓவியம் முதலியவற்றில் ஆர்வமுள்ளது; அதெயெல்லாம் சொல்லுங்கள் பார்க்கலாம்".


"எனக்கு சீன டிபேட்( சொற்களம்) என்றால் உயிர்" -துள்ளினாள் வின்னி.


"இவள் சென்ற ஆண்டு இறுதிச் சுற்று வரை போனாள், கடைசியில் பரிசு கிடைக்கவில்லை தோற்றுவிட்டாள்," என்றாள் பக்கத்திலிருந்த கேத்தி;


பளிச்சென்றிருந்த வின்னியின் முகம் உடனே வாடி சோர்ந்து போனது.


"என்ன இறுதி சுற்று வரை சென்றாளா?" குரலில் குதூகுலத்துடன் வியப்பையும் வரவழைத்துக்கொண்டேன். வரவழைத்துக்கொண்டேன் என்று சொல்லுவதுகூட சரியன்று உண்மையிலேயே எனக்கு ஆச்சரியமாக இருந்தது;
மேடையில் ஏறினாலே எனக்கு கைகால் மிகவும் உதறல் எடுக்கும். பரவாயில்லை இந்த சிறுமிக்கு நல்ல துணிவுதான். " மேடையில் ஏறி பேச முதலில் மேடை தைரியம், வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறன் எல்லாம் வேண்டும். அதிலும் சொற்களம் போன்ற தொடர் பேச்சுப்போட்டியில் நீ இறுதி சுற்று வரை வந்துள்ளாய் நீ பெரிய திறமைசாலிதான் வின்னி; இந்த சிறு வயதில் மூன்று சுற்றுக்களில் வென்றிருக்கிறாய்," என்றேன்.


"ஊம், என்ன செய்வது எல்லாம் என் விதி, உங்களைப் போன்ற அம்மா எனக்கு கிடைத்திருக்கக்கூடாதா; நான் தோற்றுவிட்டு வந்தவுடன் என் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா? எனக்கு தெரியும் நீ சொற்கள பயிற்சி வகுப்புக்குச் சென்றதெல்லாம் வீண்வேலை; முதலில் இந்த வெட்டித்தனத்தை நிறுத்து, படிப்பை ஒழுங்காகப் படி என்றார்கள்," என்று கூறி நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அழத்துவங்கினாள்.


பதினாஙன்கு வயது சிறுமி பேசுவதை கேட்டு நான் முதலில் அதிர்ந்து போனாலும் என் மனம் அந்தக்குழந்தைகாக வருந்தியது நிசம். தோற்றதற்காக அல்ல அந்த தோல்வியில் குழந்தைக்கு தோள் கொடுக்க பெற்றோர் தவறாலாமா? என்றாலும் நான் நினைத்ததை நான் உடனே சொல்லவில்லை;


சில வினாடிகள் கழித்து நான், "வின்னி, நீ, நான் பரிசு வாங்காத ஏமாற்றத்தில்தான் அம்மா திட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டு நீ சற்று நேரம் வேறு வேலையில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பாயே," என்று மென்மையாக கேட்டேன்.


வின்னி தலையை குனிந்துகொண்டாள்; "இல்லை ஆண்ட்டி, நான் அறைக்கதவை அறைந்து சார்த்திவிட்டு கோபத்தில் கத்திக்கொண்டிருந்தேன்; அப்புறம் என்ன அடிக்கடி சண்டை வருகிறது, இது இல்லை என்றால் வேறு எதாவது ஒரு விஷயம்".


"ஊருக்குத் தான் உபதேசம், நான் பல் விளக்காமல் காபி குடித்ததற்கு என் அப்பா என்னை கன்னத்தில் அறைந்தார். அவர்கள் புகை பிடிக்கிறார். இது தவறில்லையா; இப்போது நான் புகைபிடிக்கிறேன் என் அப்பாவால் எதுவும் செய்ய இயலாது"- இது ரீகா


"ஒருநாள் சினிமாக் கதையை இவளுடன் பேசிக்கொண்டே இருந்ததில் வீட்டிற்கு நேரம் கழித்துப் போனேன்; நான் ஆனமட்டிலும் கெஞ்சியும் என் அம்மா நம்பவில்லை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா நான் ஆண் சினேகிதனுடன் சுற்றிவிட்டு பொய் சொல்கிறேனாம் ; இதோ அது ஒன்றுதான் இனி பாக்கி," -செல்வியின் கண்ணில் கண்ணீர்.


மாறி மாறி அந்த குழந்தைகள் தங்கள் குமுறல்களை கொட்டக் கொட்ட நான் அதிர்ந்து போனேன். பால்வடியும் இந்த முகங்களுக்குள் இத்தனை போராட்டமா?


"ஆண்ட்டி எங்களையெல்லாம் கெட்டகாரியம் செய்யும் பெண்கள் என்றுதானே நினைக்கிறீர்கள் உண்மையைச் சொல்லுங்கள்".


நான் என் முகத்தில் புன்சிரிப்பை தவழவிட்டேன்; "உண்மையைச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும்".
"நீங்கள் எல்லோரும் டீசண்டான குழந்தைகள்; புத்திசாலிகள், குறிப்பாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள்," என்றவாறு மெதுவாக நிறுத்தினேன்.


அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மட்டுமின்றி ஒரு கெஞ்சுவதுபோல் பார்வை, பாருங்கள் மூன்றாம் மனிதரான நீங்கள்கூட எங்களைத் தவறாக எடைபோடவில்லை என்பது போல்,...


; இந்தகக் கதையை கேட்கும் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைகளின் கண்களில் புத்தொளியைப் பார்த்தேன். " உங்கள் சாதனைக்காக காத்திருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமல்ல குழந்தைகளே,...."நீங்களா ஆண்ட்டி?" -அதே துடுக்குக்காரியின் குறும்பு விடவில்லை
"ஆமாம் பின்னர் இல்லையா? நீங்கள் என் நண்பர்கள் அல்லவா; என்னை விட இன்னும் பெரியது;" "வேறு யார் ஆண்ட்டி, எங்களுக்காக காத்திருப்பது?"


"தோழிகளே சிங்கப்பூர் நாடுதான் அது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்; உங்களைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள இளையர்கள் கையில்தானே நாம் நாளைய சிங்கப்பூர் இருக்கிறது,"


"நான் என்ன செய்துவிட முடியும் ஆண்ட்டி?"


"சொற்களஞ்சியம் என்ற சக்கர வியூகத்தூள் நுழைந்த வின்னி நாள் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆவாள்.பூப்பந்தை பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேத்தி அதில் தனிக்கவனம் செலுத்தினால் நாடு ஒரு பூப்பந்து தாரகையைப் பெறலாம், மேலும் பூப்பந்து பயிற்றுவிப்பாளராகலாம், இதோ இடையிடையே நகைச்சுவையோடு கேள்வி கேட்கும் அனிதா பத்திரிகை நிருபராகவோ ஆசிரியராகவோ வரலாம். ரீகா மருத்துவராகலாம், செல்வி ஓவியராகலாம் கணிப்பொறியில் கேலிசித்திரங்கள் வடிவமைத்து சிறந்த கலைப்படம் உருவாக்கி விருது வாங்கலாம், பாட்டில் ஆர்வமுள்ள ரீகானா காராவோக்கே முறையில் வீட்டிலேயே இன்னும் பயிற்சிசெய்து பாடகி ஆகலாம், சமையலில் ஆர்வமுள்ள பர்வீன் சிறந்த சமையல் கலை வல்லுனராகி பல புத்தகங்கள் எழுதலாம்,"


அவர்கள் என் மதிப்பீட்டைக் கேட்டு வியந்து போய் பேச்சடைந்து போய்விட்டார்கள்.


"தனித்திறமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் இருக்கும். உங்களது தனித்திறமைகள் உங்களுக்கு தெரிந்திருப்பது உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுகிறது. அதை வளருங்கள். படிப்பு என்பது அடித்தளம்; அது உங்களுக்கு தேவையான பாதையைத் தேர்ந்தெடுக்க உங்களுக்கு வழிகாட்டும்.


இதோ நான் பார்க்கத்தான் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு சாதனையாளர் இருக்கிறார். அது நமது நாட்டுக்குத் தேவை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள், அவர்களுக்கும் பல தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சரித்திரம் படியுங்கள் சரித்திரம் படைப்பீர்கள் இது நிச்சயம். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. எந்த இடர் வந்தாலும் அறிவையும் மனதை கலந்து ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும்.


"நாங்கள் சாதாரண மாணவிகள் ஆண்ட்டி, நாங்கள் பாடங்களில் தொண்ணூறு நூறு எல்லாம் வாங்கியதில்லை; எழுபது , சில சமயம் ஐம்பது "-இது செல்வி


சாதனை மாணவி அல்லது மாணவன் என்று யாரும் பிறப்பதில்லை குழந்தைகளே; சாதாரண மாணவிதான் சாதனை மாணவி ஆகிறாள்; என்னால் முடியும், எங்களால் முடியும், நம்மால் முடியும் என்று நம்புங்கள்; உங்களால் எதுவும் முடியும். மாணவர் சக்தி மகத்தான சக்தி.
நாட்டுக்கு உங்களைப்போன்ற துடிப்பான இளம் கைகள் தேவை தெரியுமா. ஒரு நல்ல நட்பு வட்டத்துள் இருக்கிறீர்கள்; உங்கள் திறமைகளை வளருங்கள். வருங்கால சிங்கப்பூருக்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்,".
"கட்டாயம் ஆண்ட்டி நான் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம். என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்த அந்த மலர்கூட்டத்தில் நானும் கண்கலங்கிப் போனேன்.


ஆண்ட்டி வீட்டில் தினசரி சண்டை வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வருகிறது, அதற்கு நாங்கள் என்ன செய்வது?"


நிமிர்ந்து பார்க்கிறேன் வாஸ்தவமானக் கேள்விதான்.இந்தக் குழந்தைகள் என்னிடம் கொட்டிய தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை மனதினுள் நினைவு கூர்ந்தேன்.


"உங்கள் அம்மாவும் அப்பாவும் உழைப்பது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான், வேலைப் பளு காரணமாக அவர்கள் எதாவது கோபத்தில் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பெற்றோரிடம் உங்கள் அன்பை அடிக்கடி தெரிவியுங்கள். உங்கள் அம்மா அப்பாவிற்கு எதாவது ஆபத்து என்றால் எப்படி துடித்துப்போவீர்கள்?"


"சரியாக சொல்கிறீர்கள், ஆண்ட்டி, என் அம்மாவிற்கு சென்ற ஆண்டு ஒரு சிறு அறுவைச்சிகிச்சை நடந்தபோது நாந்தான் பொறுப்பாக வீட்டில் இருந்து தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மா வீடு திரும்பியவுடன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்- இது கேத்தி


"உன் அம்மா உங்க வீட்டிற்குத் தானே இரவு ஷிப்பைடை ஏற்றுக்கொண்டு அயராது உழைக்கிறார்.உன் தந்தை இரண்டு இடங்களில் பணிபுரிவதாகச் சொன்னாய் ரீகா; உங்களுக்கு கைச்செலவுக்குக் கூட பணம் கொடுக்கப்படுகிறது. அதை புகைப்பதற்கு பயன் படுத்துவதா, அல்லது நல்ல வழியில் செலவழிப்பதா என்பது உங்கள் கையில் உள்ளது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்.


"ஆண்ட்டி, இனி நாங்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்பட போகிறோம்" என்று என்னிடம் உறுதி கூறியது மட்டுமல்லாமல் அடுத்து சில நாட்கள் கழித்து அவர்களை நான் பூங்காவில் சந்தித்த போது ஓடி வந்து தங்களது சிறு சிறு முன்னேற்றங்களைக் கூட தெவித்தார்கள்.

வளமான விதைகள் வளமான விருட்சங்களைத் தரும் என்பது உண்மை ஆண்ட்டி; சரித்திரம் படைப்போம்; சாதனை புரிவோம் " என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறிய போது அவர்கள் கண்களிலும் அந்த உறுதியைக் கண்டு மனம் பூரித்தேன்.


தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன். என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தபோது ஆரம்பித்தவள்- எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது.இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன்.

தமிழ் முரசு-நவம்பர்2005