Thursday, August 31, 2006

ஔவை- யார்

சரித்திரத்தின் முதல் ஔவை
சங்ககால ஔவை மூவேந்தரும்
பெரியராய்க் கருதிப் போற்றிட
புறம்அகம் நற்றிணை குறுந்தொகை
அரிய பாடல்களால் சங்கத்தில்
அங்கம் வகித்த பாடினி
தெரிமுகமும் தேவையோ கிமுவில்
தோன்றிய தென்ற லுக்கு


தாமம் தரித்த ஆயுதங்களை
தாமத்துடன் நிறுத்தி வைத்து
யாமே என்று இருமாப்புடன்
எண்ணி இருந்தான் தொண்டைமான்


தொண்டைமானின் செருக்கை அங்கதத்தால்
துண்டாக்கியவர் மழவரின் தூதரானார்
அண்டத்தில் இணக்கம் உண்டானால்
அகிலத்தில் அமைதிஉரு வாகுமென்ற
திண்ணமுடன் பேச்சு தெவிட்டாத
தமிழ்ப்பாட்டு அவர்தம் மூச்சு
வண்ணம் கொண்ட அரியகனி
வெகுமதிக்கு அதியனின் வெகுமதி


வம்பிற்கு வாய்ப்பூட்டினாய்- உன்னை
நம்பியோருக்கும் நல்ல வாய்ப்பு ஊட்டினாய்
நலமறிய நீ நினைத்ததில்லை
மக்களின்நலம் அறியவே நடையாய் நடந்தாய்



நன்னிலை நல்கிய பன்னிரெண்டாம்
நூற்றாண்டின் நலமிகு ஔவையே
மன்னுலகில் யோகத்தில் நிபுணை
மறைதிரு சமயகால ஔவை
பின்னையவள் துதிபாடி அற்புதமாய்
பொன்முடிப்பு இற்றதன் மாயமென்ன
மன்னவன்வியக் கநான்குகோடிபண் பாடிஇரவு
முழுதும் பண்பழகிய பண்பழகி


ஒருகாலில் நாலிலைப்பந் தலடிஎன
உன்னைச் சோதிக்க புதிர்போட
திருமுகம் மலர ஆண்கவியிடம்
சருக்காமல் ஆரையடா சொன்னாய்
சுருக்கமாய் விடுகவிக்கு விடைகூறி
சங்கைத் தீர்த்த அன்பருளே
அருந்தமிழில் அசதிக் கோவையும்
அழகுபந்தன் அந்தாதியும் தந்திட்டாய்


வரும் இன்னலைத்
தீர்க்கவந்தமின்னலே

அன்பருளே


அன்பர் உளே உறையும்

இறைவன் ஒருவனுக்கே
தலைவணங்கி நீ பாடிய
அகவலால்சேரமானுக்கு முன்பே
வேழமுகத்தோனின் ஒருகையால்
கைலாயத்தைமுதலில்
அடைந்ததத்துவஞானியே



தமிழ்பால் கொண்டமுனைப்பால் தன்பால் அன்பால் கட்டுண்டமானிடர்பால் கொண்டதவிப்பால் உருவானமுப்பால் தன்பால் வீட்டுநெறிப்பால் திருவருட்பால் என ஞானப்பால் அருளியஔவைக்குறளைப் படித்தால் புருவங்கள்உயரும் திகைப்பால் யோகத்தின்பால் பெண்களின்அறிவைக் கண்ட களிப்பால் வந்த வியப்பால்





ஒருவனையே வணங்கி
இருவகை அறத்தையே உரைத்து
முக்குற்றம் நீங்க வழி நடத்தி
நானிலம் போற்றஐந்திலக்கணம் அமைய கவிபாடி
அறுவர் உடன் பிறந்த ஐயயே
எழுபிறப்பையும் பாடியுள்ளாய்
எண்வகை யோகங்களை ஏற்றிவைத்தாய்
நவரசம் பொங்க நற்றமிழில் பாடி
பத்துகுற்றம் நீக்கி
பத்தழகு மிளிர பாட்டெழுதி
நூற்றுக்கு ஒருவரேஅவையில் இருக்கத்தக்கவர்
ஆயிரத்தில் ஒருவரேபுலமையுடையவர்
பத்தாயிரத்தில் ஒருவரே வாக்குவன்மையும்பெற்றிருப்பவர் கொடைவள்ளலோகோடியில் ஒருவரே என்று

கம்பரையும்
புகழேந்தியையும்
ஒட்டக்கூத்தரையும்
செயங்கொண்டாரையும்
மன்னரையும்
வைத்துக்கொண்டே
உன்னைத் தவிர வேறு யாரால் கூற இயலும்?



பதியனாய்ப்பிள்ளைகள் மனதில்பதிந்தவர்பதினாறாம் நூற்றாண்டின்புதிய ஔவை


நாவாய்போல் நயமிகு பாக்களைக் நன்றாய்க் கரைசேர்த்தே மக்களிடம்நாவாயை ஆளவும் வேண்டினாய்



தையல் சொல் கேளேல்
தையல் சொல் கேட்காதே என்று தாங்கள்கூறவில்லை
கேள் ஏல் என்றீர்கள்ஏல் என்றால் ஏற்றுக்கொள்வதுஎன்ற நீங்கள் சொல்லியதைநாங்கள் புரிந்துகொள்கிறோம்

வித்தை நன்றாய்விதைத்திட்டால்
வித்தை பலவும்கற்றிடலாம் என்றேஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி என்று நல்வழிகாட்டியநாயகியே


ஆழ அமுக்கி முகக்கினும்
ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி
என்று நீங்கள் கூறியதை
நாங்கள் உலகுக்குஅறிவிக்காததால்
இன்று இதே இயற்பியல்தத்துவத்தை
பின்னாளில்
வேறொருவர் கண்டுபிடித்ததாகப்
படித்துக்கொண்டு வருகிறோம்


ஔவையேஎங்களைமன்னித்துவிடுக
நீ குறித்ததசம எண்களையும்நாங்கள் விட்டுவிட்டோம்வேறொருவருக்குவிட்டுவிட்டோம்

இருக்கையைத் தேடாமல்இருகைவீசிநடைபயின்றாய்
உடலையும்
உள்ளத்தையும்
ஊரையும் காக்க
உன் கருத்துக்களைக்
காதுகொடுத்துகேட்டாலே போதும்


கேளுங்கள் எப்போதும்.

ஔவைஎன்றபெயரில்ஒவ்வொரு காலகட்டத்திலும்எத்துணைஔவையர்
அத்தனைஔவையருக்கும்

மொத்தமாய்வணக்கங்கள்

வெண்பா

கரணம் துணங்கை கழல்நிலை பாவை
குரவை உவகை கபாலம்- கருங்கூத்தாம்
ஈர்த்திடும் கூத்துக்கள் ஏற்றம் அடைந்திடச்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு

அமுதசுரபி 2006

Monday, August 28, 2006

பலி - நாடகம்

திரை விலகுகிறது

இடம்: பேரரசி கைகேயி பெண்கள் கலாசாலை

பொழுது: பகல் பொழுது.

பாத்திரங்கள்:

பேரரசி கைகேயி, கலாசாலை தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழுவினர்.

காட்சி ஒன்று


கலாசாலையின் நடவடிக்கைகள் முழுதும் ஆராய்ந்து முடித்து திருப்தியுறுகிறாள் கைகேயி.

கைகேயி: "பெண்களுக்கு வாள், வேல்பயிற்சி, தேரோட்டுதல் முதலிய வீர கலைகளை கற்பிக்கும் இக்கலைகோவிலுக்கு பெயரில் மட்டும் மாற்றம் தேவை; இராமன் என்று மாற்றி விடுங்கள்"


மேலாண்மைக் குழுவினர்: "அப்படியே செய்கிறோம் தாயே"

கைகேயி: "நல்லது, மான்யங்கள் தொடர்ந்து வரும்"

கம்பீரத்துடன் தன் ரதத்தில் ஏறி புறப்படுகிறாள் கேகயன் தனயை.


காட்சி இரண்டு

இடம்: அரண்மனை அந்தப்புரம்

பொழுது : பிற்பகல்பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை

கைகேயியின் அந்தபுரத்தில் அந்தரங்க அறை வாயிலில் மந்தரை நின்றுகொண்டிருக்கிறாள்.

அந்தபுர வாயிலில் தயாராக காத்துக்கொண்டிருந்த சாரதியிடன் ரதத்தை ஒப்படைத்துவிட்டு கைகேயி வருகிறாள்.


கைகேயி: "இப்படியே எத்தனை நேரமாக நின்று கொண்டிருக்கிறாய்; அப்படி என்ன தலை போகிற செய்தி, உன் உடம்பை ஏன் வருத்திக்கொள்கிறாய் மந்தரை?'



மந்தரை: {பதட்டத்துடன்} "தலை போகிற செய்திதான் கண்ணே"


அந்தரங்க அறைக் கதவு சார்த்தப்படுகிறது.கைகேயியும் மந்தரையும் தனிமையில் இருக்கிறார்கள்.
பொன்னாலாகிய அழகிய இரு பதுமைகள் விளக்கு ஏந்தியவாறு நிற்க, மந்திரை உதவியுடன் விளக்குகளை ஏற்றிவிட்டு, வேலைப்பாடுகள் மிகுந்த அழகிய இருக்கையில் அமர்கிறாள்.


கைகேயி: "இப்போது சொல் மந்திரை"

மந்தரை: "கண்மணி, இராமனுக்கு நாளை பட்டாபிஷேகமாம்"

கைகேயி: "மந்தரை என்ன உளறுகிறாய்?"

மந்தரை: "உண்மைதான் மகளே, திடீரென்று இன்று மதியம் அரசவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது"

கைகேயி: "தசரத சக்ரவர்த்தி என்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த புதிய அரசாங்க காரியம் நடந்ததில்லையே"

மந்தரை: "கடந்த ஒரு மாதகாலமாக உன்னிடம், மன்னனிடன் சொல்லிவிடு என்று நச்சரித்து கொண்டே இருந்தேன்; உடனே அவசர ஆலோசனை செய்து இந்த வைபவத்தை நிறுத்து".


கைகேயி: "இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது என்பதற்காகத்தானே நல்லதோர் சந்தர்ப்பத்தில் மன்னரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன், மந்தரை;"


மந்தரை: "சரயூ நதிக்கரை சோதிடர் கூறிய செய்திகளை மீண்டும் நினைவு கூரவா மகளே?"


கைகேயி: "வேண்டாம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குழந்தை இராமனின் ஜாதகம் மிக அற்புதமானது; தெய்வீகமுடையது. சித்திரை மாதம் நவமி திதி, புனர்வஸ¤ நட்சத்திரம். சூரியன், குரு, சுக்ரன், அங்காரகன், சனீஸ்வரன் என்று ஐந்து கிரகங்கள் உச்சம் கடகத்தில் சந்திரன் சுவட்சேத்திரம். ஒரு கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறந்தவன் எல்லா ஆபத்துகளையும் அழிக்கிறான்; இரண்டு கிரகம் உச்சத்தில் பிறந்தவன் சிற்றரசன்; மூன்று கிரகம் உச்சத்தில் பிறந்தவன் அரசன்; ஐந்து கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறப்பது அபூர்வம். சக்ரவர்த்திகளுக்குகெல்லாம் மேற்பட்டவன்; உலகநாயகன்; உலகிலேயே முதன்மையானவன்; அனைவரது அன்பையும் பெற்றவன், பொறுமைசாலி, தேவர்களும் போற்றும் இயல்பினன், அரிய பெரிய சாதனைகள் படைக்க அவதரித்தவன்,......."..



மந்தரை: "எல்லாமே உண்மை; இதையே எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் திகட்டாது மகளே; ஆனால் இறுதியில் அவர் விடுத்த எச்சரிக்கை?"




கைகேயி: "ஆம், மந்தரை இப்போது அயோத்தி மாநகரத்திற்கு நேரம் சரியில்லை; அயோத்தியின் அரசருக்கு உயிருக்கு ஆபத்து; அதை இறைவன் அருளால் வென்றாலும் இன்னும் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் மன்னராக இருப்பவர் யாராக இருந்தாலும் துறவியாகத் தான் இருப்பார்; என் மனதுக்கினிய மன்னரை லௌகீகபாதையிலிருந்து திருப்பி நம் ஜனக மன்னரைப் போல் ராஜரிஷியாக மாற்றவேண்டும். விதியை மதியால் வென்று விடலாம் என்று நினைத்தேனே"



மந்தரை: "இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை எப்படியாவது இந்த வைபவத்தை நிறுத்த வேண்டும்".




கைகேயி பதில் கூறாது தன் அறையில் வரிசையாக ஓவியரால் வரையப்பட்ட இராமனின் சிறுவயது லீலைகள், சாதனைகள் ஓவியமாக வரையப்பட்டிருந்ததைக் கண்களால் பருகினாள் ; அடுத்து தானே வரைந்த ஓவியச் சுருளை ரகசியப் பேழையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்
இதோ ஸ்ரீராமன் பட்டாபிஷேக கோலத்தில். அருமை மகள் ஜானகியுடன்; அவளே எழுதியது;



கைகேயி: "என் கனவு நனவாக இன்னும் பல ருதுக்கள் உள்ளன மந்தரா"

கைகேயியை பரிவுடன் ஏறிட்டாள் மந்தரை.



கைகேயி: "மந்தரா நான் சிறிது நேரம் த்யானம் செய்கிறேன்; நீ இங்கேயே இரு".



கைகேயி அந்தரங்க அறையின் மறுபக்கத்தில் மறைவாக சென்று அமர்கிறாள்.



மந்தரைக்கு இருப்பு கொள்ளவில்லை; அங்குமிங்கும் நடக்கிறாள்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்:


" மன்னர் மேல் அளவு கடந்த அன்பு இந்த கைகேயிக்கு; குடும்ப வாழ்வோ, குழந்தை வளர்ப்போ, ஆன்மீகமோ, தேச பரிபாலனமோ, அரசியல் சதுரங்கமோ போரில் வீரமோ கைகேயிக்கு நிகரில்லை. தலைசிறந்து விளங்கும் இந்த குழந்தைக்கு எதையும் தாங்கும் இருதயத்தையும் நீண்ட ஆயுளையும் நீ தரவேண்டும், இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக்கொள்கிறாள்.
"இந்தச் சிறுவன் இராமனுக்கு பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. சரயூ நதிக்கரை சோதிடர், ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அயோத்தியின் அரசராக இருப்பவருக்கு பெரிய கண்டம் இருக்கிறது. ஒரு துறவிதான் பதினான்கு வருடங்கள் அயோத்தியை ஆளப்போகிறார். இராமன் இப்பூவுலகையே ஆளுவான். அதில் எந்த வித ஐயமில்லை ஆனால் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கடவுளே யார் அந்தத் துறவி? வசிஷ்டரா? அவர் எந்த அரசாங்க காரியத்திலும் தலையிடுவதில்லையே; ஒரு வேளை சுமந்திரரா? இல்லை திடீரென்று விஸ்வாமித்திரர் ராமனையும் இலட்சுமணனையும் காட்டுக்கு என்னுடன் அனுப்பு என்று சிறு குழந்தைகளை கூட்டிச் சென்றது போல், வேறு ஏதேனும் துறவி தீடீரென்று
எனக்கு உன் ராஜ்ஜியத்தைத் தா நான்தான் இனி அயோத்தியின் அரசன் என்று தானம் கேட்பார்களோ.சரி, இந்த அரசருக்கு அரண்மனை ஜோதிடரோ, இல்லை அடிக்கடி ஆசீர்வதிக்கும் எல்லாம் அறிந்த துறவிகளோ ஏதும் சொல்லமாட்டார்களா? விதி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டதா? தலை சுற்றியது மந்தரைக்கு.



கைகேயி தெளிவுடன் வந்து தன் இருக்கையில் அமர்கிறாள். மந்தரை ஒரு காலை ஒருக்களித்தவாறு தன் கம்பளி ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறாள்.


கைகேயி: "மந்தரை, சம்பாசுர யுத்தத்தில் நான் செய்திட்ட உதவிக்கு மன்னர் எனக்கு இரு வரங்களை அளித்தார். நினைவிருக்கிறதா?



மந்தரை: "இருக்கிறது தாயே ஆனால் நீதானே எனக்கு எந்த குறையுமில்லை; அதனால் வரங்கள் இப்போது தேவையில்லை என்று கூறிவிட்டாயே".


கைகேயி: "ஆம் மந்தரை; இப்போது என் மகன் இராமனைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நான் அந்த வரங்களை அளிக்குமாறு மன்னரிடம் வேண்டப்போகிறேன்;
"ஒன்று- எனக்கு முடிசூட்டி நான் பேரரசியாக்கிவிடவேண்டும். அப்போது அரசருக்கு உயிர்பலி என்பதால் நான் ஜோதிடர் கூற்றுப்படி இறந்துவிடுவேன்.இரண்டு- ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும். ஆரண்யத்தில் அரசனாகவும் இருப்பான். தசரதரும் அவரின் உயிருக்கு உயிரான மனைவியாக நான் இறந்துவிடுவதால் மனதளவில் துறவறம் பூண்டு விடுவார். இராமன் வரும்வரை அவரே ஆளட்டும். என்ன சொல்கிறாய் மந்தரை?".



மந்தரை: "இரண்டாவது வரம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் உன் முதல் வரத்தால் நீயே மன்னரின் உயிருக்கு உலை வைத்துவிடுவாய்; உனக்கோ இராமனுக்கோ உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் உயிரைத் துறப்பார் மன்னர்; நாட்டில் குழப்பம் ஏற்படும். இராமனுக்கு உடனே முடிசூட்டிவிடுவார்கள். அவன் துறவு வாழ்க்கை வாழ்வான். இது சரி வராது வரத்தை மாற்று ; நீ பேரரசியாக ஆனாலும் பின்விளவுகளை நீ எதிர்பார்த்தபடி நடக்காது".




கைகேயி: "சரி அப்போது இப்படி வைத்துக்கொள்கிறேன்; பரதன் நாட்டை ஆள வேண்டும்; இராமன் காட்டிற்கு போக வேண்டும்".



ஆசனத்திலிருந்து மந்தரை திடுக்கிட்டு எழுந்துகொள்கிறாள்.


மந்தரை: "கைகேயி, உனக்கென்ன பைத்தியமா. பரதனின் உயிரை பணயம் வைக்கிறாயே"


கைகேயி: "ஆம் பைத்தியம்தான் மந்தரை; என் மூத்த மகன் இராமன் தீர்காயுளோடு இருக்கவேண்டும். அவனது பிறப்பின் குறிக்கோளை வருங்காலத்தில் நிறைவேற்ற வேண்டும். பூவுலகில் அநீதி பெருகி அழிந்துவிடாதிருக்க என்றால் என் இளைய மகனை பலி கொடுக்கத்தான் வேண்டும்"


.
மந்தரை: "கைகேயி! அப்பாவி பரதன் உயிரை பணயம் வைக்கிறாயே உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?. பெற்ற மகனை பாழும் கிணற்றில் தள்ளுகிறாய்"



கைகேயி: "பெற்ற மகனைக் காட்டிலும் எனக்கு உற்ற மகன் இராமன் என்பதை உலகே அறியும் மந்திரை".


மந்தரை: "தெரியுமடி என் கண்ணே".


கைகேயி: "இதுதான் சரியான முடிவு மந்திரை இல்லையென்றால் இராமன் காட்டுக்கு போனால் அடுத்து இருப்பவரின் மூத்தவன், இலக்குவன், அவனே முடிசூடத்தகுந்தவன் என்ற வந்துவிடக்கூடாது; அந்தக்குழந்தையும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்".


மந்தரை: "நீ இராமனுக்காக உயிரையும் கொடுப்பாய் என்று நான் அறிவேன் ; ஆனால் உன் உயிரினும் மேலான உன் குழந்தையின் உயிரையும் பறித்துக்கொடுப்பாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை; அயோத்திக்கு உன்னுடன் வந்ததுமுதல் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன் புத்திர பாசத்தை எந்த எல்லையைத் தொடும் என்பதை இன்று அறிகிறேன்".



கைகேயி: "மந்தரை நேர அவகாசம் குறைவாக இருக்கிறது; விரைவில் அரசரை இங்கு வரவழைத்து வரங்களைக் கேட்டுவிடவேண்டும்".



மந்தரை: "கைகேயி உலகில் எந்தத் தாயும் செய்யத் துணியாத தியாகத்தை செய்யப்போகிறாய். ஆனால் உன்னை வளர்த்த அன்னை என்ற முறையில் சொல்கிறேன். உன் தியாகத்தை உலகம் மெச்சாது".





கைகேயி: "மெச்ச வேண்டாம்"


மந்தரை: "உன்னைத் தூற்றும்"


கைகேயி: "தூற்றட்டும்".


மந்தரை: "சான்று கூற சரயூநதிக்கரை ஜோதிடர் இல்லை; பின் விளைவுகளை எண்ணி நதியில் சங்கமமாகி விட்டார்".


கைகேயி: "சாட்சி தேவையில்லை"


மந்தரை: "நானே போய் ஜோதிடர் கூற்றை மன்னரிடம் உன்னை மீறிச் சொல்லிவிட்டால்?"


கைகேயி: "என் மணாளர் உடனே உயிர் துறப்பார்".


மந்தரை: "சுயநலத்துடன் உன் புதல்வனை அரசனாக்கினாய்; சாமர்த்தியமாக வரங்களை தக்க சமயத்தில் பயன்படுத்தினாய் என்று உலகம் பழி சுமத்தும்".


கைகேயி: "பழிசொல்லட்டும்; மந்தரை: "நீ இதுவரை இராமன் இராமன் என்று கொட்டிய பாசம் பொய் என்று உன் தாய்ப்பாசத்திற்கு மாசு கற்பிக்கும்".


கைகேயி: "கற்பிக்கட்டுமே; நான் அஞ்சா நெஞ்சத்தினள் மந்தரை; முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்".


மந்தரை: "கணவனின் அன்பை தவறாகப் பயன் படுத்தினாள் என்றும், கணவனுக்கு இவள் சதி செய்தாலும் செய்வாள் என்று சொல்லும் ".


கைகேயி: "சொல்லட்டுமே;


மந்தரை: "பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் அரசனானபிறகும் கூட இந்த உலகம் உன் தியாகத்தை அறியாது தூற்றுவதை நிறுத்தாது".


கைகேயி: "நிறுத்தவேண்டாம்; என் ஆயுள் முழுக்க அத்தனை தூற்றுமொழிகளையும் கேட்கத் தயாராக உள்ளேன்".


மந்தரை கண்களில் கண்ணீர் பெருகுகிறது; துடைத்துக்கொள்கிறாள்.


கைகேயி: "வைரநெஞ்சம் கொண்ட நீயா அழுகிறாய் மந்தரை?"


மந்தரை: "நீதான் தீரநெஞ்சுடையவள் கண்ணே; அதுதான் துணிவுடன் முடிவுகள் எடுக்கிறாய்""இந்த யுகமட்டுமல்ல கைகேயி, அடுத்துவரும் துவாபர யுகம், கலியுகம் எல்லாம் உன்னைக் கொடியவள், சூனியக்காரி, பாபி என்று சொல்லும். சின்னக்குழந்தைக்கூட உன்னைப் பொல்லாதவள் என்று சொல்லும்".



கைகேயி: " என் மீது கொண்ட அன்பு ஒன்றன் காரணமாகவே நீ சூனியக்காரி, பழிகாரி என்ற பட்டம் சுமக்கப்போகிறேயே".


மந்தரை: "கையேயி"


கைகேயி: "ஆமாம் என் அருமைத் தாயே நீ என்னைக் காண அவசரமாக வந்ததையும் நாம் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டதையும் வெளியே காத்திருக்கும் சேடியர், காவல் மகளிர் அனைவரும் அறிவார். நீ தவறாகச் சொல்லிக்கொடுத்துதான் நான் மதிகெட்டுப் போனேன் என்ற பழியும் உன்னை வந்து அடையப் போகிறது;



மந்தரை: "எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்னைப் பொருத்தவரை நீ நினைத்தது நடக்கவேண்டும். நான் சற்று வெடுக்வெடுக் என்று பேசுவதால் என்னுடன் யாரும் அதிகம் வைத்துக்கொள்ளமாட்டார்கள்".


கைகேயி: "மந்தரா, இன்னொன்று, குழந்தைகள் விளையாடும்போது தெரியாமல் உண்டைகள் பட்டால் நீ இரு இரு உன்னை வேட்டு வைக்கிறேன் என்று மிரட்டுவாயே".



மந்தரை: "சீச்சீ அது சும்மா ஒரு மிரட்டு போடுவேனே தவிர, என் மனதில் வேறு எந்த எண்ணமும் கிடையாது உனக்குத்தான் என் சுபாவம் தெரியுமே கைகேயி".


கைகேயி: "அதையெல்லாம் மக்கள் வருங்காலத்தில் நினைவுகூர்ந்து நீ சதி செய்து விட்டாய் என்ற பழி ஏற்படுத்துவார்கள்".


மந்தரை: "நீ இராமனுக்காக பழி சுமக்கப் போகிறாய்; நான் உனக்காக சுமந்துவிட்டுப் போகிறேன்".


கைகேயி அவசரமாக ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதன் பேழையில் வைத்து அரக்கால் மூடியை இறுக்க மூடி மந்திரையிடம் கொடுக்கிறாள்.



கைகேயி: "மந்தரை இந்த ஓலையை உடனே சேவகரிடம் கொடுத்து மன்னரிடம் சேர்ப்பிக்கச் சொல்லு அவரை இங்கு வரச்சொல்லி எழுதியிருக்கிறேன்".



மந்தரை வணங்கி விடைபெறுகிறாள்.


கைகேயி தனக்குள் பேசிக்கொள்கிறாள்:



" சிறுவயதில் ராமன் விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு தம்பியுடன்
போனபோது கூட நான் கலங்கவில்லை; என் மகன் வீரவித்தைகளை கற்கப்போகிறான் என்று பெருமிதத்துடன் இருந்தேன். ஆனால் அது சிலகாலம்தான். அதன் பிறகு நான் இராமனை விட்டு பிரிந்ததேயில்லை. அம்மா அம்மா என்று ஒரு நாளைக்கு பத்து முறை ஓடி வந்து விடுவான். என் குழந்தை காட்டில் பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டுமே. பதினான்கு ஆண்டுகள் ஆண்டுகள் மரவுரி தரித்து காய்கனி உண்ணப்போகிறான். குழந்தைக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி இருக்கிறது. புது மனைவியுடன் சொர்க்கபுரியான அயோத்தியில் உல்லாசமாய் வாழ முடியாதே. நான் என் கண்மணியை எப்படி பதினாங்கு ஆண்டுகள் பார்க்காமல் இருப்பேன். என் குழந்தையை ஆரண்யத்திற்குப் போகப் போகிறான்; எனக்கு எதற்கு வைரக் குண்டலங்கள், பொன் அணிகள், ரத்தின ஆரங்கள். வீசி எறிகிறாள். பின்னிய கூந்தலில் சூரிய சந்திர பில்லைகள். கூந்தலை அவிழ்க்கிறாள். பட்டாலான ஆடையை கழற்றி பருத்தி ஆடை அணிகிறாள்.


"கண்மணி என் அருமைச் செல்வமே" என்று மஞ்சத்தில் விழுந்து அழுகிறாள்.


{திரை விழுகிறது}