Thursday, October 06, 2005

விழிப்பு

-மாதங்கி

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் பயணிகள் வந்திறங்கும் தளத்தில் உள்ள வெயிட்டிங் லவுஞ்சில் அமர்ந்திருந்தவாறே மேலே இருந்த தட்டைத் திரை தொலைகாட்சிப்பெட்டியில் சென்னையிலிருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை ஏழரைக்கு குறித்த நேரத்தில் வந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட பின், பரவாயில்லை, இன்னும் அரை மணி இருக்கிறது என்று தனக்குள் சொல்லிக்கொண்டார் பாலகுருநாதன்.
ஸ்வென்சனில் குளிர்ந்த பால் குடித்து விட்டு பூக்கொத்துக் கடையில் ஹாலந்திலிருந்து தருவிக்கப்பட்ட டூலிப் மலர்க்கொத்தை வாங்கிக்கொண்டார்; அருமைத்தங்கை நீருவும் குட்டி நீருவும் வருகிறார்களே; நீரு கல்யாணமான புதிதில் ஒருமுறை கைலாஷ¥டன் வந்தாள். குட்டி நீரு வருவது முதல்முறை.
இந்த சாங்கி விமான நிலையத்திற்கும் அவர் வாழ்க்கைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளதாகவே நம்பினார். வருடத்தில் எத்தனை முறை தான் இங்கிருந்து இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், சீனா, ஜப்பான், மற்று விடுமுறை ஆண்டுக்கு ஒரு முறை இந்தியா என்று இதனுடன் பிணைத்துக்கொண்ட வாழ்வு இன்னும் தொடர்ந்து வருகிறது.
முதன்முதலாக அவர் கையில் மிகசொற்பமான டாலரோடு ஆனால் நெஞ்சு நிறைந்த தன்னம்பிக்கையுடனும் சீரான பழக்க வழக்கங்களுடனும் இளம் இஞ்சினியராக இதே விமான நிலையத்தில் பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வந்திறங்கியதை நினைத்துக்கொண்டார்.
இன்று சாங்கி விமான நிலையம் டர்மினல் ஒன்று, இரண்டு என்று பிரம்மாண்டமாக விரிவடைந்து, மூன்றாவதை நோக்கி வெற்றிநடை போடுகிறது- அதே சீரான ஒழுங்கு முறை மற்றும் தரக்கட்டுப்பாட்டுடன்.
நல்ல ஒற்றுமைதான், தனக்குள் சொல்லிக்கொண்டார். கடுமையான உழைப்பு, பகுதி நேர மேல் படிப்புக்கள், அவரை இன்று பொருளாதாரத்தில் உச்சாணிக்கொம்பில் உயர்த்திவிட்டது. தலைசிறந்த அமெரிக்க கம்பெனிகளுக்கு, கண்ட் ரோல் ஸிஸ்டம்ஸ் தயாரிக்கும் நிறுவனத்தில் இன்று அவரே மிக இளைய வைஸ் ப்ரெசிடெண்ட். காப்பி, தேநீர், புகை, மது, அசைவ உணவு என்று எந்தப் பழக்கமும் இன்றி அன்று போலவே இன்றும் மாறாமல் தாம் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்டார். ஆரம்பகாலத்தில் சிறிது கேலி கிண்டல் முதலியவற்றை அவர் சந்தித்தது உண்மைதான் என்றாலும் நாட்பட எல்லோரது நன்மதிப்பையும் பெற்றதுநிஜம்.
"இன்னோரு பெரிய ஒற்றுமை, அதை முதலில் சேர்த்துக்கோங்க, சாங்கியும் ராத்திரி முழுக்க பகல் போல இருக்கும், உங்களுக்கும் ராத்திரி என்பதே கிடையாதே" என்று ரேவதி சொல்லி வருத்தத்துடன் சிரிப்பதை எண்ணிக்கொண்டே வெவ்வேறு விமானங்களில் தூக்ககலக்கத்துடன் இறங்கி வரும் பயணிகளிடையே குழந்தைகள் முகம் மட்டும், எந்த ஒப்பனையும்மின்றி பூத்த பூ போல இருப்பதை எண்ணி நூறாவது முறையாக ஆச்சரியப்பட்டார். பெரிய பதவியும் பொறுப்பும் வந்த பிறகு இரவு படுத்தவுடன் தூக்கம் என்பது அவருக்கு எட்டாத கனவாகியது. படிப்படியாக அவர் பதவி உயர்வு பெற்று, இன்று கிட்டத்தட்ட ஐம்பது ப்ராஜக்ட் மானேஜர்கள் வெவ்வேறு நாட்டைச் சார்ந்த நிறுவனங்களுக்குத் கண்ட் ரோல் சிஸ்டம்ஸ் செய்து தர, ஒவ்வொரு ப்ராஜக்ட்டின் லாப நஷ்ட கணக்குகள், மற்றும் பொறியியல் சோதனைகள் அனைத்திற்கும் இவரே பொறுப்பு. ஒவ்வொரு ப்ராஜக்ட் மேனேஜருகும் அவர்கள் கீழே திறமைவாய்ந்த பொறியிலலாளர்கள் இருந்தாலும் அவர்கள் இந்திய, சீன மலாய், பிலிப்பைன்ஸ், ஐரோப்பியர், ஐப்பானியர் மற்றும் ஆப்பரிக்கர் என்று பல மத, இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கையில், பொறியியல் அறிவோடு நிர்வாகத்திறமையும் மிகச் சிறப்பாக இருந்தால் தான் நிறுவனத்தை போட்டிக்கம்பெனிகளைவிட சிறப்பாக கொண்டுவர இயலும்.
கைத்தொலைப்பேசி கிணுகிணுக்க, முதலில் ரேவதி- வெல்கம் பார்ட்டிக்கு குட்டி நீருவிற்கு எல்லாம் தயார் நிலையில் உள்ளது தெரிவிக்கப்பட்டது. அடுத்து பரி என்ற பரிமேலழகன், சென்னையில் இருவரும் ஒரே கல்லூரி; இவர் இயந்திரவியல் பரி மின்னணுபொறியியல் வெவ்வேறு நிறுவனம் ஆனாலும் இன்னும் அதே கல்லூரி இளமையைக் கட்டிக்காக்கும் தோழன்.
"பாலா , உனக்கு ஒரு குட் குட்மார்னிங் நியூஸ், உன் தூக்க ப்ராபளம் தீர்ந்தது,.." "கமான் பரி, பி சீரியஸ், ஒரு பெக் போடு, தாய்மசாஜ்ஜுக்குப் போன்னு எல்லாம் கடிக்காதே;"
" பாலா, அடுத்த வாரம் நேராக டோக்கியோ போ, ஜப்பான்காரன் கடை திறக்கப்போறான், அரை மணியில தூங்க வைக்கறாங்களாம், ஜஸ்ட் நாற்பத்தேழாயிரம் சிங்கப்பூர் டாலர் "
"வரவர ரொம்ப கிண்டல் பண்ற பரி" பேசிக்கொண்டே வரவேற்குமிடத்தில் தயாராக நின்று கொண்டார்.
"கமான் பாலா சுத்த சந்நியாசி ட்ரீட்மெண்ட், படுக்கை நெட்டுகுத்தா இருக்குமாம், காட்டுல ஆறு ஓடுறதை பெரிய டிவீல காட்டுவானாம்; அப்படியே ரூம் வெளிச்சம் மெல்லக்குறையுமாம், டிவியும் அணையுமாம், ஆறுமட்டும் ஓடுற சத்தத்தை நிறுத்த மாட்டானாம், படுக்கையும் மெல்ல சாஞ்சுகிட்டே, முதுகெலும்ப மசாஜ் பண்ணுமாம்; எட்டு மணிநேரம் இரவுத் தூக்கம் விற்பனைக்கு ;காபி ஷாப் மாதிரி தூக்க ஷாப் எப்படி; செமமூளைடா"
"தூக்கம் கூட விற்பனைக்கு வரும் நிலைமை. கிரியேடிவ் இன்வென்ஷன் என்று கூறிக்கொண்டு பேச்சை சுருக்கமாக முடித்துக்கொண்டு மறுநாள் தொடருவதாக கூறி முடித்துக்கொண்டார். சிறிது நேரம் கழித்து ட் ராலியில் சாமானுடன் நீரு தள்ள, குட்டி நீரு ஒரு முயல் குட்டி போல துள்ளி வருவதை பார்த்து அவர் மனமும் துள்ளியது.
செல்லத் தங்கை நீரு கல்யாணமாகி பத்துவருடம் ஆகியும் குழந்தைக்காக பர்டிலிடி ட் ரீட்மெண்ட் ஒரு பக்கம் , சகல தெய்வங்களுக்கு மனமுருகி பிரார்த்தனை ஒரு பக்கம், என்று எல்லாம் போராடிகொண்டிருக்கையில் திடீரென்று அவருக்கு அவளிடமிருந்து கச்சிதமாக ஒரு இ மெயில் வந்தது, "அண்ணா, பத்துநாள் பெண்குழந்தையை தத்து எடுத்துகொண்டிருக்கிறேன் நம் அம்மா பெயரையும் என் மாமியார் பெயரையும் இணைத்து ஸ்வர்ணபூரணி என்று பெயரிட்டிருக்கிறோம்; உன் ஆசீர்வாதம் தேவை, என்றவுடன் ஏகப்பட்ட பரிசுகளுடன் குடும்பத்துடன் குழந்தையைப் பார்த்துவிட்டு வந்தார், அதிலும் அவர் மகன் காஷ்யப், ஸ்வர்ணா என்றால் கோல்ட் இந்த பேபியும் நம்வீட்டு கோல்டன் ட் ரெஷர் என்றபோது எல்லோர் கண்களும் பனித்தது. இப்போது காஷ்யப் இங்கில்லை, ஆஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கிறான். அத்தையும் ஸ்வர்ணாவும் வரும்போது தான் அங்கு இல்லை என்பதில் அவனுக்கு மிகவும் கோபம்; என்ன கோபத்தை வழக்கம் போல் படிப்பதில் தீவிரம் காட்டில் ஏ ஸ்டார் வாங்குவது அவன் வழக்கம். இந்த செமஸ்டர் பரிட்சை முடியும் தருவாயில் இருப்பதால் அடுத்தவாரம் விடுமுறையில் வருவதாகக் கூறியுள்ளான்.
தொலைபேசியில் அடிக்கடி பேசுவதிலும், கணிணியில் வீடியோ கான்பரன்ஸ் முறையில் பார்ப்பதாலும் குழந்தை அவரிடம் தாவி வந்தது. தயாராக வைத்திருந்த மலர்க்கொத்தையும் சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற லிண்ட் இனிப்புப் பெட்டியையும் அவர்கள் கையில் தந்து பரஸ்பர விசாரிப்புக்கு பின், தான் முன்யோசனையுடன் வாங்கி வைத்திருந்த கார் சீட்டரில் குழந்தையை உட்கார்த்தி பெல்ட் கட்டினார். நீருதான் சற்று காது வலி என்று காதை பிடித்துக்கொண்டிருந்தாள் தங்கையையும் அமரச் செய்து சாமான்களை பின்புறம் வைத்து விட்டு தானும் பெல்ட் அணிந்து கவனமாக கிளப்பிய கார் நகரை நோக்கி வழுக்கிக்கொண்டு சென்றது.
காபி ஷாப், 24 மணி நேரமும் இயங்கும் மினிமார்ட், டென்னிஸ் கோர்ட், நீச்சல்குளம், ஜிம், கன்வென்ஷன் ஹால், ஸ்பேஸ் ஆப்சர்வேட்டரி, ஸ்பா, கச்சிதமான ஆனால் பாதுகாப்பான நவீன திறந்த குழந்தைகள் விளையாட்டுக் கூடம் என்று சகல வசதிகளும் கூடிய காண்டோமினியத்துள் நுழைந்து அவர்கள் அபார்ட்மெண்டை அடைந்தபோது ரேவதியின் திட்டப்படி, பொம்மை, பலூன், என்று ஒரு குட்டி வரவேற்பு பார்ட்டி நடந்தது.
அண்ணா, அண்ணிக்காக தான் ஆசையுடன் செய்து மற்று வாங்கி வந்த பொருட்களைக் கொடுத்து வணங்கி ஆசிர்வாதம் பெற்றாள் நீரஜா. அதன் பின் குழந்தையை குளிப்பாட்டுவது, அவள் குளிப்பது, எல்லோரும் உணவு உண்பது என்று அவர்களுக்கும், புதிய இடம் புது சூழ்நிலை புது பொம்மைகள் என்று குழந்தை ஸ்வர்ணாவும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்க எல்லாரும் செந்தோசாவிற்கு கேபில் காரில் போய் வந்தார்கள். இரவு சைவ உணவகமான மெட்ராஸ் வுட்லாண்ட்ஸ் கங்காவில் இண்டர்காண்ட்டினட்டல் பூபே சாப்பிட்டார்கள்.
மதியம் சற்று நேரம் ஸ்வர்ணா அயர்ந்து தூங்கிவிட்டதால் இரவு வீட்டுக்கு வந்தபிறகுகூட குழந்தை நல்ல உற்சாகத்துடன் இருந்தாள். விழித்திருக்கும் நேரத்தில் வாய் ஒரு நிமிடம் கூட சும்மா இருக்காது; அப்படி ஒரு துறுதுறுப்பான பேச்சு. ஏன் எப்படி என்று ஏகப்பட்ட கேள்விகள். சிறு குழந்தைதானே என்று எண்ணாமல், மெழுகு அருங்காட்சியகம், டால்பின் லாகூன், ஆழ்கடல் உலகம், பட்டுப்பூச்சி உலகம், மெர்லையன் என்று ஒவ்வொரு இடத்தையும் பொறுமையுடன் விவரித்தார்கள்.
பாலா மாமா, பாலா மாமா, ரேவதி மாமி என்று நொடிக்கொரு முறை அழைத்து பாசத்துடன் ஒட்டிக்கொண்டாள் குழந்தை ஸ்வர்ணபூரணி.
"இன்னிக்கு நான் தூங்கினாப்பலதான்" என்று நீரு பிரயாண அலுப்புடன் கூற, பாலகுருநாதன் உற்சாகமடைந்தார்.
"நீரு, இன்னிக்கு நீ ரொம்ப களைப்பா இருக்கே, நீ தூங்கு, மத்த இடங்களையெல்லாம் நீயும் ரேவதியும் உங்கள் சௌகரியப்படி பார்த்துக்கொள்ளுங்கள். ஸ்வர்ணாவை நான் தூங்கவைக்கப் பார்க்கிறேன்." என்றார்
"அண்ணா உங்களுக்கு நாளை அலுவலகம் இருக்கு, ஏற்கனவே தூக்கம் வராமல் கஷ்டப்படறீங்க"
"அதுக்கென்னம்மா பண்ணறது, மூலிகைமணி, ஹெல்த் எக்ஸ்ப்ரஸ் லேந்து யாஹ¥, கூகில் (google) ன்னு நெட்டுலயும் வலைவீசித் தேடி ஓரளவு எல்லாம் பண்ணிப்பாத்தாச்சு, உடற்பயிற்சி, சரியான உணவு எல்லாம் கடைபிடிக்கிறேன்; இரண்டு மூன்று மணியானும் ஆகணும்; பேசாம நீங்க இரண்டு பேரும் இங்க தூங்குங்க நான் குழந்தைய பாத்துக்கறேன் என்றவாறு அவர் ஆசையுடன் கூப்பிட்டவுடன் ஓடி வந்த குழந்தையை தூக்கிக்கொண்டு, பல் தேய்த்துவிட்டு, பாத்ரூம் அழைத்துப்போய், இரவு உடை போட்டு, பால் குடிக்க வைத்து தங்கள் படுக்கையில் குழந்தையின் படுக்கையை விரித்து தலையணை போட்டு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.
"ம் கதை சொல்லுங்க மாமா" என்று அவர் கழுத்தைக் கட்டிக்கொண்டு கொஞ்சியது.அவரும் காக்கா கதை என்று ஆரம்பிக்க, கஜேந்திர மோட்சம், நோவாஸ் ஆர்க், குரான் கதைகள் எல்லாம் எனக்குத் தெரியுமே என்று அசத்திக்கொண்டே போக என்ன கதை சொல்வது என்றே அவருக்குத் தெரியவில்லை; புராணக் கதைகள், பல சமயங்களைச் சார்ந்த பெரியவர்களின் கதைகள், புதுமைக் கதைகள் என்று எல்லாமே ஓரளவுக்கு அதற்குத் தெரிந்திருக்க பாலகுருநாதன் திணறிப் போனார்."தெரியாத கதை தான் வேணும்" என்று செல்லம் கொஞ்சியது.கண்களை உருட்டி மிரட்டியது.என்ன சொல்லலாம் சட்டென்று யோசித்தார்;
தொழில் நிர்வாகத்தில் முதுகலைப்பட்டம் பெற்று பின் அவரது நிறுவனதிலேயே அவரது இயந்திர இயல் துறை பணியைத் தவிர சில சமயங்களில் நிர்வாக வகுப்புகளும் எடுப்பார். நிர்வாக வகுப்புகளின் சுவாரசியத்திற்காகவும் எளிமையாக புரியவைப்பதற்காகவும் குட்டிகுட்டி கதைகள் சொல்லுவார். எனக்கே சவாலா. அதிலிருந்து சிலதை எடுத்துவிட்டு அசத்தலாம் என்றவாறு முதல் கதையைத் துவங்கினார்.
"ஊஹ¥ம் நீங்களும் என்னோடு என்னை பாத்துகிட்டே படுத்துக்கணும் ; பிஞ்சுக்கை அவரை இழுத்தது.
"ப்ரான்சு நாட்டில் ஒரு குட்டிப்பையன் இருந்தானாம்; அவனுக்கு ரெயின்போ ஐஸ்காண்டி தின்ன ஆசையாக இருந்ததாம். அவனிடம் கொஞ்சம் ரூபாய் இருந்ததாம்,..""தப்பு தப்பு மாமாவுக்கு ஒண்ணுமே தெரியலே, ப்ரான்சுல ப்ராங்குதான் சொல்லணும்;" அவர் தலைமுடியை கையால் ஆட்டி தோளில் தட்டி குதூகலித்தது.அவருக்கு பெருமை தாங்கவில்லை ,வாயாற குழந்தையை மெச்சிவிட்டு, "ஆமாம் ப்ராங்குதானே, அப்புறம்,அவன் ஒரு காண்டி கடைக்குப் போனானாம். ஒரு டேபிளில் உட்கார்ந்தவுடன் மெனு கார்டை வெயிட் ரஸ் கொண்டு வந்தாளாம். ரொம்ப அழகான கலர்படம் போட்ட ரெயின்போ காண்டி ஒன்றரை ப்ராங்க் என்று இருந்ததாம். சாதாரண காண்டி ஒரு ப்ராங்க் என்று போட்டிருந்ததாம்"வெயிட் ரஸ் " வாட் வுட் யூ லைக் ஸர் என்று கேட்டாளாம்"
அவள் சட்டை ரொம்ப பழையதாக இருந்ததாம்
ஐயோ பாவம் மாமா நாம எதாவது வாங்கித் தரலாமா"
கேளு கதையை; குட்டிப்பையன் தன் சட்டைப்பையிலிருந்த காசுகளை என்ணிப்பார்த்தானாம்ஒன்றரை ப்ராங்க் இருந்ததாம் உடனே ஒரு ப்ராங்க் சாதாரண காண்டியை ஆர்டர் செய்து வெயிரஸ் கொண்டு வந்தவுடன் அதை சாப்பிட்டுவிட்டு அரை ப்ராங்கை டிப்ஸாக வைத்துவிட்டு எழுந்தானாம்,.."
"குட் பாய், குட் பாய்" என்று கத்தியபடி படுக்கையிலிருந்து உற்சாகத்துடன் குதித்தெழுந்து கைகளைத் தட்டியது குழந்தை.
"படு, படு கதை முடிஞ்சுபோச்சு""மாமா, மாமா, ப்ளீஸ், ப்ளீஸ் கதை சொல்லுங்கோ சமத்தா தூங்கறேன்," மீண்டும் படுத்துக்கொண்டது.சரி என்று வெற்றிப்புன்னகையுடன்," ஒரு ஊரில் ஒரு வியாபாரி செறுப்பு விக்க ஒரு தீவுக்கு போனாராம் என்று ஆரம்பிக்க குழந்தை" இது வேண்டாம் இன்னிக்கு ரெயின்போ ஐஸ்கிரீம் கதைதான் திருப்பித் திருப்பி வேணும் குழந்தை கட்டளையிட்டது.பாலாவும் சரியென்று மீண்டும் அதை ஆரம்பித்தார். முடிந்தவுடன் மீண்டும் அதையே சொல்லு என்று ஆணையிட்டது. சரியென்றார்; தொடர்ந்தார். இப்படியே போய்க்கொண்டிருந்தது.
நீருவுடன் அவள் அறையில் பேசியவாறே படுத்துத் தூங்கிவிட்ட ரேவதிக்கு சிறிது நேரம் கழித்து தூக்கம் கலைந்தது. மணி பதினொன்றுதான். ஏஸி குளிர்ச்சியில் தொண்டை வரள தண்ணீர் குடிக்க சமையலறைக்கு வந்த போது மாஸ்டர் பெட் ரூமில் ஏதோ சத்தம் கேட்கவும், கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.
குழந்தை ஸ்வர்ணபூரணி இரவு விளக்கு வெளிச்சத்தில் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு மாமாவின் செல்போனை ஹலோ கிட்டி பொம்மைகள் முதலியவற்றை தலையணை மீது வைத்து ஏதோ பேசிக்கொண்டு தானாகவே விளையாடிக்கொண்டிருந்தாள்.
பாலகுருநாதன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.

oooOOOooo

தமிழ் முரசு/ திண்ணை

2 comments:

அன்பு said...

வணக்கம்.
முதலில் ஏதோ சிங்கப்பூர், சாங்கின்னுலாம் வருதேன்னு வாசிக்க ஆரம்பித்தேன். அப்புறம்தான் உங்க பெயர் இங்கு சிங்கையில் ஏற்கனவே கேள்விப்பட்டதுபோல் ஒரு நினைவு - நீங்கள் ஓரிரு வருடங்களுக்கு முன் (சிங்கை) 'தமிழ்முரசு'ல் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவீங்கதானே... புகைப்படத்துடன் பார்த்த/படித்த ஞாபகம். அது நீங்களா இல்லையா என்று தெரியவில்லை.

வருக, வணக்கம்.

மாதங்கி said...

Vanakkam. Thankyou very much .

You are right.