Wednesday, April 02, 2008

இந்த வியாழன் -நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்

நன்றி, கமலாவின் மூலத்தைக் கண்டுபிடித்து அறிவித்த ஆயில்யன், சொல்லையும், சொல்லை பொருளோடு இணைத்தும் ஆய்வு செய்து ஆர்வம் காட்டிய ஜோதிபாரதி, சூரி, ரசித்த வைகை, கீதா.


நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்

'நாம்' என்ற தமிழ்க் காலாண்டிதழ் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில் மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

நான் என்பது தனிமை, நாம் என்பதே பெருமை என்று தலையங்கத்தின் இறுதியில் ஆசிரியர் குழுவினர் எழுதியுள்ளனர்.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகங்கள், நேர்காணல் (புதிய மாதவியின் பளிச் பதில்களுடன்) சில கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளுடனும், அழகான அட்டைப்படத்துடன் இதழைப் பார்த்தேன். (பார்க்க - வார்ப்பு இணையதளம்)

நாமுடன் கைகோர்த்து நம்பிக்கை தந்த படைப்பாளிகள் மும்பை, சிங்கப்பூர், துபாய், உப்பிலிக்குடி, கீழப்பெரும்மலை, புதுப்பட்டி, சிவகங்கை, காளாப்பூர், சென்னை, நெம்மக்கோட்டை, குஜராத், கல்பூண்டி, பெங்களூர், செங்குணம் மற்று புலிக்கண்மாய் என்று பல ஊர்களில் இருக்கிறார்கள்.

நீங்களும் உங்கள் படைப்புகளை யூனிகோட் வழியாக அனுப்ப
naaamagazine@gmail.com

நாமிலிருந்து இரண்டு கவிதைகள்

தோன்றி மறைகிறதென்றாலும்
மறக்கமுடியாத
வானவில்லின் வண்ணங்களைப்போல்
ஒவ்வொரு நாளும்
எனக்காக காத்திருந்து
சென்ற இடங்களிலெல்லாம்
உனது வாசனையை உணர்ந்தேன்
எதிர்பாராமல் நிகழ்ந்ததைவிட
நிகழ்விலிருந்தகாட்சிகள்
ஒவ்வொன்றும்
எனக்குள் ஆழமாக இறங்கிவிட்டன
அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம்
நானாக இல்லாமல் நீயாகிறேன்
தேய்ந்துவிடாமல் என்னை விட்டு
அகலமறுத்து
கைரேகையாய் இணைந்திருக்கும்
அந்தக் கணத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
தீர்ந்துகொண்டிருக்கிறேன்
ஒளித்து வைக்கமுடியாத
அந்த நிமிடங்கள்
தூக்கத்தையும் கலைத்த நிலையில்
மீண்டும் மலர்ந்துகொண்டேயிருக்கிறது
புதிய மலர்களாய்
-
சுகுணா பாஸ்கர்


2. அம்மா
நம் வறுமைதான்
உன்னை பிழைக்கவைத்தது
இல்லையெனில்
மம்மியாகியிருப்பாய்-

கோட்டை பிரபு


A father's instructions for life (to his son) , 42 (அறிவுரைகள்) படிக்கக்கிடைத்தது.

ஆண்டுக்கொருமுறையாவது சூரிய உதயத்தைப்பார், வாழ்க்கையை வியாபாரம் ஆக்காதே, மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு walkout பண்ணாதே, கண்களைப்பார்த்து பேசு, அனைவரையும் சமமாக மதி, சிரித்தமுகத்துடன் இரு, ஏமாற்றாதே, தவறை ஒத்துக்கொள், கோபத்தில் முடிவெடுக்காதே வகைகள் ஏராளம், ஏராளம்,

42 ஆவது அறிவுரை phone your mother என்று முடிகிறது

மகனுக்கு கொடுத்த அறிவுரைகள் மகள்களுக்கும் பொருந்தும்.


மகள்கள் எனும்போது பாரிமகளிர் நினைவுக்கு வருகின்றனர்.

பாரிமகள்கள் என்று சொல்கிறோமா இல்லையே, பாரிமகளிர்தான். பேருந்தைத் தவிர வேறு எங்கும் மகளிர் என்ற பதத்தைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.


சரி இந்த மகனும், மகளும் தத்தம் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் வாழ தமிழிலக்கியத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தபோது கண்ணில் பட்டது.


தலைமக்கட்காகாத குணங்கள் ( தலைவனுக்கும் தலைவிக்கும்)


நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழிவன்சொல் பொச்சாப்பு மடிமையடு குடிமைஇன்புறல் எழைமை மறப்போ டொப்புமைஎன்றிவை இன்மை என்மனார் புலவர்


- தொல்காப்பியம்


நிம்பிரி என்றால் பொறாமை

கொடுமை என்பது பிறருக்கு கேடு செய்தல்

வியப்பு- தன்னையே தான் வியந்து பெருமைப்படுதல்

புறமொழி- புறங்கூறுதல்

வன்சொல்- கடுமையான சொல்

பொச்சாப்பு- தம்மைத்தம் நிலையில் வைத்துக்கொள்ளாமல் சோர்வுபடுதல், மறதியும் கூட - depression என்று சொல்லலாமா?

மடிமை- முயற்சியின்றி இருத்தல்

குடிமை இன்புறல் - தன் குலத்தினாலும், தன்குடிப்பிறப்பினாலும் தன்னை உயர்வாக மதித்து இன்புறுதல்

ஏழைமை- நுண்ணறிவில்லாத பேதைமை நிலை

மறப்பு- கற்றது, கேட்டது , பயின்றது ஆகியவற்றை மறத்தல்

ஒப்புமை- பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார்கள் , இணையை (spouse) comparison செய்யாமல் இருப்பது


பள்ளிக்கூடத்தில் காதில் விழுந்த ஆங்கில உரையாடலின் ஒரு பகுதி


ஒன்றாம் வகுப்பு


சிறுவன் 1 : ஏன் இன்னைக்கு சயின்ஸ் மாஸ்டர் வரல

சிறுவன் 2 : ஸிக்காம் , வேறு எதுவும் யாரும் சொல்லல

சிறுவன் 1 : ஆப்பரேஷனா இருக்கலாம், சிறுவன்2: முதல்ல எக்ஸ்ரே எடுக்கணும், எடுத்துகிட்டாரோ என்னவோ

சிறுவன் 1 : அப்புறம் ஸ்கான், பண்ணுவாங்க, ஜெல்லி தடவி, மானிட்டரில் போட்டுகாட்டுவாங்க


ஒரு குட்டிக்கதை

ட் ராபிக் ஜாம்


"லேட்டானாலும் பரவாயில்லை இந்த ஹைவே எடுக்கணுமா ட்ராப்பிக்கைப் பார்த்தால் பயமாயிருக்கு"


"அம்மா, அம்மா இன்னும் வேகமா போங்க; பாருங்க நமக்கு பிறகு கிளம்பிய வண்டி தாண்டி இப்ப எங்கயோ போயாச்சு, அனிக்குட்டி கார்சீட் பெல்ட்டுடனே குதித்தாள்".


"அப்படியோ இப்ப நான் யார் சொல்லுவதைக் கேட்கறது? அப்பாவா பெண்ணா?" புன்னகையுடன் கேட்டாள்.


"போங்கம்மா அப்பா இந்த ரூட்ல ஓட்டவே மாட்டாங்க அதான் பயப்படறாங்க"


"அப்பாதான் இன்னிக்கு வின்னர்; கியரை மாற்றி காரை ஐந்நூறு மீட்டர் உயரத்திலிருந்து தரையில் இறக்கி ஓட்டினாள்.


இந்த வாக்கியத்தைப் படித்துப்பாருங்கள்:


கோ·பி அன்னன் தமது பயணத்தை ஒருநாள் நீடித்தார்
இதில் பிழை இருக்கிறதாம். என்ன பிழை/பிழைகள்?





3 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//42 ஆவது அறிவுரை phone your mother என்று முடிகிறது//

கவனத்தில் கொள்ளவேண்டிய அறிவுரை.

//கோ·பி அன்னன் தமது பயணத்தை ஒருநாள் நீடித்தார்
இதில் பிழை இருக்கிறதாம். என்ன பிழை/பிழைகள்?//

கோ.பி அன்னான்

இவர் முன்னால் ஐ.நா தலைமைச் செயலாளர்

(புள்ளிக்குப் பதில் ஆயுத எழுத்து வரும். எனக்கு போட இயலவில்லை. புள்ளியை ஆயுதமாக எடுத்துக் கொள்ளுங்கள்)

அன்புடன்,
ஜோதிபாரதி.

பாண்டித்துரை said...

"நாம்" இதழ் பற்றி விரிவான செய்தியை உங்களின் வலைப்பக்கத்தில் இட்டது குறித்து மகிழ்ச்சி

"நாம்" நண்பர்களின் சார்பாக
பாண்டித்துரை

Bee'morgan said...

பயணத்தை நீட்டித்தார் என்று வரவேண்டுமோ?