Friday, March 10, 2006

ஈவ் டீசிங்கிற்கு தீர்வு உண்டா?- சிறுகதை

வண்டியில் சென்றுகொண்டிருந்த பெண் ஈவ் டீசிங்கிற்கு பலியான செய்தியை நாளிதழில் படித்தபோது சிறு வயதில் படித்த Little Red Riding Hood என்ற கதை நினைவுக்கு வந்தது.

கதையில் ஓநாய் சிறுமியையும் பாட்டியையும் விழுங்கிவிடும்; பின் ஒரு வேடன் ஓநாய் வயிற்றைக்கிழித்து அவர்களை பத்திரமாக வெளியே எடுப்பான். இங்கு,......

சிவப்புத் தொப்பிக்குட்டி


முல்லைவனம் ஒரு அழகிய ஊர். அங்கு சிந்தாமணி என்ற சிறுமி தன் தாயுடன் வசித்து வந்தாள்.

அவள் எந்த வண்ண உடை அணிந்தாலும் சிவப்பு நிறத் தொப்பி ஒன்றை எப்போதும் அணிந்து கொண்டிருப்பாள். அது அவள் பாட்டி அவள் அம்மாவின் தாயார் வெளியூர் சுற்றுலா சென்றபோது அவளுக்காக வாங்கி வந்தது. அது வாங்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டாலும் அதை அவள் ஒரு போதும் அணியாமல் இருந்ததில்லை. அதனால் அவள் தாய் உட்பட பலரும் அவளை சிவப்புத் தொப்பிக்குட்டி என்று அழைப்பது வழக்கமாகி, அவள் நிஜப்பெயரான சிந்தாமணி எல்லோருக்கும் மறந்துவிட்டது.


ஒரு நாள் மாலை அவர்கள் வீட்டுத்தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் பின்னே ஓடியவாறு அவள் விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது அம்மா கூப்பிடுவதைக்கேட்டு வீட்டிற்குள் ஓடோடி வந்தாள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, உன் பாட்டிக்கு உடம்பு சரியில்லையாம். தெரிந்தவர் மூலம் கேள்விப்பட்டேன்".

"ஐயோ பாவம். என் பாட்டி தனியாக எப்படி கஷ்டப்படுகிறாரோ , நான் வேண்டுமானால் போய் ஏதேனும் உதவி செய்துவிட்டு வரட்டா அம்மா?"

"என் தங்கமே! உனக்குத்தான் எத்தனை நல்ல மனது. நம்மைவிட்டால் பாட்டிக்கு உதவி செய்ய வேறு யார் இருக்கிறார்கள். இதோ பாட்டிக்கு ஒரு சம்படத்தில் ரவைக்கஞ்சியும், சில பழங்களும் ஒரு கூடையில் போட்டுத் தருகிறேன். போய் கொடுத்துவிட்டு வருகிறாயா?"

"ஆகட்டும் அம்மா அப்படியே தோசைமாவு இருந்தால் அதையும் ஒரு டப்பாவில் போட்டுக் கொடுங்கள். நாளை பாட்டி சமையல் செய்ய வேண்டாம் பாருங்கள்"

"என் கண்ணே உனக்கு எத்தனை முன் யோசனை. ஆனால் எனக்கு ஒரு கவலை இருக்கிறது. நம் முல்லைவனத்துக் காட்டைக் கடந்து அல்லவா நீ போக வேண்டும். இப்போதே சாயங்கால வேளையாகிவிட்டது.. நீ சேலையூர் போய் பாட்டியிடம் கொடுத்துவிட்டு வர இரவாகி விடுமே".

"அதனால் என்னம்மா!" நான் என்ன நடந்தா போகப் போகிறேன்?. இது போன்ற வெளி வேலைகளுக்காகக் எனக்கு மிதிவண்டி வாங்கித் தந்திருக்கிறீகள்; அதில் மின்னலெனப் போய்வருவேன்."


"அதற்கில்லை. ஆனால் காட்டுவழிச் செல்லும் போது அந்தப் பொல்லாத ஓநாய் வந்தாலும் நீ திரும்பிப் பார்க்காதே. அது கூட எதுவும் பேசாதே. பாட்டி வீட்டுக்குப் போனோமா வந்தோமா என்று வந்துவிடு. ஆனால் வாலை ஆட்டினால் ஒட்ட நறுக்கிவிடு. அதற்குத் தானே தற்காப்புக்க்கலையைக் கற்றுக் கொள்ளவைத்திருக்கிறேன்."

அம்மா கொடுத்த உணவுப் பொருள்களோடு சிவப்புத் தொப்பிக்குட்டி பாட்டிக்குத் தான் செய்திருந்த ஒரு சிறு அவசர மணியடிக்கும் கருவி, ஒரு பொட்டலத்தில் மிளகாய்ப்பொடி மற்றும் சில சிறு பொருள்களையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

வரட்டும் அந்தப் பொல்லாத ஓநாய்; எப்போது பார்த்தாலும் தனியாக யாராவது இளம் பெண்கள் வந்தால், அவர்களை கலாட்டா செய்வதே அதற்கு வழக்கமாகிவிட்டது.
போன மாதம் வளர்மதி எப்படி அழுதாள். அதுமட்டுமா, அதற்கு முன்னால் இன்னும் எத்தனை பேருக்குத் தொல்லை கொடுத்திருக்கிறது. எத்தனை முறைதான் காவலரிடம் ஓடுவது;

இதன் கொட்டத்திற்கு முடிவு கட்டத்தான் அவள் ஒரு திட்டம் தயார் செய்திருக்கிறாளே, ஆனால் அதைப் பயன்படுத்த இன்னும் துறைத்தலைவரிடம் அனுமதி பெறவில்லை; அந்த ரகசியம் அவளுக்கும் அவள் அறிவியல் ஆசிரியைக்கும் மட்டுமே தெரிந்தது;

ஓநாய் மீது பொங்கி வந்த கோபத்துடன் தன் வண்டியை வேகமாக ஓட்டிய போதும் அவள் கோபம் தீரவில்லை.

போன முறை பள்ளி ஆராய்ச்சி சாலையிலிருந்து சேலையூர் நூலகத்திற்குச் செல்லும்போது இதே காட்டுப்பகுதியில் அவளைக் கடிக்க அந்த ஓநாய் வந்தது. அப்போது அவளைக் காப்பாற்றியது அவள் கற்ற கலை. ஆம் அவள் களறிப் பயட்டுத் தற்காப்புக்கலையைக் கற்றுக் கொண்டிருந்தாள்.

அவளிடமிருந்து சரியாக அடியும் உதயும் பெற்ற அந்த ஓநாய் வாயில் வந்த ரத்தத்தைத் துடைத்தவாறு நொண்டிக்கொண்டே அவளைத் திரும்பித் திரும்பிப்ப் பார்த்துக்கொண்டே ஓடியதை இப்போது நினைத்துப் பார்த்து ஹாஹாஹ்ஹா என்று பலமாகச் சிரித்தாள்.

காட்டுப் பகுதியில் நடந்துசென்ற வேறு சிலர் அவளைப் பார்த்துப் புன்னகைத்தார்கள்.

"சிவப்புத் தொப்பிக்குட்டி, என்ன இந்த நேரத்தில் கிளம்புகிறாய்? பாட்டி வீட்டுக்கா போகிறாய்?" அவள் வீட்டிற்குப் பின்புறம் வசித்து வந்த தாத்தா கேட்கவும்,

" ஆமாம் தாத்தா, சேலையூர் பாட்டிக்கு உடம்பு சரியில்லை; அம்மா கொடுத்திருக்கும் கஞ்சியை பாட்டியிடம் கொடுத்துவிட்டு வரப்போகிறேன். நாளைக்குப் பள்ளி இருக்கிறதே. நான் சடுதியில் போய்விட்டு வரவேண்டும்" என்றவாறு வேகமாக வண்டியை ஓட்டினாள்.

"ஓஹோ, போ போ கொடுத்துட்டு திரும்பி வருவே இல்லை. அப்போ நல்லா காடு இருண்டுவிடும்.; ஆட்களும் குறைந்துவிடும்; உன்னை என்ன செய்கிறேன் பாரு! என்னை என்ன அடி அடித்தாய்" பொருமியவாறு அந்தப் பெரிய ஆலமரத்தின் பின் ஒளிந்து கொண்டு முறைத்த அந்த இரு விழிகளை யாரும் கவனிக்கவில்லை.

காட்டைத் தாண்டி சேலையூர் பாட்டி வீடு வந்து சேர்ந்தாள். சோர்வுடன் படுக்கையில் இருந்த பாட்டியைக் கனிவுடன் விசாரித்து ஆதரவுடன் கஞ்சியைப் புகட்டினாள். வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.

"பாட்டி உங்களுக்கு ஏதேனும் புத்தகம் படித்துக் காட்டட்டுமா?"

"சிவப்புத் தொப்பிக்குட்டி, நீ இவ்வளவு செய்ய்ததே போதுமடா! நேரத்துடன் வீட்டுக்குப் போய்ச்சேர், அம்மா கவலையுடன் இருப்பாள் இல்லையா?" என்று அன்புடன் கூறி அவள் தலையைத் தடவி, " இரு ; நேற்று கடைத் தெருவில் பணியாரம் வாங்கினேன் ; அப்படியே இருக்கிறது. பையுடன் கூடையில் போடுகிறேன் என்றவாறு கூடையின் அடியில் இருந்த சிறு மிளகாய்ப்பொடிப் பொட்டலத்தை ஏதோ குப்பைக்காகிதம் என்று நினைத்துத் தூரப் போட்டுவிட்டு பணியாரப் பையை உள்ளே வைத்தார்.

சிவப்புத் தொப்பிக்குட்டியும் அதை கவனிக்கவில்லை; "சரி பாட்டி, நான் போய் வருகிறேன். அந்தக் கருவியை நான் சொல்லித் தந்தபடி பயன்படுத்துங்கள்; உங்களுக்கு , மிகவும் பயனுள்ளதாக இருக்கும்."

"ஆங்- சொல்ல மறந்துவிட்டேன் தொப்பிக்குட்டி. நேற்றுக் கடைத்தெருவில் உங்களூர் தீபனைப் பார்த்தேன். உன்னைப் பற்றி அவ்வளவு உயர்வாகச் சொன்னான். இந்த ஆண்டு அறிவியலில் ஆராய்ச்சியில், இளம் அறிவியலாளர் கார்மேகம் நினைவுப் பரிசு உனக்குத்தானாம்."

"அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள்; எனக்கென்னவோ சந்தேகமாக இருக்கிறது".

"நன்றாய் இருக்கிறது போ. கொக்குக்குத் தன் தலையில் வெண்ணெய் இருப்பது தனக்கே தெரியாதாம். உன்சிறு வயதிலிருந்தே உன் அம்மாவுக்கும் எனக்கும் உன்னைப் பற்றிய கனவுகள் பல. நீ பிறந்தது முதல் உன் ஒவ்வொரு வெற்றிக்கும் சந்தோஷப்படுவோம். ஏதேனும் தவறுகள் நேர்ந்தால் மனம் தளராமல் அதிலிருந்து என்ன பாடம் கற்றுக்கொண்டாய் என்று உன் அம்மா கேட்பாள். நீயும் சூட்டிகையுடன் இருக்கிறாய். நீ பெரிய பெரிய சாதனைகள் புரிவாய். நூறாண்டு வாழ்வாய்" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.

தொப்பிக்குட்டி உற்சாகத்துடன் , கவிஞர் மணிமேகலையின் ' புதியான கண்டுபிடிப்போம், பொங்கிவா தங்கமே" என்ற பாடலைப் பாடியவாறு காட்டில் நுழைந்தபோது நன்றாக இருட்டி விட்டிருந்தது. இரண்டு மூன்று பேர் நடந்துகொண்டிருந்தனர். வீட்டிற்குச் செல்ல காட்டிலேயே மூன்று பாதைகள் இருந்தன. ஊராட்சி ஒன்றியத்தின் விளக்குகள் ஆங்காங்கே கண்சிமிட்டின.

அம்மா இரவு உணவைத் தனியாகச் சாப்பிடமாட்டார்; அப்பா வேறு பணி காரணமாக வெளியூரில் இரண்டு திங்களாக இருக்கிறார். பேராசிரியர் கண்ணன் நம்பி, சென்ற தேர்வில் அவள் சிறந்து விளங்கியதற்காக அறிவியல் அதிசயங்கள் என்ற கட்டுரைத் தொகுப்பு நூலைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்; தன்னிடமே இருக்கும் என்றாலும் அதை உடனே படித்து முடித்துவிட வேண்டும் என்ற ஆர்வம் பொங்க அவள் வண்டி மிதிப்பதில் வேகம் காட்டியபோதுதான் அது நடந்தது.

" தொப் தொப் என்று யார் யாரோ குதிக்கும் ஒலி.. அவள் பாதையில் குறுக்கே குதித்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்டாள்".

'ஆ இதோ அந்த ஓநாய்-' அவளைப் பார்த்துக்க்கொண்டே நெருங்க, வேகத்தைக் கூட்டினாள். "ஹாஹ்ஹா" எக்காளச் சிரிப்பு இடப்புறமும் வலப்புறமும் கேட்க, அவளைச் சுற்றி ஒன்றல்ல, நான்கு ஓநாய்கள் நின்று கொண்டிருந்தன.

" ஏய் தொப்பிக்குட்டி, என்ன முழிக்கிறாய்? இதோ இவன் தற்காப்புக்கலையில் வல்லவன், அவன் வேகமாக ஓடுவதில் சிறந்தவன். இவன் எங்கள் நால்வருக்கும் உன்னைப் போலவே வண்டி கொண்டு வந்திருக்கிறான். எப்படி வசதி? ஓடுகிறாயா, இல்லை மிதிவண்டியில் ஏறிக்கொண்டு ஓட்டப்போகிறாயா? நாங்களும் உன்னைச் சுற்றி ஓட்டிக்கொண்டு வருகிறோம்". கெட்ட ஓநாய் மற்ற ஓநாய்களைக் காட்டியவாறு கொக்கரித்தது.

சின்னச் சிவப்புத் தொப்பிக்குட்டிக்கு வியர்த்துக் கொட்டியது. இது அவள் ஓரளவு எதிர்பார்த்ததுதான். ஆனால் இவ்வளவு விரைவில் அல்ல. கள்ள ஓநாய்கள் வண்டியில் ஏறிக்கொண்டு மெல்ல அவளைச் சுற்¨த் துவங்கின.
தொப்பிக்குட்டி, வண்டியிலிருந்து இறங்கவில்லை; "ஓநாயே நீயும் உன் நண்பர்களும் மிகுந்த அறிவாளிகள்; உங்கள் வீரதீர பராக்கிரமத்தை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்" என்று பேசியவாறு, தன் வண்டியில் கைக்கருகில் இருந்த ஒரு விசையை அழுத்த அடுத்த வினாடி, அந்த வண்டி புதிய உந்து சக்தி பெற்று பூமியிலிருந்து உயரத் துவங்கியது.

என்ன ஏது என்று ஓநாய்க் கூட்டம் புரிந்து கொள்ளும் முன் சிவப்புத் தொப்பிக்குட்டி இருபது அடி உயரத்திற்கு வண்ண்டியுடன் மேலே போனாள்.

" முட்டாள் ஓநாய்களே! இந்த விசைப்பொறி பெண்கள் மட்டுமே இயக்கக்கூடியது.. வேறு யாரும் விசையை இயக்கினால் மேலே பறந்து காற்றில் ஓடாது. பெண்களுக்கு மட்டுமே உள்ள எஸ்டரோஜன் ஒரு அணு அளவு இருந்தால் மேலே உடனே பறந்துவிடும்படி வடிவமைத்திருக்கிறேன்" என்று சொல்லியவாறு கார்ற்ரில் முல்லைவனம் நோக்கி ஓட்டினாள்.

மஞ்சரி 2006

No comments: