Thursday, January 03, 2008

ஒரு உடனடி கதை

அம்மாவுக்கு காது கேட்கவில்லை


கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை;

தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.

என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது.

அம்மா தைரியசாலி, கடும் உழைப்பாளி.
காது கேட்பது குறைந்து வருவதுதான் எனக்கு கொஞ்சம் கவலை தருகிறது.

அம்மா வெளியே செல்லும்போது வண்டிகள் உரக்க ஹாரன் அடித்தாலும் அல்லது ஓட்டுனர்கள் கூவினாலும் அம்மாவுக்கு காதில் சரியாக விழுவதில்லையே.

நான் கவலைப் பட்டதற்கு ஏதுவாக ஒரு முறை வெளியே செல்லும்போது வழிதவறி போய்விட்டார். ரொம்ப நாழி வரவேயில்லை; ஒரு பக்கம் கவலைப்பட்டேன், மறுபக்கம் என்னையே நான் கொஞ்சம் திட்டிக்கொண்டேன்.

மதிய உணவுக்கு எனக்கு மீன் ரொம்பப் பிடித்திருந்தது, அதுவும் சாதாரண மீன் இல்லை; இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை, அதை அவ்வப்போது புதிசாக வாங்கி வரத்தான் அம்மா அடிக்கடி வெளியே போகவேண்டியிருக்கிறது. அது தின்பதற்கு சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும்.

சித்தி சொல்லிக்கொண்டிருந்தார், "இங்கே பக்கத்தில் கிடைக்கும் மீனை பிள்ளைக்கு வாங்கிக்கொடுத்தால் போதாதா, எதற்கு தினமும் தள்ளிப் போய் வாங்கி வரவேண்டும்? ஏ குட்டி, இதெல்லாம் உன் வேலையா?" என்னைச் செல்லமாக முறைத்துப் பார்த்தார்.

ஒரு முறை கடற்கரை அருகில் ஒரு இடத்தில் புதிதாகக் கிடைக்கிறது என்று யாரோ தெரியாமல் சொன்னதைக் கேட்டு வெறும் வயிற்றில் பட்டப்படைக்கிற வெய்யிலில் ஓடி, புடைக்கும் சூரிய ஒளியில் கண்கள் கூசி, காலருகில் இருந்த மீன் வலை கவனிக்காது போய் காலை இசைகேடாக மாட்டிக்கொண்டு காலை விடுவிக்க முடியாமல் திண்டாடி, பின் சில நல்லவர்கள் உதவியாக அம்மா தப்பித்துவிட்டார்.

இன்றும் அம்மாவைக் காணோம். கடவுளே இந்த ஒரு முறை என் அம்மாவைக் காப்பாற்றி விடப்பா. இதோ என்னைப் பார்த்துக்கொள்ள வந்த சித்தி புதுசுபுதுசாக ஏதோ சொல்லி என்னை வேறு கிலி படுத்துகிறார்.

காலம் கெட்டுக்கிடக்கிறதாம், பசி மயக்கத்தில் அம்மா சுருண்டுவிட்டால் யாராவது நாதியற்றவள் என்றோ பிணம் என்றோ நினைத்து அம்மாவின் உடல் உறுப்புக்களை யாராவது எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமாம்.

கடவுளே இப்படியுமா இருப்பார்கள் இவ்வுலகில்?
சே சே இருக்காது, இருக்கக்கூடாது, இந்தச் சித்தி அனாவசியமாக பீதி அடைகிறார் என்று எனக்கு அடிக்கடி தோன்றும் என்றாலும் அம்மா பத்திரமாக இருக்கவேண்டும் சாமி என்று கடவுளை வேண்டிக்கொண்டேன்.

சாமி எனக்கு இனி அந்த மீன் வேண்டாம் எதுவும் வேண்டாம் என் அம்மாதான் எனக்கு வேண்டும். இந்த ஒரு முறை அம்மா பத்திரமாகத் திரும்ப வேண்டும். சீக்கிரமாக நான் பெரியவனாக வேண்டும். அம்மா வந்து விடணும் சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டேன்.

என் பிரார்த்தனை பலித்துவிட்டது. அம்மா பத்திரமாக வந்துவிட்டார். கடவுள் எவ்வளவு நல்லவர். என்னைப் போன்ற சின்னப் பையனின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டார். அம்மா என்னைத் தடவிக்கொடுத்தார்.

அம்மா வழக்கம்போல் முதலில் சாப்பாடு கண்ணு என்றார். அம்மா, நீங்களும் என்னோடு சாப்பிடுங்கள் என்றேன். சித்தி என் அம்மாவுக்கு வழக்கம்போல் அறிவுரை சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய்விட்டார்.

அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி முடித்தபிறகு அம்மாவின் முதுகைக் கட்டிக்கொண்டேன். முதுகில் காயத்தின் தழும்புகள். எப்போது பட்டுக்கொண்டார் என்று தெரியவேயில்லை. ஓவென்று அழுதேன்.

கண்ணா அழாதே, என்னை யாரும் அடிக்கவில்லை கொஞ்ச நாளைக்கு முன்வெளியே போன போது தேடப்போனபோது ஒரு வண்டியில் துருத்திக்கொண்டிருந்த கூர் பிளாச்சு என்னைக் குத்திவிட்டது என்றார்.

வண்டிகளைப் பார்த்தால் என் நண்பன் ராசு குதிப்பான் குதூகலிப்பான், எனக்கோ கோபம் கோபமாக வருகிறது. "மருந்து போட்டீங்களா அம்மா?" என்றேன். அம்மா சிரித்தார். "சே இப்போதே நான் பெரியவனாகி அம்மாவுக்கு உதவி செய்ய முடியாதா. அம்மாவை தூக்கக்கூட என்னால் முடியவில்லை.

இயற்கை உபாதைகளைத் தவிர அம்மாவுக்கு பிரச்சனையே அம்மாவின் பருத்த உடம்புதான்;

இரண்டு மூன்று நாள் கரையோரமாக விழுந்து கிடந்தால் தன் உடல் எடையாலேயே நசுங்கி திமிங்கிலங்கள் இறந்துவிடும் என்று நீங்கள் படித்திருப்பீர்களே.


நன்றி
தமிழ்சி·பி.காம்2008 புத்தாண்டு மலர்


Monday, December 10, 2007

இரண்டு கடிதங்கள்

சிங்கப்பூர் வந்த புதிதில், (1993) ஹெச்.டி.பி. அடுக்ககக் கீழ்த்தளத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் அஞ்சல் சேமிக்கும் பெட்டியில் நாள்தோறும் வரும்அஞ்சல்களை எடுக்கப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் ஏராளமான துண்டுபிரசுரங்கள் (flyers) குவிந்திருக்கும்.


வங்கிக் கடிதங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணஅறிவிப்புகள், வீட்டுவசதி வாரியத்திலிருந்து வரும் கடிதங்கள், இதர கடிதங்கள், சின்னஞ்சிறு அறிவிப்புகளைத் தாங்கிய தாள்கள், காணாமல் போன ஒரு வயது ஜிம்மி- பழுப்பு நி¢ற நாய்க்குட்டியைக் கண்டு பிடித்தால் தக்க சன்மானம் கிடைக்கும் ( நீல வண்ணச் சொக்காயும் இளம்பச்சைநிற காலுறையையும் அணிந்திருக்குமாம், உணவுவேளைக்கு முன்பே காணாமல் போயிற்றா , பற்கள் எத்தனை என்ற விவரங்களை குறிப்பிடவில்லை) மகனுக்குப் பள்ளியில் வீட்டுப்பாடம் அதிகமில்லையாம்; கூடுதல் பாடங்கள் ஆங்கிலம், தாய்மொழி, கணக்கு முதலியவை சொல்லித் தர ஆசிரியர் வேண்டுமாம் (ஐந்து வயது சிறுவனுக்கு இதை இன்னும் தெரிவிக்காதலால் அவன் இன்னமும் பந்தடித்துகொண்டிருக்கிறான்)
வீட்டிற்கு சன்னல் மாற்றுகிறோம், சமையலறை அலமாரிகளைப் புதுப்பிப்போம், மேலும், வீட்டின் தரையின் மேற்பகுதி பார்க்கே (மரம்), பளிங்கு, எப்படி வேண்டுமோ நவீனப்பாணியில் மாற்றித்தருவோம், சமையலறை அலமாரிகளை புதுப்பிப்போம், ஐரோப்பிய அடுப்பு, பாத்திரம் கழுவும் தொட்டி, குளியலறைத் தொட்டி, கழிவுக்கோப்பை, வழுகாத தரை, முன்னறை மேல் உள்கூரையழகு (cornice), குளிரூட்டும் பெட்டி, மின் இணைப்புகள், மின்விசிறிகள், நுரைமெத்தைகள், இத்தாலிய ஆசனங்கள், துணி துவைக்கும் ஐப்பான் இயந்திரம், உள்ளறைகளில் சுவரோடு உள்ளொட்டிய அலமாரிகள் என்று வீட்டைத்தவிர சகலத்தையும் சகாய விலையில் மாற்ற உத்திரவாதம் தரும் அங்காடிக்காரர்களின் அன்பும், (வீட்டை வாங்குவதற்கும் விற்பதற்கும் குவியும் விளம்பரங்கள் பற்றியும் எடையைக்குறைக்கும், மேனி எழிலூட்டும் விளம்பரங்கள் பற்றியும் தனியாக பின்னொரு பொழுதில் எழுதுகிறேன்)நாம் விரோதமாகத் தூக்கிப்போட்டாலும் நம் தபால் பெட்டியை தேடிவந்து வந்தனம் செய்யும் அன்பர்கள், அடுத்து கணினி வாங்கு, பியானோ வாங்கு, சாப்பாடு வாங்கு, என்று இரத்த அழுத்தம் வரவழைக்கக் கூடிய %50 தள்ளுபடியில் இன்றே கடைசி என்று நல்லெண்ணத்துடன் நமக்கு நினைவூட்டும் காகிதத்துண்டுகள் தேடிவந்து நம் அஞ்சல்பெட்டியில் அமர்ந்துகொள்ளும்.



இப்போது துண்டுச் சீட்டுகள் வருவதை வரவேற்காத கலகக்காரர்களுக்காக, தடுக்க சிறுகதவு செய்தாலும் (வேண்டுமானால் அதைப்பூட்டிக்கொள்ளலாம்) தடுக்க முடியாத சில அஞ்சல்கள் உள்ளன.


உறவினர், நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அருகிவிட்டது,
எல்லாம் மின் அஞ்சலின் உபயம். அஞ்சலில் தவறிவிட்டது என்று யாரும் கதைகூற இயலாது, வேண்டுமானால் இணையப்பக்கத்தை திறக்க இயலவில்லை, கணினிக்கு உடல்நலம் இல்லை எனலாம். அதற்குத் தடையில்லை.



கடிதங்களைப்பார்ப்பது என்பது ஒரு சுவையாரமான செயல்தான் கட்டணம் கட்டச்சொல்லும் கடிதங்களைத் தவிர.


இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல சில துண்டுபிரசுரங்கள் பிடிவாதமாக வந்து கொண்டிருக்கின்றன.


நான் பள்ளிமாணவராக இருந்தகாலத்தில் வரும். அனேகமாக தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வரும். மஞ்சள் நிற தபால் அட்டையில் எழுதப்பட்டிருக்கும். இது நான் கடவுள் எழுதச்சொல்லி எழுதுவது, இதைப்போல் உடனடியாக 50 கடிதங்கள் கையால் எழுதி ( என் மீது உள்ள கருணையினால் எனக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கை என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்) எல்லோருக்கும் அனுப்பினால் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிதான், மீறி அலட்சியப்படுத்தினால், இந்த வருடம் தோற்றுவிடுவீர்கள் என்று பாசம் கலந்த கண்டிப்புடன் வரும்.


இவ்வாறாக வரும் மஞ்சள் வண்ண அஞ்சல் அட்டைகள் குப்பை, தூசு அள்ளவும், சரிசமமாக நிலத்தில் அமர மறுக்கும் நாற்காலிகளுக்கும், முக்காலிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்த பின் என் மனம் உவகையடைந்தது.


பள்ளியில் உடன் பயிலுபவர்களை வினவியதில் அவர்களுக்கும் அக்கறை மடல்கள் வந்துசேர்ந்ததை உறுதிசெய்துகொண்டேன். சிலர் அச்சம்கொண்டு ஞாயிறு முழுவதும் அமர்ந்து எழுதி திங்கள் காலையில் பள்ளிக்கு எதிரில் இருந்த அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு, வகுப்பில் முதல்பிள்ளையாக வரும் இன்பக்கனவைக் கண்டவாறே பள்ளியில் வந்து அமர்ந்துவிட்டு அன்று மதியம் நடந்த கணிதத் தேர்வில் கண்களை அடிக்கடி மலர்த்தி கனவைத்தொடர்ந்தனர்.


சொன்னதைக் கேட்காவிட்டாலும் அட்டையை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்த புதியமுறைகளைப் பற்றி யோசித்து செயல்பட்டதால் என்னிடம் கருணை காட்டப்பட்டது என்பதை என் கணிதத்தேர்வு மதிப்பெண்கள் உறுதிசெய்தன.


பிற்காலத்தில் கல்லூரி படிப்பிற்காக தென் தமிழகத்திலிருந்து நடுவண் தமிழகத்திற்கு நான் குடிபெயர்ந்தாலும் இத்தகைய கருணை மடல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாகவும் (புதிய முகவரியை சிலரே கண்டுபிடிக்கும் திறமை பெற்றதால்) மெல்ல ஆண்டுக்கு ஒரு முறையாகி, பின் அதுவும் நின்று போனபோது, என் வளர்ச்சியில் நல்லெண்ணம் கொண்ட முகம் தெரியாத அன்பர் என்னை தன் நினைவேட்டிலிருந்து நீக்கிவிட்டதை எண்ணி வருந்தினேன்.



சிலபல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்கு வந்தபோது இந்த இனிய நினைவுகள் உதித்தது எங்ஙனம் என்று கேட்பவருக்கு நேற்று வந்த இரண்டு கடிதங்களைப் பற்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.


ஒன்று தட்டச்சு செய்த முகவரியைத் தாங்கிய பிரபல பொரிம்பு (brand) பெயரால்அலங்கரிக்கப்பட்ட உயர்ரக உறை. மற்றொன்று பாலர்பள்ளி மாணவர், பேனாவில் முகவரி எழுதுவதன் மூலம் அவர் ஆங்கிலஅறிவு மற்றும் எழுதும் பயிற்சியும் மேற்கொள்ளவைக்கப்பட்டிருந்தது தெரியும்படியாக ஒரு கடிதம். இதற்கு பொரிம்பு பெயரிட்ட உறை கிடைக்கவில்லை போலும். அதனால் ஒரு தாளில் எழுதி, நான்காக மடித்து மெல்லிய உலோக கம்பியால் அங்கங்கே கவ்வப்பட்டு மூடப்பட்டிருந்தது.



உள்ளடக்கம் ஏறத்தாழ ஒன்றுதான்.
அவசர உலகம் அல்லவா, கையால் எழுதி 50, 100 பேருக்கு அனுப்பsசொல்லுவதன் நேரவிரயத்தை அறிந்திருந்த உத்தமர்கள்.
நகலெடுத்து 30 பேருக்கு அனுப்பினால் போதும் என்று கருணையுள்ளத்துடன் எழுதியிருந்தார்கள். எங்களுக்கு அலுவலகப்பணி நிலைக்கவேண்டும், வாந்தி, பேதி, பீதி வராமல் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறை கொண்டவர்கள் இவர்களைவிட வேறு யாராக இருக்க இயலும். (இந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததால், பிற்பகலிலேயே வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றவர், குடும்ப உறவுகள் சிதைக்கப்பட்டவர் பற்றிய சிறுகுறிப்பை கனிவோடு சேர்த்திருந்தனர்)
அனுப்புநர் அடுத்தவரை உற்சாகப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது கடிதத்தின் இறுதி பத்தியில் தெரிந்தது. உடனே செயலில் இறங்கிய ஒரு கனவான் லாட்டரி ஒன்றில் சில மில்லியன்கள் வென்ற நற்செய்தியை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.




இவ்வுலகத்தினர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் உலக நன்மைக்காகவே இதை அனுப்புவதாகவும், தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புமாறு தெரிவித்திருந்தார்.


நண்பர், உறவினர் போன்றோருக்குப் பண்டிகை நாள், பிறந்தநாள், மணநாள், இன்னும் பல சிறப்புடைய நாட்களில் வாழ்த்து அட்டைமட்டுமே அனுப்பவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை உய்விப்பவர் வேண்டுமல்லவா.



இதை எண்ணி மகிழும்போதே இதனினும் குதூகலம் அளிக்கும் ஒன்றை நான் கவனிக்கத் தவறியதை அறிந்தேன்.


இரண்டிலுமே உள்ளூர் அஞ்சலுக்கு மட்டும் என்று எழுதப்பட்ட அஞ்சல்தலைகள் கவனமாக ஒட்டப்பட்டிருந்தன.


நல்லெண்ண விரும்பிகள் சிங்கப்பூரில் எனக்கு வாய்த்திருப்பதை எண்ணி பூரிப்படைந்தேன். மாசுகட்டுப்பாடு மீது உள்ள கரிசனம் காரணமாக தாளின் வெற்றுப்பகுதியை எழுத பயன்படுத்துகிறேன்.


நன்றி: சிங்கப்பூர் தமிழ்முரசு 2000 செப்டம்பர் 19



பின்குறிப்பு:
இக்கட்டுரையை எழுதி ஆண்டுகள் ஏழு ஆகியபின் ஒரு நன்னாளில் நண்பர் ஒருவர் மின்மடல் அனுப்பியிருந்தார். அவரது கைபேசியில் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறதாம். உள்ளடக்கம் மேற்குறிப்பிட்ட செய்திதான். 10 பேருக்கு குறுந்தகவல் அனுப்பச்சொல்லுகிறார்களாம்.

Saturday, September 01, 2007

தேக்கா வெட்டவெளியில்

ஞாயிறு இரவுகளில்

விரவியிருக்கும்

வெளிநாட்டு ஊழியர்களின்

கனவுகளின் காலடித்தடம்.


விடுமுறையிலும் கூடுதல் பணி.


கடல்தாண்டி வந்த உடலைச்

சுமந்தபடி

தேங்கி நிற்கும்

குடும்பத்தின் குரல்களைக்

கேட்டவாறு அமரும்

புல்வெளியில்

நண்பர்களுடன்


ஓவர்ஸ்டே, வொர்க் பர்மிட்,

எஸ்பாஸ், சுய பாகம்,

முகவர் வாங்கிய முன் பணம்,

ஏமாந்து போன நண்பன்,

நெருங்கிய உறவின் மரணம்,

அக்காவின் திருமணம்,

மனைவியின் பிரசவம்,

குழந்தை இப்போது பேசுகிறதாம்,

எல்லாச் சொற்களும்

புல்வெளிதாண்டி

சாலைகளிலும்

நடக்கும்


எவ்வளவு பெரிய மழை

வந்தாலும்

கனவுத் தடங்களை மட்டும்

அவை

அழிப்பதேயில்லை


கனவுகளெல்லாம்

நனவாகட்டும்

என்ற நினைப்பில்

Saturday, June 02, 2007

வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்

அலுத்துக் களைத்து அலுவலகத்திலிருந்து வருகிறீர்கள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் விரல்களால் பொத்தானை அமுக்குகிறீர்களா?

உங்கள் வீட்டில் ஒருவர் மற்றொருவருடன் அன்றைய நிகழ்ச்சிகளையோ, அனுபவங்களையோ குறித்துப் பேசும் போது வீட்டில் பின்னனி சத்தத்துடன்தான் பேசுவீர்களா?

வீட்டில் பிள்ளைகள் எதாவது ஐயங்களையோ, செய்திகளையோ சொல்லவரும்போது அல்லது சொல்லும்போது அடிக்கடி அப்புறம் ஆகட்டும் என்றோ அல்லது அவர்கள் கண்களைப் பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து வாயைத் திறந்து வார்த்தைகள் மட்டும் கூறுவீர்களா?


ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னணி இசை இருப்பது போல் உங்கள் வீட்டில் எல்லா நடவடிக்கைகளும் ஒளித்திரை பின்னணியில்தான் நடக்குமா?

சொல்லமறந்தேவிட்டேன், எடை கூடிக்கொண்டே போகிறது, வரவர கவனமே இல்லை, இந்த வாக்கியங்கள் அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்கின்றனவா?

இந்தக் கேள்விகளில் ஒரு சிலவற்றிற்கே ஆம் என்று பதில் சொல்லிவிட்டீர்கள் என்றால் பணம், நேரம், பாசம், அக்கறை, மகிழ்ச்சி இவற்றையெல்லாம் உங்களை அறியாமலேயே/அறிந்தே விற்று ஆபத்தை தினந்தோறும் வாங்கி வருகிறீர்கள் என்று அர்த்தம். இச்செய்தி ஆண், பெண் இருபாலார்க்கும் ஆகும்.

பழங்கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கேயோ கிடந்த புட்டியை ஒருவன் தெரியாமல் திறந்துவிட அதிலிருந்து வெளிப்பட்ட பூதம் வேலை தருவதை நிறுத்தினாய் உன்னை விழுங்கிவிடுவேன் என்று தன்னை விடுவித்தவனைப் பார்த்துக் கூறும். பூதம் நொடியில் வேலைகளை முடித்துவிட்டு தொந்தரவு தர இறுதியில் அலைகளை எண்ணச் செய்தானாம் அந்த மனிதன்.

நம் வீட்டிலும் ஒரு பெரிய மலை விழுங்கி பூதம் இருக்கிறது. தெரிந்தே ஆசையாய் விலை கொடுத்து வாங்கி பற்பல இணைப்புக்களும் கொடுத்து ஆதரித்து வருகிறோம்.

நமக்கு சொந்த வேலை எதாவது பிள்ளைகள் தொந்தரவின்றி செய்ய வேண்டுமா? வெகு சுலபம். பெட்டி எதிரில் சுட்டிகளை உட்கார்த்திவிட்டு நேரத்தினை வெட்டிச் செலவு செய்யக்கூடாது என்று நிகழ்ச்சி முடிந்தபின் சொல்லலாம். இது சரியா?

கதையில் பூதமாவது என்னைப் பயன்படுத்து என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி தேமேன்னென்று இருந்து கொண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோர¨யும் இருந்த இடத்திலிருந்தே எப்படி ஆட்டிக் வைக்கிறது.

அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். வீட்டுப்பணிகள் (ஆண் பெண் இருபாலாரும்தான்) நிகழ்ச்சிகளுக்கு இடையே (விடுமுறை என்றால் இன்னும் சிறிது கூட) நடக்கும். நடுவில் விளம்பரங்கள் வரும்போது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது வேறு எதற்காகவாவதோ போவது நடக்கும். விளம்பர இடைவெளியில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அப்போதுதான் பேசிக்கொள்வார்கள்.


குழந்தைகள் பார்ப்பார்கள்; சரிதான் பேசாமல் நாமும் இதில் என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்வார்கள். அவர்கள் ஒரு நொடி தயங்கினாலும் திரையில் வரும் காட்சி அல்லது குரல் அவர்களை நல்ல பிள்ளையாய் இழுத்து உட்கார்த்தி வைத்துவிடும்.

அப்புறம் பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள்.

பிள்ளைகள் சதா தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு நல்ல பொழுதுபோக்கு அமையவில்லை என்று அர்த்தம் (it means they are not properly engaged otherwise)
பிள்ளையைப் புத்தகம் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கவனம் சிதறிப் போகும்.

எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.இவர்களுக்கு இந்தக் கட்டுரை தேவையில்லை.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர் மட்டும் தொடர்ந்து படிக்கவும். பிடிக்காதவர்கள் என்னைத் திட்டிவிட்டு உங்கள் பணியைத் தொடரவும்.

என்ன செய்யலாம்?

1. தொலைக்காட்சியா? தாராளமாகப் பாருங்கள்/
2. பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்தில் எப்போதெல்லாம் வருகின்றன என்று குறித்து வைத்துக் கொண்டு, அதைக் கட்டாயம் பாருங்கள்.
3. பிள்ளைகளுக்கும் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதியுங்கள் (குறிப்பிட்ட நேரத்தில்)
4. இடையிடையே பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள். அப்போதுதான் அது பிள்ளைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியா என்பதை நீங்களும் சிந்திக்கலாம். குழந்தைகள் கேலிச்சித்திரம், குழந்தைகளுக்கான தொடர்கள் என்ற பெயரில் வரும் எல்லா நிகழ்ச்சிகளுமே குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைவதில்லை.
5. தரமானதொரு நிகழ்ச்சியை பிள்ளைகளுடன் பார்த்துமுடித்தவுடன் அவரவர் எழுந்து போய் விடாமல் ஓரிரு நிமிடமாவது அது குறித்துப் பேசுங்கள். அவர்கள் கருத்தைக் கேளுங்கள்/
6. நேரமிருந்தால் அவர்களுடன் இன்னும் விரிவாகப் பேசலாம். செய்திகள், நல்ல கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுக்கும் விருந்தாகும் டிஸ்கவரி சானல், நேஷனல் ஜியோக்ராபி·க், பயணச் நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடாதீர்கள்.
7. நிகழ்ச்சி எப்படித் தரப்பட்டது?
8. அதில் பங்கு பெற்றவர் கூறியவற்றைத் தவிர வேறு ஏதேனும் எண்ணம் எழுகிறாதா? நடக்குமா? . எங்காவது இதுபோல் இருக்குமா? உனக்கும் இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசையா? நூலகத்தில் பார்க்கலாமா? இதே விஷயத்தை நாம் எப்படி அணுகலாம்? இதைக் காட்டிலும் புதிய முறை ஏதேனும் இருக்கிறதா? போன்ற கேள்விகள் சிந்தனையைத் தூண்டும்.
9. எல்லாக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்காமல் சிலவற்றையாவது கேட்கலாம். அல்லது உங்களுக்கு புதிதாக எதாவது தோன்றினாலும் கேட்கலாம். வன்முறைக் காட்சிகளை அவர்கள் எதிரில் நீங்களும் பார்க்காதீர்கள்.
10. எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா? இந்த கேலிச்சித்திரம் பிள்ளைகளுக்குத்தேவையா? இது நிஜம் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்போதே நீங்களும் பக்கத்தில் இருந்தால்தான் கூற முடியும். நிஜ வாழ்க்கையில் எந்தப் பிராணியையும் வதைப்பது அறத்திற்குப் புறம்பானது என்று கூறுங்கள்.
சில மாதங்களுக்கு முன் சிங்கை தமிழ் முரசு ஆசிரியர் ஒரு பொது இடத்தில் பூனையை சிறுவர்கள் அடித்து இம்சைப் படுத்துவதைக் கண்டும் அவர்தம் பெற்றோர் கண்டிக்கவில்லையே என்று 'நமக்குள்ளே'யில் வருத்தப்பட்டிருந்தார்.
நகைச்சுவை என்ற போர்வையில் சில கேலிச்சித்திரங்கள் வன்முறையைக் கற்பிக்கின்றன. மனிதநேயம், மனிதாபிமானம் முதலியவற்றிற்குச் சவால் விடும் நகைக்ச்சுவையை நாம் ஆதரிக்கலாமா?
அதனால் குழந்தைகள் பார்க்கும் கேலிச்சித்திரங்களைக்கூட தேர்ந்தெடுத்துதான் அவர்களைப் பார்க்கச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது அதனால்தான் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்தால்தான் அவர்களை நல்ல முறையில் நாம் வழிகாட்ட இயலும்.
திரையில் காட்சிகளாகப் பார்ப்பவை மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றன.

இது குறித்து உங்கள் கருத்து?

சிங்கை தமிழ்முரசு 2001

Tuesday, March 13, 2007

விடையென்ன எண்ணி விளி

விடுகதை வெண்பா


மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம்

ஆன்றநடு நீங்கிடின் ஆதானே -- சான்றோர்

கடையிரண்டு நீங்கின் கடுங்காற்று என்பர்

விடையென்ன எண்ணி விளி