Sunday, December 06, 2009
ஒவ்வொரு விடுமுறையில் உன்னை நேரில் சந்திக்க வரும் போதெல்லாம்,....
உன் நரம்புகளில் ஊடுறுவதைக் காண்கிறேன்
கால்பாவ நினைத்து
தள்ளாடி விழும் ஒரு கைக்குழந்தையைப்போல
நான் விழுந்துவிடுவேனோ
என்று அச்சம் கொள்கிறாய்
உன்னையே சொல்லிக்கொண்டிருப்பேன்
எழுத நினைத்தேன்
அழைக்க நினைத்தேன்
என்று நீ
தடுமாறித் தடுமாறி
கரகரத்த குரலுடன்
இமைகளின் ஈரம் கனக்க
சொற்களால்
என்னைத் தூக்கிவிடப்பார்க்கிறாய்
ஒவ்வொரு புதிய நிகழ்வில்
தோய்ந்து வரும்
என் ஒவ்வொரு கடிதத்தையும்
நீ வாசிப்பதை மட்டுமல்ல,
'ம்' கொட்டுவதையும்
தலையசைப்பதையும்
புன்னகைப்பதையும்
நானிருக்கும் இடத்திலிருந்தே
காண்பதால்தான்
உற்சாகத்துடன் என்னால்
தொடர்ந்து எழுத முடிகிறது
சங்கடங்களைத் தூக்கி எறிந்துவிட்டு
வா
ஒரு சின்ன நடனம் ஆடுவோம்
நான் வேறுபலவும் சொல்வேன்
என் பாடலில்
சொற்களைக் கோர்ப்பது
என் கோப்புகளில் இருக்கும்
உன் நீண்ட மயிலிறகுக்கடிதங்கள்
போடும் குட்டிகள்தான்
என்பதையும் சேர்த்து
சொல்வனம் 2-10-2009
Monday, September 28, 2009
சொக்கட்டான்
குரலிழந்த நான்
என் பங்கு நியாயத்தை இறக்க
முடியாமல்போனேன்
பழமெடுத்து
உன் வெற்றியைப்
பறையறைகிறாய்
இதற்கு
என்னை
அழைத்திருக்கவே
வேண்டாம்
நீ மட்டுமே
நாள் முழுதும்
விருத்தம் எடுக்க
uyirosai 21-9-2009
Wednesday, September 23, 2009
பச்சைப்பாம்பு
எதையும் கண்டுபிடிக்க
முடியாதபடி இருக்கிறது
குளிரூட்டப்பட்ட இந்த
நிலவறைப் பேரங்காடியில்
அங்கங்கே தொட்டிகளில் அமர்த்தப்பட்டிருந்த
மலர்ச்செடிகள்
சென்ற வாரம்
காலியாக இருந்த
மரீன் பரேட்
அலுவலக வரவேற்பறையில்
இன்று திடீரென்று
வீற்றிருக்கிறது
ஒரு திப்பிலிப்பனை
முகமனுடன்
வரவேற்று
ஐயங்களைத் தீர்த்துவைக்கும்
தொலைபேசிக்குரல்
ஏற்கனவே
பதிவுசெய்யப்பட்ட
பதில்களை உடைய
நிரலியால்தான்
என்பது
வேறு ஒரு நாள்
தெரியவருகிறது
காலைச்சுற்றிவரும்
செல்ல நாய்க்குட்டியை
என்னிடம் காட்டி மகிழும்
பக்கத்துவீட்டுச் சிறுவன்
உணவு வில்லைகளை
அதன் வாயில் இட்டு
விசையை அழுத்துகிறான்
வாரத்திற்கு ஒரு முறை
சேமக்கலத்தில்
மின்னேற்றினால் போதும்
என்கிறான்
தாவரவியல் தோட்டத்தில்
லோர்னி பாதையில்
செண்பகச் செடிகளைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது
புதரடியில்
பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல
uyirosai 21-9-2009
Wednesday, September 16, 2009
வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் மூதாட்டி
ஈரமா என்று
ஆயாசத்துடன்
கண்களை மூடினால்
போதும்
செங்குத்தாக அடுக்கப்பட்ட
புத்தகங்களிலிருந்து
கழன்று விழும்
எழுத்துகள்
ஒழுங்கு வரிசையின்றி
முட்டிமோதிக்கொண்டு
தம்தனித்த வாசத்துடன்
மூளைக்குள்
நுழைந்துவிடுகின்றன
தனித்த இரவுகளில்
வரும்
கனவுகளில்
வினாத் தாள்கள்
மீண்டும் மீண்டும் வருகின்றன
அதிலிருக்கும் எழுத்துகள்
அவரிடம்
கமுக்கமாகப் பேசுகின்றன
அவற்றின் நிறம்
ஆழமான
பித்தவெடிப்புகளால்
பிளவுண்ட தன் குதிகால்களில்
காணப்படும் குருதியின்
நிறத்தில் இருக்கிறது
சமன்பாடுகளின்
விளக்கங்களும்
வரைபடங்களும்
அதில்
கேட்கப்படுகின்றன
ஐநூறு சொற்களாலான
நீண்ட கட்டுரை
எழுதுமாறு
பணிக்கப்படுகிறார்
கையெழுத்து மட்டுமே
போடத் தெரியும் என்று
அவர் மன்றாடுவது
அவருக்கே கேட்பதில்லை
எழுத்துகள் முகமூடி
அணிந்துகொண்டுவிட்டதைக்
கண்டு
மை நிரம்பிய
பேனாவை நடுக்கத்துடன்
சுருக்கம் நிறைந்த விரல்களால்
பிடிக்கிறார்
எல்லாக் கேள்விகளுக்கும்
விடை தெரிந்திருப்பது
அதிகமாக்குகிறது
அச்சத்தை
உயிரோசை 7.9.2009
Sunday, September 13, 2009
நாகரிக விருந்துகளில்,....
என்றுமே இல்லாத
பதற்றம்
பதுங்கிப்பதுங்கி
வந்தமர்ந்துவிடுகிறது
சாப்பாடு உள்ள
காகிதத் தட்டுகள்
ஏந்திய
புதிய பச்சை நிறக்கோடு போட்ட சட்டை
மாட்டிக்கொண்டுள்ள
தாத்தாவின்
கைகளில்
நூறுபேர் உள்ள இடத்தில்
இருக்கும்
பத்துநாற்காலிகளுக்குப்
போட்டிப்போட
முடிவதில்லை
தனக்கென முதலில்
எடுத்துக்கொள்வது
பழக்கமாகாததால்
இருக்கலாம்
காலி இருக்கைகள் நிறைந்த
நிகழ்ச்சி நடக்கும் அரங்கு
சுவருக்கு அடுத்தபக்கம்தான்
என்றாலும்
அங்கெல்லாம்
சாப்பிடக்கூடாது
அழுக்காகிவிடும்
ஒரு சிறுமியை
அவள் குடும்பத்தினர் யாரோ
மிரட்டிக்கொண்டிருந்ததை வேறு
பார்த்துதொலைத்தாகிவிட்டது
கதைபேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும்
நாசுக்காக உண்ணும்
மகனோ மகளோ
சுட்டிக்காட்டுவதற்கு
முன்பே
வாயோரத்து
சோற்றுப்பருக்கையைச்
சரிசெய்யவேண்டியிருக்கிறது
இன்னும் இரண்டு கவளம்
கூட உள்ளே செல்லாவிட்டாலும்
குடிநீர் எங்கே இருக்கிறது
என்று கண்டுபிடித்துவிட்டாலும்
அதை வைத்துக்கொள்ள
கூடுதல் கரம் ஒன்று
தேவையாய் இருக்கிறது
எங்கிருந்தோ
ஓடிவந்து
பேரனோ பேத்தியோ
தண்ணீர்க் கிண்ணத்தைக்
கொடுக்கும்போது
இதுபோதும் எனத்
தோன்றிவிடுகிறது.
நளினமாகச் சாப்பிடும்போதே
நாய்க்குட்டிபோல் ஓடிவந்து
இரண்டுபேர் கேட்கும்படியாக
நீ கையாலேயே சாப்பிடு
உனக்கு முள்கரண்டி சரிவராது
என்று
மகன் வந்துபோட்ட மிளகாய்த்துண்டு
விக்கலை நிறுத்தப் போதுமானதாக
இருக்கிறது
பரவாயில்லை இதையாவது
கவனித்து பேசுகிறானே
தன்னொத்தவர் கூறுகையில்
கண் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறது
பாட்டிகளுக்கு
முதல் பந்தியில் சாப்பிட
வாய்ப்புக்கிடைத்ததைவிட
தம் பேச்சை உற்சாகத்துடன்
கேட்க மனிதர்கள் கிடைத்த
மகிழ்சிரிப்பு உணவின் மணத்துடன்
கலக்கிறது
இன்னும் கொஞ்சம்
இருந்திருக்கலாம்
ஏங்குகிறாள்
சூரியன்
நிலக்காட்சிகளைக் காண
சொல்வனம்
4-9-2009
Thursday, July 09, 2009
Friday, July 03, 2009
இதுவரை,...
எழுந்தது
என்னுடையதில்லையாம்
உன்னுடையதில்லை
ஆனால்
உன்னுடையதாகிக் கொண்டிருக்கிறது
சட்டபுத்தகங்கள்
கர்ஜிக்கின்றன.
கலவரத்தில் நான் தொலைத்தது
உன்னால் கண்டெடுக்கப்பட்டு
நான்கு வருடங்களாக உன்னிடமே
இருந்து வருகிறது
அடுத்த அமரல் வரை
வாரம் ஒரு முறை
உன்னுடையதாக
பிரகடனப்படுத்தப்பட்ட
என்னுடையதை
தரிசனம் செய்யக்காட்டுவாய்
களவாடப்படும்
அச்சப்பின்னல்கள் ஊடே
அமரல்களாலும்
முகதரிசனங்களாலும்
பரிசுகளாலும்
பெற்றுத்தரவியலாத
ஒரு
சொல்
இன்னும்
ஆழத்தைத் தேடி
பூமிக்கடியில்
போய்க்கொண்டிருக்கிறது
Thursday, June 11, 2009
சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி
வளரும் மணிப்ளாண்ட்டுக்குப்
பக்கத்தில்
சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப்
பிடிவாதமாக
ஒரு மண்தொட்டியில்
நட்டுவிட்டது குழந்தை.
என்ன செய்வது
என்று தெரியவில்லை
ஒன்றரை அடி உயரத்திற்கு
வளர்ந்துவிட்ட மாங்கன்றை
Friday, May 29, 2009
30-05-2009
மனிதனைக் கேட்டேன்
பச்சை வந்தபின்
போனால் என்ன
ஓடிக்கொண்டே சொன்னான்
எனக்கு முன்
ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
உன்னைப்போல
அநங்கம் மலேசியா
மே 2009
Thursday, May 28, 2009
தொலைக்காட்சி எதிரில்

கேவிக்கேவி அழுகிறார்கள்
வாயைக்குவித்து வியக்கிறார்கள்
பூரித்துப் போகிறார்கள்
பதறி நடுக்குறுகிறார்கள்
சீச்சீ என்கிறார்கள்
பல்லைக் கடிக்கிறார்கள்
விசையை அணைத்தபின்
நடக்கிறார்கள்
Thursday, April 02, 2009
இந்த வியாழன்
சீன ஜாலக்குகளையும், மந்திர தந்திரங்களை மட்டுமே நம்பாமல், எளிய நேர்த்தியான திரைக்கதை, நம்பும்படியான உடல்மொழியும், எனக்குப் பிடித்திருந்தது. வழக்கமான டிஸ்னிகதைகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது.
மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிறார்.
அகராதியில் அண்ணம்,அண்ணி எல்லாம் இருக்கிறது அண்ணித்தல் இல்லை. தெளிவுரையில் தித்திப்பான் என்று பொருள் தந்திருக்கிறார் சித்பவானந்தர்.
மதுரகவியாழ்வார் 'அண்ணிக்கும் அமுதுஊறும் என் நாவுக்கே' ('கண்ணி நுண் சிறுதாம்'பில் )என்கிறார்.
இங்கும் தெளிவுரையில் தித்திக்கும் என்று எழுதியிருக்கிறார் ஜெகத்ரட்சகன்.
இதுபற்றி எழுதும் போது அருகண்மையில் என்ற பதம் நினைவுக்கு வந்தது. அருகாமை, அருகண்மை, இவற்றைவிட அருகில் போதுமே பேராசிரியர் நன்னன் கூறுகிறார்.
அண்மையில் ஜெரால்ட் தூரலின் ' எ நியூ நோவா' படித்தேன்.
ஆஸ்திரேலியா, நீயூசிலாந்து, கயானா, கெமரூன் (ஆப்பிரிக்கா) , ரஷ்யா, அஸ்ஸாம், அர்ஜெண்டீனா (அர்ஹன்டினாவா? எதுசரி), பராகுவே இன்னும் பல நாடுகளுக்கு சென்று பல விலங்குகள், பறவை இவற்றுடனான தன அனுபவங்களை புத்தகங்களாக எழுதித்தள்ளியிருக்கிறார். விவரணப்படங்கள், பி.பி.சி, திரைப்படம் எதையும் விட்டுவைக்கவில்லை. கைக்குழந்தைக்குக்கூட விலங்குகள் பற்றிய புத்தகங்கள் தயாரித்திருக்கிறார். புதிய நோவா, கெமரூன், கயானா, அர்.. ....பயணங்கள் பற்றியது. சாகசம் நிறைந்த அனுபவங்களுடன் தான் செய்த தவறுகள், தவர விட்டவை, இவற்றையும் ஆவணப்படுத்தி நம்பகத்தன்மைக்கு அருகில் வருகிறார்.
ஜெரால்ட் தூரல் ஜம்ஷெட்பூரில் பிறந்தவர். அவருடைய ( கவனிக்க -அவரது- என்று எழுதுவது தவறு) ஆங்கில-ஐரிஷ் பெற்றோரும் இந்தியாவில்
பிறந்தவர்கள். தூரலின் சாதனைகள், இணையத்தில் இருக்கின்றன.
குதிரைகள் நடக்கும், ஓடும் வேகத்திற்கு ஏற்ப walk, trot, canter, gallop என்று ஆங்கிலத்தில் சொற்கள் இருப்பதுபோல் தமிழிலும் இருந்திருக்காதா என்ன. அவை என்ன என்று தெரிந்துகொள்ள ஆசை. தமிழார்வலர்கள்தெரிந்தால் சொல்லுங்களேன்.
daft ideas என்ற புத்தகம் நூலகத்தில் படிக்கக்கிடைத்தது. daft என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று அகராதியில் தேடினேன் ( ஆங்கிலம் - தமிழ்) கிடைக்கவில்லை.வினோத சம்பவங்கள் , கொடுநகைச்சுவை வகை சேர்ந்து சில (black jokes என்ற பெயர் என்னவோ எனக்குப் பிடிக்கவில்லை, black க்கு என்ன குறைச்சல்); இருப்பதிலேயே சுவாரசியம் குறைந்த இரண்டை எழுதியிருக்கிறேன். வினோத கண்டுபிடிப்புகள், வினோத வகை சம்பவங்கள், கொள்ளைகள், என்று கண்டபடி எழுதித் தள்ளியிருக்கிறார்கள்.
காட்டுக்கு இரண்டு. (அதான் எடுத்துக்காட்டுக்கு இரண்டு)
விலங்குகளின் உரிமை ஆதரவாளர்கள் இருவர், ஜெர்மனியின் கசாப்பு நிலையத்திலிருந்து பன்றிகளை விடுவிக்கப்பார்த்தார்கள். பாய்ந்து வெளியே வந்த 2000 பன்றிகளின் நெரிசலில் இருவரும் மிதிபட்டு மேலுலகு சென்றார்களாம்.
ஒரு கடையில் துப்பாக்கியைக் காட்டி கல்லாவிலிருந்த காசெல்லாம் தர மிரட்டி வாங்கிக்கொண்ட ஒருவன், மதுபான புட்டி ஒன்றைக் கேட்டான். காசாளர் உன்னைப்பார்த்தால் பதினெட்டு ஆகியிருப்பதாகத் தெரியவில்லை, உனக்கு எப்படித்தருவது என்று கேட்க, தன் ஓட்டுனர் உரிமத்தைக் காட்டியிருக்கிறான். உடனே எடுத்துக்கொடுத்த கடைக்காரர் அவன் போனவுடன் அவன் பெயரையும் முகவரியையும் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார்.
புத்தகத்தில் என்னைக் கவர்ந்த really daft laws சில
1. க்ளௌசெஸ்டர், இங்கிலாந்து:
வீட்டுரிமை சட்டத்தின்படி வாடகைக்கு அரசு வீடுகளில் குடியிருப்பவர்கள் 30 நாள்களாவது நோடீஸ் தராமல்இறக்கக்கூடாது.
2.டெக்சாஸ், யு.எஸ்.எ.
அண்மையில் மொழியப்பட்ட குற்றவியல் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தாங்கள் செய்யப்போகும் குற்றம்எப்படிப்பட்டது என்பதை வாய்வார்த்தையாகவோ, எழுத்துமூலமாகவோ குற்றம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்குமுன் கொடுத்துவிடவேண்டும். யாரிடம்- யாரிடம் செய்யப்போகிறார்களோ, அவர்களிடம்.
3. டென்னஸ்ஸி
தவளைகள் இரவு பதினொரு மணிக்கு மேல் கொரகொரப்பது சட்டவிரோதம்.
4. நியூயார்க் கட்டடத்திலிருந்து குதித்துவிடுபவர்களுக்கு தண்டனை உண்டு. மரணம்.
5. ஆண்கள் ஸ்ட்ராப் இல்லாத கவுன்கள் அணிவது ப்ளோரிடாவில் சட்டவிரோதம்.
என் நண்பர் தெரிவித்த ஒரு டாப்ட் ஐடியா:
விளக்கு, தலைவலி பாம் இவற்றைப் பயன்படுத்தினால்தான் தூக்கமே வரும் என்று %50 உம் , இவற்றின் பெயரைக்கேட்டாலே தூக்கம் போய்விடும் என்று %50 உம் ஆக இரண்டு மனிதக்கூட்டங்கள் இருக்கும்.
கல்யாணம் என்பது எதாவது ஒரு கூட்டத்திலிருந்து ஒரு ஆணும் மறு கூட்டத்திலிருந்து ஒரு பெண்ணும் செய்துகொள்வது ( ஏன் 50% என்று போடவில்லை - யோசிக்கவும்)
Monday, January 19, 2009
சேகரிக்கப்பட்ட ப்ரியங்கள்
ப்ரியங்களின் கலயத்தைக்
கொணர்ந்தது
பிசாசுகளின் இருள்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருக்கக் கேட்டுக்கொண்டு
இக்குவனங்களில்
சேகரித்த ப்ரியங்கள் அவை
கொடுபல்லியாய் நீண்ட
நேசத்தின் கரங்கள்
உன்னை நானாகவும்
என்னை நீயாகவும்
ஆக்கத் துடித்துப்
பிணைத்துக்கொண்ட
தருணங்களில்
தள்ளாடிய கலயங்கள்
காலியாகிவிட்டன
வேறு இடங்களில்
வேறு வனங்களில்
ப்ரியங்களை
சேகரித்துக்கொண்டிருக்கின்றன
பிசாசுகள்
வடக்குவாசல் டிசம்பர் 2008
இக்குவனம்-கரும்புத்தோட்டம்
Friday, January 16, 2009
ஒரு தகவல்
வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.
வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை
புத்தகத்தின் பெயர்
நாளை பிறந்து இன்று வந்தவள்
என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com
நன்றி
மாதங்கி
Wednesday, January 14, 2009
மலைகளின் பறத்தல்
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்
நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன
எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு
பலசமயங்களில்
இறங்குவதில்லை
சில பறவைகள்
உங்களைக் கண்டு
பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள்
வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது
தங்களால் யாரும்
உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை
இற்றுப்போகசெய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்
இன்று
யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
வடக்குவாசல் டிசம்பர் 2008
Tuesday, January 13, 2009
சன்னல் இல்லாத வீடு
மகனுடன் கோட்டை கட்டும்போது
அருகிலேயே விரலால்
வரைந்தாள் ஒரு சிறுமி,
பக்கத்தில் தங்கை.
வீடு வரைகிறாயா?
ஓம்.
அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை
இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்
சிறுமி சொனாள்.
அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?