Wednesday, September 16, 2009

வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் மூதாட்டி

மாற்று ஆடையும்
ஈரமா என்று
ஆயாசத்துடன்
கண்களை மூடினால்
போதும்
செங்குத்தாக அடுக்கப்பட்ட
புத்தகங்களிலிருந்து
கழன்று விழும்
எழுத்துகள்
ஒழுங்கு வரிசையின்றி
முட்டிமோதிக்கொண்டு
தம்தனித்த வாசத்துடன்
மூளைக்குள்
நுழைந்துவிடுகின்றன



தனித்த இரவுகளில்
வரும்
கனவுகளில்
வினாத் தாள்கள்
மீண்டும் மீண்டும் வருகின்றன
அதிலிருக்கும் எழுத்துகள்
அவரிடம்
கமுக்கமாகப் பேசுகின்றன
அவற்றின் நிறம்
ஆழமான
பித்தவெடிப்புகளால்
பிளவுண்ட தன் குதிகால்களில்
காணப்படும் குருதியின்
நிறத்தில் இருக்கிறது



சமன்பாடுகளின்
விளக்கங்களும்
வரைபடங்களும்
அதில்
கேட்கப்படுகின்றன
ஐநூறு சொற்களாலான
நீண்ட கட்டுரை
எழுதுமாறு
பணிக்கப்படுகிறார்



கையெழுத்து மட்டுமே
போடத் தெரியும் என்று
அவர் மன்றாடுவது
அவருக்கே கேட்பதில்லை
எழுத்துகள் முகமூடி
அணிந்துகொண்டுவிட்டதைக்
கண்டு
மை நிரம்பிய
பேனாவை நடுக்கத்துடன்
சுருக்கம் நிறைந்த விரல்களால்
பிடிக்கிறார்



எல்லாக் கேள்விகளுக்கும்
விடை தெரிந்திருப்பது
அதிகமாக்குகிறது
அச்சத்தை




உயிரோசை 7.9.2009

No comments: