Saturday, June 02, 2007

வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்

அலுத்துக் களைத்து அலுவலகத்திலிருந்து வருகிறீர்கள்.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் விரல்களால் பொத்தானை அமுக்குகிறீர்களா?

உங்கள் வீட்டில் ஒருவர் மற்றொருவருடன் அன்றைய நிகழ்ச்சிகளையோ, அனுபவங்களையோ குறித்துப் பேசும் போது வீட்டில் பின்னனி சத்தத்துடன்தான் பேசுவீர்களா?

வீட்டில் பிள்ளைகள் எதாவது ஐயங்களையோ, செய்திகளையோ சொல்லவரும்போது அல்லது சொல்லும்போது அடிக்கடி அப்புறம் ஆகட்டும் என்றோ அல்லது அவர்கள் கண்களைப் பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து வாயைத் திறந்து வார்த்தைகள் மட்டும் கூறுவீர்களா?


ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னணி இசை இருப்பது போல் உங்கள் வீட்டில் எல்லா நடவடிக்கைகளும் ஒளித்திரை பின்னணியில்தான் நடக்குமா?

சொல்லமறந்தேவிட்டேன், எடை கூடிக்கொண்டே போகிறது, வரவர கவனமே இல்லை, இந்த வாக்கியங்கள் அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்கின்றனவா?

இந்தக் கேள்விகளில் ஒரு சிலவற்றிற்கே ஆம் என்று பதில் சொல்லிவிட்டீர்கள் என்றால் பணம், நேரம், பாசம், அக்கறை, மகிழ்ச்சி இவற்றையெல்லாம் உங்களை அறியாமலேயே/அறிந்தே விற்று ஆபத்தை தினந்தோறும் வாங்கி வருகிறீர்கள் என்று அர்த்தம். இச்செய்தி ஆண், பெண் இருபாலார்க்கும் ஆகும்.

பழங்கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். எங்கேயோ கிடந்த புட்டியை ஒருவன் தெரியாமல் திறந்துவிட அதிலிருந்து வெளிப்பட்ட பூதம் வேலை தருவதை நிறுத்தினாய் உன்னை விழுங்கிவிடுவேன் என்று தன்னை விடுவித்தவனைப் பார்த்துக் கூறும். பூதம் நொடியில் வேலைகளை முடித்துவிட்டு தொந்தரவு தர இறுதியில் அலைகளை எண்ணச் செய்தானாம் அந்த மனிதன்.

நம் வீட்டிலும் ஒரு பெரிய மலை விழுங்கி பூதம் இருக்கிறது. தெரிந்தே ஆசையாய் விலை கொடுத்து வாங்கி பற்பல இணைப்புக்களும் கொடுத்து ஆதரித்து வருகிறோம்.

நமக்கு சொந்த வேலை எதாவது பிள்ளைகள் தொந்தரவின்றி செய்ய வேண்டுமா? வெகு சுலபம். பெட்டி எதிரில் சுட்டிகளை உட்கார்த்திவிட்டு நேரத்தினை வெட்டிச் செலவு செய்யக்கூடாது என்று நிகழ்ச்சி முடிந்தபின் சொல்லலாம். இது சரியா?

கதையில் பூதமாவது என்னைப் பயன்படுத்து என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டி தேமேன்னென்று இருந்து கொண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோர¨யும் இருந்த இடத்திலிருந்தே எப்படி ஆட்டிக் வைக்கிறது.

அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும். வீட்டுப்பணிகள் (ஆண் பெண் இருபாலாரும்தான்) நிகழ்ச்சிகளுக்கு இடையே (விடுமுறை என்றால் இன்னும் சிறிது கூட) நடக்கும். நடுவில் விளம்பரங்கள் வரும்போது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது வேறு எதற்காகவாவதோ போவது நடக்கும். விளம்பர இடைவெளியில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அப்போதுதான் பேசிக்கொள்வார்கள்.


குழந்தைகள் பார்ப்பார்கள்; சரிதான் பேசாமல் நாமும் இதில் என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்வார்கள். அவர்கள் ஒரு நொடி தயங்கினாலும் திரையில் வரும் காட்சி அல்லது குரல் அவர்களை நல்ல பிள்ளையாய் இழுத்து உட்கார்த்தி வைத்துவிடும்.

அப்புறம் பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்லை. அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள்.

பிள்ளைகள் சதா தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு நல்ல பொழுதுபோக்கு அமையவில்லை என்று அர்த்தம் (it means they are not properly engaged otherwise)
பிள்ளையைப் புத்தகம் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கவனம் சிதறிப் போகும்.

எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.இவர்களுக்கு இந்தக் கட்டுரை தேவையில்லை.

இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர் மட்டும் தொடர்ந்து படிக்கவும். பிடிக்காதவர்கள் என்னைத் திட்டிவிட்டு உங்கள் பணியைத் தொடரவும்.

என்ன செய்யலாம்?

1. தொலைக்காட்சியா? தாராளமாகப் பாருங்கள்/
2. பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுங்கள். உங்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்தில் எப்போதெல்லாம் வருகின்றன என்று குறித்து வைத்துக் கொண்டு, அதைக் கட்டாயம் பாருங்கள்.
3. பிள்ளைகளுக்கும் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதியுங்கள் (குறிப்பிட்ட நேரத்தில்)
4. இடையிடையே பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள். அப்போதுதான் அது பிள்ளைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியா என்பதை நீங்களும் சிந்திக்கலாம். குழந்தைகள் கேலிச்சித்திரம், குழந்தைகளுக்கான தொடர்கள் என்ற பெயரில் வரும் எல்லா நிகழ்ச்சிகளுமே குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைவதில்லை.
5. தரமானதொரு நிகழ்ச்சியை பிள்ளைகளுடன் பார்த்துமுடித்தவுடன் அவரவர் எழுந்து போய் விடாமல் ஓரிரு நிமிடமாவது அது குறித்துப் பேசுங்கள். அவர்கள் கருத்தைக் கேளுங்கள்/
6. நேரமிருந்தால் அவர்களுடன் இன்னும் விரிவாகப் பேசலாம். செய்திகள், நல்ல கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுக்கும் விருந்தாகும் டிஸ்கவரி சானல், நேஷனல் ஜியோக்ராபி·க், பயணச் நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடாதீர்கள்.
7. நிகழ்ச்சி எப்படித் தரப்பட்டது?
8. அதில் பங்கு பெற்றவர் கூறியவற்றைத் தவிர வேறு ஏதேனும் எண்ணம் எழுகிறாதா? நடக்குமா? . எங்காவது இதுபோல் இருக்குமா? உனக்கும் இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசையா? நூலகத்தில் பார்க்கலாமா? இதே விஷயத்தை நாம் எப்படி அணுகலாம்? இதைக் காட்டிலும் புதிய முறை ஏதேனும் இருக்கிறதா? போன்ற கேள்விகள் சிந்தனையைத் தூண்டும்.
9. எல்லாக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்காமல் சிலவற்றையாவது கேட்கலாம். அல்லது உங்களுக்கு புதிதாக எதாவது தோன்றினாலும் கேட்கலாம். வன்முறைக் காட்சிகளை அவர்கள் எதிரில் நீங்களும் பார்க்காதீர்கள்.
10. எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா? இந்த கேலிச்சித்திரம் பிள்ளைகளுக்குத்தேவையா? இது நிஜம் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்போதே நீங்களும் பக்கத்தில் இருந்தால்தான் கூற முடியும். நிஜ வாழ்க்கையில் எந்தப் பிராணியையும் வதைப்பது அறத்திற்குப் புறம்பானது என்று கூறுங்கள்.
சில மாதங்களுக்கு முன் சிங்கை தமிழ் முரசு ஆசிரியர் ஒரு பொது இடத்தில் பூனையை சிறுவர்கள் அடித்து இம்சைப் படுத்துவதைக் கண்டும் அவர்தம் பெற்றோர் கண்டிக்கவில்லையே என்று 'நமக்குள்ளே'யில் வருத்தப்பட்டிருந்தார்.
நகைச்சுவை என்ற போர்வையில் சில கேலிச்சித்திரங்கள் வன்முறையைக் கற்பிக்கின்றன. மனிதநேயம், மனிதாபிமானம் முதலியவற்றிற்குச் சவால் விடும் நகைக்ச்சுவையை நாம் ஆதரிக்கலாமா?
அதனால் குழந்தைகள் பார்க்கும் கேலிச்சித்திரங்களைக்கூட தேர்ந்தெடுத்துதான் அவர்களைப் பார்க்கச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது அதனால்தான் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்தால்தான் அவர்களை நல்ல முறையில் நாம் வழிகாட்ட இயலும்.
திரையில் காட்சிகளாகப் பார்ப்பவை மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றன.

இது குறித்து உங்கள் கருத்து?

சிங்கை தமிழ்முரசு 2001