Sunday, December 06, 2009

ஒவ்வொரு விடுமுறையில் உன்னை நேரில் சந்திக்க வரும் போதெல்லாம்,....

ஒரு குற்ற உணர்வு
உன் நரம்புகளில் ஊடுறுவதைக் காண்கிறேன்


கால்பாவ நினைத்து
தள்ளாடி விழும் ஒரு கைக்குழந்தையைப்போல
நான் விழுந்துவிடுவேனோ
என்று அச்சம் கொள்கிறாய்


உன்னையே சொல்லிக்கொண்டிருப்பேன்
எழுத நினைத்தேன்
அழைக்க நினைத்தேன்
என்று நீ
தடுமாறித் தடுமாறி
கரகரத்த குரலுடன்
இமைகளின் ஈரம் கனக்க
சொற்களால்
என்னைத் தூக்கிவிடப்பார்க்கிறாய்


ஒவ்வொரு புதிய நிகழ்வில்
தோய்ந்து வரும்
என் ஒவ்வொரு கடிதத்தையும்
நீ வாசிப்பதை மட்டுமல்ல,
'ம்' கொட்டுவதையும்
தலையசைப்பதையும்
புன்னகைப்பதையும்
நானிருக்கும் இடத்திலிருந்தே
காண்பதால்தான்
உற்சாகத்துடன் என்னால்
தொடர்ந்து எழுத முடிகிறது


சங்கடங்களைத் தூக்கி எறிந்துவிட்டு
வா
ஒரு சின்ன நடனம் ஆடுவோம்
நான் வேறுபலவும் சொல்வேன்
என் பாடலில்
சொற்களைக் கோர்ப்பது
என் கோப்புகளில் இருக்கும்
உன் நீண்ட மயிலிறகுக்கடிதங்கள்
போடும் குட்டிகள்தான்
என்பதையும் சேர்த்து


சொல்வனம் 2-10-2009