Wednesday, September 23, 2009

பச்சைப்பாம்பு

அசலா நகலா
எதையும் கண்டுபிடிக்க
முடியாதபடி இருக்கிறது
குளிரூட்டப்பட்ட இந்த
நிலவறைப் பேரங்காடியில்
அங்கங்கே தொட்டிகளில் அமர்த்தப்பட்டிருந்த
மலர்ச்செடிகள்


சென்ற வாரம்
காலியாக இருந்த
மரீன் பரேட்
அலுவலக வரவேற்பறையில்
இன்று திடீரென்று
வீற்றிருக்கிறது
ஒரு திப்பிலிப்பனை



முகமனுடன்
வரவேற்று
ஐயங்களைத் தீர்த்துவைக்கும்
தொலைபேசிக்குரல்
ஏற்கனவே
பதிவுசெய்யப்பட்ட
பதில்களை உடைய
நிரலியால்தான்
என்பது
வேறு ஒரு நாள்
தெரியவருகிறது



காலைச்சுற்றிவரும்
செல்ல நாய்க்குட்டியை
என்னிடம் காட்டி மகிழும்
பக்கத்துவீட்டுச் சிறுவன்
உணவு வில்லைகளை
அதன் வாயில் இட்டு
விசையை அழுத்துகிறான்
வாரத்திற்கு ஒரு முறை
சேமக்கலத்தில்
மின்னேற்றினால் போதும்
என்கிறான்


தாவரவியல் தோட்டத்தில்
லோர்னி பாதையில்
செண்பகச் செடிகளைப்
பார்த்துக்கொண்டிருந்தபோது
புதரடியில்
பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல

uyirosai 21-9-2009

3 comments:

maruthamooran said...

வாழ்க்கையின் கோலங்கள் நவநாகரீக உலகில் சடுதியாக மாறிச் செல்கின்றன. அதனை, மிகவும் இயல்பாக சொல்லியிருக்கிறீர்கள் தோழி. வாழ்த்துக்கள்.

G.S.Dhayalan said...

வாசிக்கும் ஒவ்வொருவரும் உறையக்கூடும்

priyamudanprabu said...

பச்சை வண்ண ரப்பர்குழாயின்
ஒருபகுதியைப் பார்த்துவிட்டு
கையில் எடுத்தேன்
இந்தக் கவிதை உறைந்துவிட்டது
என்னைப்போல
///

நாங்களும்தான்