Friday, November 12, 2010

நான் தொலைத்த தேன்சிட்டு

நான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்
முகம் சுளிக்காதவர் யாருமில்லை
என்று
வாம்போவா சாப்பாட்டுக்கடையில்
உன்னிடம் சொன்னேன்
சலசலக்கும் இலைகளின் ஊடே
தீவின் மஞ்சள் கறுப்புத் தேன்சிட்டு
இனிய குரலில் ஆமோதிக்கவும் செய்தது


கவனிக்கவில்லை, .........க்கு
உடல்நலமில்லை அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்
குப்பையைப் போட்டுவிட்டேன்
வெண்சுருட்டைக் கையில் வைத்திருக்கிறேன்
ஊதவில்லை, என் பெயர் சொல்லமாட்டேன்
அபூர்வமாய் என்னை மன்னித்துவிடுங்கள்
அவ்வப்போது முகமன் சொல்லும் தேன்சிட்டுகள்
இவையெல்லாம் சாலையில் நடந்தவாறே பணிபுரியும்
ஒரு சுகாதார அதிகாரிக்குத் தினமும் கிடைக்கும் பரிசுகள்
மறக்கமுடியாத பரிசு என்ன என்பதைத்
தப்பித்தவறிக் கேட்டுவிடாதே
மழை கொட்டும் இந்த விடியலில் அதை மீண்டும் நினைவுகூர
நான் விரும்பவில்லை


இருநூறு வெள்ளியைத் தவிர்க்க
ஒருவன் தலைதெறிக்கச் சாலையில் ஓடி
கிரீச்சிட்டு நிறுத்திய கனரக வாகன சக்கரத்தில் சிக்கி
வீறிட்டபோது
அதிர்ந்து கூவிய தேன்சிட்டை
நான் பிறகு பார்க்கவேயில்லை




2009 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசு சுய ஆட்சி பெற்று 50 ஆண்டுகள்
நிறைவடைந்ததன் நினைவாக ஐம்பது கவிதைகள் நான்கு தேசிய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நூலில் இடம்பெற்றது
(Fifty on 50, NAC Singapore)

2 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்லா இருக்கு!

priyamudanprabu said...

இருநூறு வெள்ளியைத் தவிர்க்க
ஒருவன் தலைதெறிக்கச் சாலையில் ஓடி
கிரீச்சிட்டு நிறுத்திய கனரக வாகன சக்கரத்தில் சிக்கி
வீறிட்டபோது
அதிர்ந்து கூவிய தேன்சிட்டை
நான் பிறகு பார்க்கவேயில்லை
///
நல்லா இருக்கு!