தாமரைப்பழம் போல் இருக்கிறது
தாத்தாவின் முதுகு என்கிறாள்
சாக்கி
எதையுமே கண்டுபிடிக்கமுடியாத
என் முகக்குறிப்பையும்
என் உடல் மீதுள்ள
கொப்புளங்களையும்
கணக்கிட்டுக்கொண்டே
வருகிறான்
கற்பாறை இடுக்கில்
பூத்த துளிரில் குடிவந்து
பல நூறு ஆண்டுகளுக்குப்பின்
மாபெரும் விருட்சம் ஆன பிறகும்
அதிலேயே வசித்து
அருகிலிருக்கும்
மலையின் குறும்பாறைகளை
உண்டும் வாழும்
ஒரு கிம்புருடன்
அவன் மனித முகத்தையும்
குதிரை உடலையும் கண்டு
குதூகலம் அடைகிறாள் சாக்கி
உன் முதுகில் ஏறிக்கொண்டு
வியாபாரம் செய்தால்
நான் ஒப்பிக்கும்
ஆங்கில வாக்கியங்களையும்
அமெரிக்க வெள்ளியில் நான் போடும்
கணக்குகளையும் விடவும்
வேகமாக வெளிநாட்டுப்பயணிகளைக்
கவர்ந்துவிடலாம்,
முடிவில்லா
டோன்லெ சாப் நதிஏரியை விடவும்
பெரிதான கூட்டம் வந்தாலும்
கவலையில்லை
அண்டை வீட்டுத் தோழர்கள்,
தம்பி தங்கைகள் புடைசுழ
அவரவர் பொருள்களுடன்
சேர்ந்துதான் வாடிக்கையாளரிடம்
செல்வோம்
மூன்று தலையளவு
பெரிய தலையுடன் பிறந்த
என் கடைசித் தம்பியை
அங்கோர் தோம்
நுழைவாயிலோரம் கிடத்திக்கொண்டு
மரச்சாமான்கள் விற்று வரும்
அம்மா இனி கவலைப்பட வேண்டாம்
தாத்தா என்கிறாள்
படகு வலித்த கைகளால்
சாக்கியின்
தலையைத் தடவிக்கொண்டே
பார்க்கிறேன்
தாமரைப்பழங்களின்
முத்துக்களைத் தோண்டித்தின்பதைப்போல்
கொப்புளங்களைத் தின்று கொண்டிருக்கிறான்
இந்த கிம்புருடன்
சாக்கி எல்லோருக்கும்
ஓரு வியப்பைத்தர தன்னை
ஆயத்தப்படுத்திக்கொண்டு
அமர்கிறாள்
படகுவீட்டிலிருந்து
நீரில் இறங்கி
படகுப்பள்ளிக்கு
இவன் நீந்தி வருவதை
எண்ணி சிரித்தவளாய்
(அங்கோர் தோம்- கம்போடியக் கோவில்)
அகநாழிகை
2009.12.01
தாமரைப்பழம் - கவிதை
You are
person read this...
Subscribe to:
Post Comments (Atom)





0 comments:
Post a Comment