Sunday, November 28, 2010

அந்த மலர்க் கூட்டம்

வீட்டிற்குக் கிளம்பிய தோழியை ஜூரொங் பேருந்து நிலையம் வரை சென்று வழியனுப்ப என் புளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது, "குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ?" மலர்ந்த முகத்துடன் ஒரு குட்டி மலர்கூட்டம் என்னைப் பார்த்து கேட்க, ஹலோ யங் லேடீஸ், ஐ ஆம் பைன், என்று உற்சாகத்துடன் நான் உரைக்க, அவர்களைக் கடந்து சென்ற பிறகு என் தோழி வசந்தி, என்ன மீனா, இவர்கள் யார், என்று புதிராக வினவினாள்.



"இவர்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த குழந்தைகள், இதோ அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்," என்றேன்.


நான் ஒன்றும் பள்ளி ஆசிரியரோ பள்ளியில் பெற்றோர் உதவிக்குழுவின் உறுப்பினரோ கிடையாது. என் குழந்தைகளும் வேறு பள்ளியில் படித்துவந்தார்கள். பின் எப்படி இத்தனை பள்ளி மாணவிகள் எனக்கு நட்பாயினர். அது ஒரு சுவையான கதை. சில மாதங்களுக்கு முன் நான் முதுகலைப் பட்டப்படிப்பிற்குச் சேர்ந்து தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே அறையில் படித்துப் படித்து சற்றே சலிப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் எங்கள் அடுக்ககத்தின் கீழ்தளத்தில் சிமெண்ட்டில் செய்து வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலியில் அமர்ந்து காற்றாடப் படிக்கலாம் என்று கீழே புத்தகமும் கையுமாக நான் கீழே வந்திறங்கி வசதியாக அமர்ந்து பாடங்களைப் படிக்கத் துவங்கினேன். மணி மதியம் நான்கு இருக்கலாம். என் பிள்ளைகள் மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.
நான் படிக்கத் துவங்கி பத்து நிமிடங்கள் கூட ஆகியிராது, திடீரென்று ஒரு சிறு ஆரவாரம்; நிமிர்ந்து பார்த்தேன்; ஏழெட்டுப் பெண்குழந்தைகள், பள்ளிச் சீருடையில் என்னை நோக்கி, புத்தகப்பையுடன் வந்து கொண்டிருந்தனர். மலாய், சீன, இந்திய மாணவிகள் என்று கலந்திருந்த நட்பு வட்டம் போலிருந்தது அது.


நான் உட்கார்ந்திருந்த பெஞ்சு ஒரு பெரிய அரை வட்டத்தினதாக இருந்தது. அதன் நடுவில் நான் அமர்ந்துகொண்டிருந்தேன். நான் தொடர்ந்து படிக்கத்துவங்கினேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஓர் அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது. உரத்த குரலில் ஏதோ பேசியவாறு என் இரு புறமும் அப்பெண்கள் சூழ்ந்து அமர்ந்து கொண்டனர். ஒரு வேளை அவர்கள் பள்ளி விட்டவுடன் தினமும் இங்கு வந்து அமர்ந்து பேசுவார்கள் போலிருக்கிறது; சரி, வேறு
எங்காவது போகலாம் என்று நினைத்தேன்.


"ஹேய், வாட் ஆர் யூ ரீடிங்?" என்று அலட்சியமாக கேட்ட பெண்குழந்தைக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கலாம். அடுத்த வினாடி மற்றொரு சிறுமி ஒரு வெண்சுருட்டைப் பையிலிருந்து எடுத்து என்னவோ மிகவும் பழக்கமானது போல் பற்றவைத்து என் முகம் அருகில் புகையை விட்டாள்.


அடுத்த வினாடி அங்கிருந்து எழுந்து சென்று
விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடுத்தேன்.
மனமே சற்று நிதானமாக இரு என்று பரபரத்த என் மனதிற்கு ஒரு சிறு கடிவாளம் போட்டேன். முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக்கொண்டேன். எங்களுக்குள்
நிகழ்ந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் என்பதால் அதைக் கூடுமானவரையில் தமிழில் உங்களுக்குத் தருகிறேன்.


நான் உற்சாகமான குரலில், "ஹாய் யங் லேடீஸ், நான் பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்; காற்றாடப்
படிக்கலாம் என்றுதான் இங்கு வந்தேன்," நட்போடு புன்னகைத்தேன்.

"அலோ, நான் வின்னி," என்றாள் முதலில் என்னை அதட்டலுடன் விசாரித்த சிறுமி.

சிறுமிகளில் ஓரிருவர் தத்தம் பெயர்களைச் சொல்லி என்னிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் ஏதும்
பேசாது இருந்தனர்.

"என்ன, பள்ளி விட்டதும் தோழிகளுடன் சந்தோஷமாக அரட்டையா, " வேடிக்கையாகக் கேட்டேன்.

அப்போது என் முகம் அருகில் புகை ஊதிய சிறுமி சற்று நகர்ந்து கொண்டு வெட்கத்துடன் நெளிந்ததை கவனித்தாலும் பார்க்காததுபோல் இருந்தேன்.

அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஏழு பேரும் தத்தமது பெயரைக் கூறி, தங்கள் வகுப்பு, தங்கள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர்.
உயர் நிலை ஒன்று படிக்கிறார்களாம். பள்ளி நேரம் முடிந்த பின் இங்கு அல்லது எதாவது ஓர் இடத்தில் அரட்டை அடித்துவிட்டுத் தான் போவார்களாம்.


என்ன படிக்கிறீர்கள் ?

இலக்கியம்

உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, கணவர் என்ன செய்கிறார், வேலைக்கு போகிறீர்களா, சரமாரியான கேள்விகள்.


"எங்களுக்குத்தான் வேறு வழியில்லை, நீங்கள் எதற்கு படித்துக் கஷ்டப்படுகிறீர்கள். வேலைநேரத்திற்குப் பின்
ஷாப்பிங், டி.வி. என்று நேரத்தைச் செலவழிக்கலாமே?" இது கேத்தி


"இந்த வயதில் எதற்குப் படிக்கிறீர்கள்"- இது அனிதா

"நான் புகைப்பதை நீங்கள் ஆட்சேபிக்கப் போகிறீர்களா?- செல்வி ஐயத்துடன் கேட்டாள். அவள் பின்னால் இருந்த
ரீகா அடுத்த வெண்சுருட்டை எடுத்துக்கொண்டிருந்தாள்.


"கட்டாயம் ஆட்சேபிக்க மாட்டேன். ஏனென்றால் நீங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல; உங்களுடன் பேசியதில் நீங்கள் புத்திசாலிக் குழந்தைகள் என்பதை அறிந்து கொண்டேன்; நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பித்தான் இப்படிச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, " சிறு புன்னகையுடன் நிதானமாகக் கூறினேன்.


"ஆம், சரிதான், நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் ஆண்ட்டி, என்றார்கள் ரிகானாவும் பர்வீனும். எங்கள் வீட்டில் இன்று காலை பெரிய சண்டை, என்னை அவர்கள் தங்கள் இஷ்டப்படி
நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்; என்ன அநியாயம்
தெரியுமா?" ஒருத்தி பொருமத்துவங்கினாள்.


அவள் மேலே பேசியதிலிருந்து நான், அவர்கள் என்ற அவள் அருமைத்தாயையும் தந்தையையும் குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.


"நீ சுதந்திரத்தை எதிர்பார்க்கிறாய் இல்லையா?"


"ஆமாம்," என்று அவள் மட்டுமன்றி எல்லோரும் ஒட்டுமொத்தமாக தலையாட்டினார்கள்.


"எப்போதுபார்த்தாலும் படி, படி, படி, இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்கு- தொலைக்காட்சிப் பார்க்காதே, கணினியில் விளையாடிக்கொண்டே இருக்காதே, என்று சதா ஒரு தொணதொணப்பு; அவர்கள் மட்டும் நன்றாக பார்க்கிறார்கள், நாங்கள் துறவி மாதிரி இருக்க வேண்டுமாம்."



"வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் ஒரே டார்ச்சர்; அவள் இப்படி படிக்கிறாள், இவன் இவ்வளவு மதிப்பெண்
வாங்குகிறான், உனக்கு என்ன கேடு- இன்னும் நிறைய பயிற்சித் தாள் செய்து பழகு; ஆயிரம் கணக்கு போட்டால் தான் நூற்றுக்கு நூறு வாங்கலாம்- இது கேத்தி, வின்னி, செல்வி, பர்வீன், அனிதா, ரீகா, ரீகானா என்று எல்லோரும் ஒட்டு மொத்தமாக மூக்கால் அழுதார்கள்".


"கொஞ்சம் படிப்பைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு வேறு எதாவது பேசலாமா?"


சட்டென்று எல்லார் முகமும் பிரகாசம் அடைந்தது.

"உங்களுக்கு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இல்லையா ஆண்ட்டி?-" ஒரு துடுக்குக்காரியின் கேள்வி.


"இருக்கிறார்கள். உங்கள் வயதுதான், அதனால் தான் உங்களுடன் பேச எனக்கு ஆர்வம் இருக்கிறது"


அதற்குள் இரண்டு இளசுகள் களுக்கென்று சிரித்துக்கொண்டனர். " ஏ, சொல்லாதே, சொல்லாதே", அனிதா


கண்சாடைகாட்டினாள். மற்றொருவள் " ஆண்ட்டி, உங்களை இந்த பெஞ்சில் பார்த்தவுடன், இங்கிருந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான்
மறு வேலை என்று பேசிக்கொண்டாள் இவள்,"


"அப்படியா? சரி உங்களில் யார் யாருக்கு படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் அதாவது விளையாட்டு, நாடகம், பாட்டு, ஓவியம்
முதலியவற்றில் ஆர்வமுள்ளது; அதெயெல்லாம் சொல்லுங்கள் பார்க்கலாம்"


"எனக்கு சீன டிபேட்( சொற்களம்) என்றால் உயிர்" -துள்ளினாள் வின்னி.


"இவள் சென்ற ஆண்டு இறுதிச் சுற்று வரை போனாள், கடைசியில் பரிசு கிடைக்கவில்லை தோற்றுவிட்டாள்," என்றாள் பக்கத்திலிருந்த கேத்தி;


பளிச்சென்றிருந்த வின்னியின் முகம் உடனே வாடிச் சோர்ந்து போனது.


"என்ன இறுதி சுற்று வரை சென்றாளா?" குரலில் குதூகலத்துடன் வியப்பையும் வரவழைத்துக்கொண்டேன். வரவழைத்துக்கொண்டேன் என்று சொல்லுவதுகூட சரியன்று, உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது;
மேடையில் ஏறினாலே எனக்கு கைகால்கள் மிகவும் உதறல் எடுக்கும். பரவாயில்லை இந்த சிறுமிக்கு நல்ல துணிவுதான்.



"மேடையில் ஏறி பேச முதலில் மேடைதைரியம், வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறன் எல்லாம் வேண்டும்.
அதிலும் சொற்களம் போன்ற தொடர் பேச்சுப்போட்டியில் நீ இறுதிச்சுற்று வரை வந்துள்ளாய் , நீ பெரிய திறமைசாலிதான் வின்னி; இந்த சிறு வயதில் மூன்று சுற்றுகளில் வென்றிருக்கிறாய் ".




"ஊம், என்ன செய்வது எல்லாம் என் விதி, உங்களைப் போன்ற அம்மா எனக்கு கிடைத்திருக்கக்கூடாதா; நான்
தோற்றுவிட்டு வந்தவுடன் என் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா? எனக்கு தெரியும், நீ சொற்கள பயிற்சி வகுப்புக்குச் சென்றதெல்லாம் வீண்வேலை; முதலில் இந்த வெட்டித்தனத்தை நிறுத்து, படிப்பை ஒழுங்காகப் படி,
என்றார்கள், " என்று கூறி நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அழத்துவங்கினாள்.




பதினான்கு வயதுச் சிறுமி பேசுவதைக் கேட்டு நான் முதலில் அதிர்ந்து போனாலும் என் மனம் அந்தக்குழந்தைகாக வருந்தியது நிஜம். தோற்றதற்காக அல்ல, அந்த தோல்வியில் குழந்தைக்கு தோள் கொடுக்க பெற்றோர் தவறலாமா? என்றாலும், நினைத்ததை நான் உடனே சொல்லவில்லை;



சில வினாடிகள் கழித்து நான், "வின்னி, நீ, பரிசு வாங்காத ஏமாற்றத்தில்தான் அம்மா திட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டு நீ சற்று நேரம் வேறு வேலையில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பாயே, " என்று மென்மையாக கேட்டேன்.




வின்னி தலையை குனிந்துகொண்டாள்; "இல்லை ஆண்ட்டி, நான் அறைக்கதவை அறைந்து சார்த்திவிட்டு, கோபத்தில் கத்திக்கொண்டிருந்தேன்; அப்புறம் என்ன அடிக்கடி சண்டை வருகிறது, இது இல்லை என்றால் அது மொத்தத்தில் எப்படியோ சண்டை எதற்காகவோ வந்துவிடுகிறது ".




"ஊருக்குத்தான் உபதேசம், நான் பல் விளக்காமல் காபி குடித்ததற்கு உடல்நலக்கேடு வரும் என்று என் அப்பா என்னை கன்னத்தில் அறைந்தார். அவர் சங்கிலித்தொடர்போல் புகை பிடிக்கிறார். இது தவறில்லையா? இப்போது நான்
புகைபிடிக்கிறேன், என் அப்பாவால் எதுவும் செய்ய இயலாது" இது ரீகா




"ஒருநாள் ஜாக்கிசான் படத்தின் திரைக்கதையை இவளுடன் பேசிக்கொண்டே இருந்ததால் வீட்டிற்கு நேரம் கழித்துப் போனேன்; நான் ஆனமட்டிலும் கெஞ்சியும் என் அம்மா நம்பவில்லை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா நான் ஆண் சினேகிதனுடன் சுற்றிவிட்டு வந்து பொய் சொல்கிறேனாம் ; நட்பு என்றால் என்ன என்பதே, இவர்களுக்குத்
தெரியாது, அப்புறம்தானே ஆண்பெண் வித்தியாசமெல்லாம் " -செல்வியின் கண்ணில் கண்ணீர்.



மாறி மாறி அந்த குழந்தைகள் தங்கள் குமுறல்களை கொட்டக் கொட்ட நான் அதிர்ந்து போனேன். பால்வடியும் இந்த முகங்களுக்குள் இத்தனை போராட்டமா?


"ஆண் நண்பர்களிடம் பழகுவது தவறா ஆண்ட்டி?"


"ஆணோ பெண்ணோ, உங்கள் நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் முடிந்தால் அவர்கள்
குடும்பத்தினரையும் உங்கள் பெற்றோருக்குத் தெரிந்திருந்தால் நலம் "


"ஆண்ட்டி எங்களையெல்லாம் கெட்டகாரியம் செய்யும் பெண்கள் என்றுதானே
நினைக்கிறீர்கள் உண்மையைச் சொல்லுங்கள்".



நான் என் முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டேன்; " உண்மையைச் சொல்லுகிறேன். நான் சொல்லி முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும்".

"நீங்கள் எல்லோரும் டீசண்டான குழந்தைகள்; புத்திசாலிகள், குறிப்பாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள், " என்றவாறு மெதுவாக நிறுத்தினேன்.



அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மட்டுமின்றி ஒரு கெஞ்சுவதுபோல் பார்வை, பாருங்கள் மூன்றாம் மனிதரான நீங்கள்கூட எங்களை சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள், என்பது போல்...
இந்தக் கதையை கேட்கும் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைகளின் கண்களில் புத்தொளியைப் பார்த்தேன்.


"உங்கள் சாதனைக்காக காத்திருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமல்ல குழந்தைகளே,...".


"நீங்களா ஆண்ட்டி?" -அதே துடுக்குக்காரியின் குறும்பு விடவில்லை


"ஆமாம் பின்னர் இல்லையா? நீங்கள் என் நண்பர்கள் அல்லவா; என்னை விட இன்னும் பெரியது"



"வேறு யார் ஆண்ட்டி, எங்களுக்காக காத்திருப்பது?"


"தோழிகளே நம்நாடுதான் அது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்; உங்களைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள இளையர்கள் கையில்தானே நாம் சிங்கப்பூர் இருக்கிறது,"



"நான் என்ன செய்துவிட முடியும் ஆண்ட்டி?"


'சொற்களம் என்ற சக்கர வியூகத்துக்குள் நுழைந்த வின்னி நாள் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆகலாம். பூப்பந்தைப்
பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேத்தி அதில் தனிக்கவனம் செலுத்தினால், நாடு ஒரு பூப்பந்து தாரகையைப் பெறலாம், மேலும் பூப்பந்து பயிற்றுவிப்பாளராகலாம், இதோ இடையிடையே நகைச்சுவையோடும்
சாதூர்யமாகவும் கேள்வி கேட்கும் அனிதா பத்திரிகை நிருபராகவோ ஆசிரியராகவோ வரலாம். ரீகா மருத்துவராகலாம், செல்வி ஓவியராகலாம் கணிப்பொறியில் கேலிசித்திரங்கள் வடிவமைத்து சிறந்த கலைப்படம் உருவாக்கி விருது வாங்கலாம்,
குறும்படங்கள் எடுக்கலாம், பாட்டில் ஆர்வமுள்ள ரீகானா காராவோக்கே முறையில் இன்னும் பயிற்சிசெய்து பாடகி ஆகலாம், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமுள்ள பர்வீன்
சிறந்த எழுத்தாளராகி பல புத்தகங்கள் எழுதலாம்'
அவர்கள் என் மதிப்பீட்டைக் கேட்டு வியந்து போய் பேச்சடைந்து போய்விட்டார்கள்.
"தனித்திறமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் கட்டாயம் இருக்கும். உங்களது தனித்திறமைகள் உங்களுக்கு தெரிந்திருப்பது உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுகிறது. அதை வளர்த்துக்கொள்ளுங்கள். படிப்பு என்பது அடித்தளம்; தேவையானால் கூடுதல் பயிற்சிக்குச் செல்ல ஆசிரியர் பெற்றோர் உதவியை
நாடுங்கள், அது உங்களுக்கு ஏற்ற பாதையைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டும்".




"இதோ நான் பார்க்கத்தான் போகிறேன். உங்கள் ஒவ்வொருவரிடமும்
ஒரு சாதனையாளர் இருக்கிறார். அது நமது நாட்டுக்குத் தேவை. சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள், அவர்களுக்கும் பல தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன. சரித்திரம்
படியுங்கள் சரித்திரம் படைப்பீர்கள் இது நிச்சயம். எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.
எந்த இடர் வந்தாலும் அறிவையும் மனதையும் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும் ".



"நாங்கள் சாதாரண மாணவிகள் ஆண்ட்டி, நாங்கள் பாடங்களில் தொண்ணூறு நூறு எல்லாம் வாங்கியதில்லை; எழுபது அறுபது சில சமயம் ஐம்பது, சில சமயங்களில் தோற்றுக்கூட இருக்கிறோம் "-இது செல்வி


"சாதனை மாணவி அல்லது மாணவன் என்று யாரும் பிறப்பதில்லை குழந்தைகளே; சாதாரண மாணவிதான் சாதனை மாணவி ஆகிறாள்; என்னால் முடியும், எங்களால் முடியும், நம்மால் முடியும் என்று
நம்புங்கள்; உங்களால் எதுவும் முடியும். மாணவர் சக்தி மகத்தான சக்தி". "நாட்டுக்கு உங்களைப்போன்ற துடிப்பான இளம் கைகள் தேவை தெரியுமா. ஒரு நல்ல நட்பு வட்டத்துள் இருக்கிறீர்கள்; உங்கள் திறமைகளை வளருங்கள். வருங்கால சிங்கப்பூருக்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்"



"கட்டாயம் ஆண்ட்டி, நான் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம்", என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்த அந்த மலர்கூட்டத்தில் நானும் கண்கலங்கிப் போனேன்.



"ஆண்ட்டி, வீட்டில் தினசரி சண்டை வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வருகிறது, அதற்கு நாங்கள் என்ன செய்வது?"



நிமிர்ந்து பார்க்கிறேன், வாஸ்தவமானக் கேள்விதான்.
இந்தக் குழந்தைகள் என்னிடம் கொட்டிய தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை மனதினுள் நினைவு கூர்ந்தேன்.



"உங்கள் அம்மாவும் அப்பாவும் உழைப்பது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான், வேலைப் பளு காரணமாக அவர்கள் எதாவது கோபத்தில் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். பெற்றோரிடம் உங்கள் அன்பை அடிக்கடித் தெரிவியுங்கள். உங்கள் அம்மா அப்பாவிற்கு எதாவது ஆபத்து என்றால் எப்படி துடித்துப்போவீர்கள்?"




"சரியாக சொல்கிறீர்கள், ஆண்ட்டி, என் அம்மாவிற்கு சென்ற ஆண்டு விடுமுறையில் ஒரு சிறு அறுவைச்
சிகிச்சை நடந்தபோது நான்தான் பொறுப்பாக வீட்டில் இருந்து தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொண்டேன். என் அம்மா
வீடு திரும்பியவுடன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்-" இது கேத்தி




"உன் அம்மா உங்கள் வீட்டிற்குத் தானே இரவு ஷிப்ட்டை ஏற்றுக்கொண்டு அயராது உழைக்கிறார். உன் தந்தை இரண்டு இடங்களில் பணிபுரிவதாகச் சொன்னாய் ரீகா; உங்களுக்கு கைச்செலவுக்குக் கூட பணம் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது. அதை புகைப்பதற்கு செலவழிப்பதா, அல்லது நல்ல வழியில் செலவழிப்பதா என்பது உங்கள் கையில் உள்ளது. வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்"




"ஆண்ட்டி, இனி நாங்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்பட போகிறோம்" என்று என்னிடம் உறுதி கூறியது மட்டுமல்லாமல் அடுத்து சில நாட்கள் கழித்து அவர்களை நான் பூங்காவில் சந்தித்த போது ஓடி வந்து தங்களது சிறு சிறு முன்னேற்றங்களைக் கூட தெரிவித்தார்கள். வளமான விதைகள் வளமான விருட்சங்களைத் தரும் என்பது உண்மை ஆண்ட்டி; சரித்திரம் படைப்போம்; சாதனை புரிவோம் என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறிய போது அவர்கள் கண்களிலும் அந்த உறுதியைக் கண்டு மனம் பூரித்தேன். இதுதான் நடந்த கதை.




தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன். என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தபோது பார்க்கத் துவங்கியவள் இன்னுமா அணைக்காமல் இருக்கிறாள், எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது. இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன்.

1 comment:

வினோ said...

/ தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன். என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள். தோழி வந்தபோது பார்க்கத் துவங்கியவள் இன்னுமா அணைக்காமல் இருக்கிறாள், எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது. இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன் /

:)