Friday, October 21, 2005

பெரிதினும் பெரிது கேள்

பெரிதினும் பெரிது கேள் - சிறுகதை

சிங்கப்பூரின் அந்த மிகப்பெரிய மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த யுகனேஸ்வரி, விரைவாக நடந்து நொவீனா நிறுத்தத்தில் எம். ஆர். டி. யில் பயணித்து தெம்பனீஸில் இறங்கி ப்ளோக் 320 தின் இரண்டாவது தளத்தில் இருந்த அந்த ஈர றை வீட்டில் நுழைந்த போது தொலைபேசி மணி ஒலித்தது. உடனே எடுத்து பேச,

அவள் அறைத்தோழி அலின் வாங்கின் தந்தைதான். அவரிடம் மரியாதை நிமித்தமாகப் பேசி, அன்று அலினின் ஷிப்ட் நேரம் மாற்றப்பட்டிருப்பதை பணிவுடன் தெரிவித்தாள். அவளுக்கு நன்றி தெரிவித்த திரு டேவிட் வாங், "ஹவ் ஆர் யூ மை சைல்ட்?" என்று அவளை விசாரித்துவிட்டு, அவளுடனும் இரண்டு வார்த்தை அன்புடன் பேசிவிட்டுத்தான் தொலைபேசியை கீழே வைத்தார். அந்த கரிசனம் கூட கிஷ்கிந்தனுக்கு இல்லையே. அவனால் தானே நிரந்தரமாக வெளியே வர நேர்ந்தது. அது சார்ஸ் சிங்கப்பூரில் துவக்கத்தில் இருந்த நேரம். மருத்துவமனையிலிருந்து கிளம்புவதற்கு முன் தாதியர்(நர்ஸ்) அறைக்குச் சென்று சுத்தமாக குளித்து வேறு உடை அணிந்து வந்தாலும், மீண்டும் குளித்தாள். கவலைகளையும் அழுக்குகள் போல் நினைத்து கழுவி விட வேண்டும். சூடாக தேனீர் தயாரித்துக் கொண்டு, குடிக்கையில் தன் சொந்த வீட்டில் கூட இல்லாத உரிமை இங்கு இருப்பதுபோல் அவளுக்குத் தோன்றியது.
சில காலம் முன்புவரை சார்ஸ் பாதிப்பில் இருந்த பிரிவில் அல்லாது வேறு பிரிவில் அவள் பணி செய்து கொண்டிருந்தாள்; இருந்தாலும் பல தாதியர் செய்தது போல் போல் வீட்டில் குழந்தைகள் இருப்பதால், பொறுப்புணர்வுடன் தன்னைத்தானே தனிமைப் படுத்திக்கொண்டு தாதியர் குடியிருப்பில் தங்கத் துவங்கினாள். பெயருக்குக் கூட கிஷ்கிந்தன் அவளை ஏன் போகிறாய் என்று கேட்கவில்லை. தனக்கு வரும் வருமானத்தில் பெரும்பகுதியை தங்குமிடம் மற்றும் உணவு முதலியவற்றுக்கு பெற்றுக்கொண்டவனுக்கு பாசம் எங்கிருந்து வரும்.
சார்ஸ் நோயாளிகளை கவனிக்கும் பிரிவில் தாதியாக பணிபுரிந்த மோளி கருவுற்றிருந்ததால், யுகனேஸ்வரி தானாகவே விருப்பம் தெரிவித்து அந்தப் பகுதிக்கு பணிகளை மாற்றிக்கொண்டாள். அன்று மனதை உருகவைக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது. ஸார்ஸினால் தீவிர பாதிப்படைந்த ஒரு அம்மையாருக்கு சிகிச்சை செய்ய முதலில் அவரது தொண்டைச் சளியை எடுத்து பரிசோதனை சாலைக்கு அனுப்ப வேண்டும். அதற்கு முந்திய நாள்தான் சிகிச்சை அளித்த ஒரு மருத்துவரும், இரு தாதிமார்களும் நோய் தொற்று ஏற்பட்டு உயிர் துறந்திருந்தனர் என்ற நாளிதழ்ச் செய்தி உலகில் அனைவரையும் கலங்கச் செய்தது.
"தொண்டையிலிருந்து சளியை யார் உறுஞ்சு குழாய் மூலம் எடுக்க முன் வருகிறீர்கள்?" என்று தலைமை மருத்துவர் ஜான் டேவிட் லாம் கேட்டபோது அடுத்த வினாடி கையுயர்த்திய அந்த வார்ட் தாதியர் அனைவரையும் பார்த்து மருத்துவர் லாம் கண்கலங்கிவிட்டார். அந்தத் தாதியரில் பலருக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் வேறு இருந்தது.
கடமையுணர்வுடன் ஒரு துளி முகஞ்சுளிப்போ அருவறுப்போ இன்றி செயல்பட்ட அந்த அந்த தாதியரும், பரிசோதனைச்சாலை பணியாளர்களும், துப்புரவு பணியாளர்களும் , மருத்துவர்களையும் பற்றி சார்ஸ் நோய் தீவிரமடைந்த அந்த அம்மையாரின் உணர்வுபூர்வமாக நன்றியைக் காட்டிய முகத்தை மறக்கத்தான் முடியுமா. "நீங்கள் எல்லோரும் மனிதர்களே அல்ல, கடவுளின் பிரதிநிதிகள்," என்று பல முறைசொல்லி அவர் விட்ட கண்ணீர் அவர் உயிர் பிரியும் முன் அவரது கண் தேங்கியிருந்தது அன்பும் நன்றியும் மட்டுமே.
ஞாயிறு அன்று வீட்டிற்கு சென்றபோது அம்மாவிடம் மனம் பொங்கி சொன்னாள். அண்ணன் கிஷ்கிந்தன் ' ரௌத்திரமடைந்தான். " யூகி, முட்டாள் பெண்ணே, இந்த மருத்துவமனையில் வேலையை விட்டுவிடு" என்று கடுமையாக கூச்சலிட்டான்."இதெல்லாம் எதிர்பார்க்காமலா தாதிப்பயிற்சியில் சேர்ந்தேன்" என்ற அவளை அவன் பேச விட்டால்தானே. " என் வீட்டில் நான் சொல்வதைக் கேட்டு கீழ்படியாவிட்டால், வீட்டைவிட்டு நிரந்தரமாக வெளியே போ, என்று கூச்சலிட்டான். அப்போது கூட அவளுக்கு போகவேண்டும் என்ற உந்துதல் வரவில்லை ஆனால் காரணமேயில்லாமல் உதவி மருத்துவர் அரவிந்தனை வம்புக்கு இழுத்து அவமானப்படுத்தினான்.
"இவளை தாதியர் பயிற்சியில் மேல் படிப்பு படிக்க வைத்துவிட்டானில்லையா, அவன் சொல்லுக்குத்தான் இவள் ஆடுவாள். திருமணத்திற்குப் பிறகு இவளை அமெரிக்காவோ ஐரோப்பாவோ வேலைக்கு அனுப்பி நிறைய சம்பாதிக்க வைப்பான், இவள் பணத்தை அள்ளிக்கொள்வான். பணத்திற்குத் தானே காதல் , கத்தரிக்காய் என்று பேசுகிறான்". தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவராகவும், அவள் மனம் கவர்ந்தவனாகவும் இருந்தான் அரவிந்தன்.
தாதியாகச் சேர்ந்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தன் வருமானத்தைப் பெற்றுக்கொண்ட அண்ணன் இன்னும் இரு ஆண்டுகள் கழித்துதான் திருமணம் என்று கூறியதைக்கூட ஒப்புக்கொண்டிருந்தாள். அரவிந்தனைக் கேவலப்படுத்திப் பேசியதை அவளால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. சற்று நேரத்திலே தன் உடைமைகளை எடுத்து, எஸ். எம் எஸ் சில் சகக் கூட்டாளியான அலைனை தொடர்பு கொண்டு அலன் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்டு அம்மாவிடம் விடைபெற்றபோதுகூட கிஷ்கிந்தன் சாப்பிட்டுக்கொண்டிருந்த ஊடான் புட்டிலிருந்து கூட பார்வையை விலக்கவில்லையே,கனத்தமனதுடன் நடந்து அருகில் இருந்த பேரங்காடிக்கு முன் இருந்த வாடகைகாடி நிறுத்துமிடத்திற்கு வந்து, காடியில் பயணித்து இறங்குகையில் அவள் ஒரு தாதியாக சார்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மருத்துவமனையில் பணிபுரிகிறாள் என்பதை அறிந்துகொண்ட அந்த ஓட்டுனர் அவளிடம் அவள் நீட்டிய பத்து வெள்ளியை வாங்க மறுத்ததுமட்டுமன்றி, அவள் சேவையைப் பாராட்டினார். அவளும் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, காடியிலே குறிக்கப்பட்டிருந்த அவரது முழுப் பெயரைப்பார்த்தாள் மகம்மது ந'சீம் ஹ¤சைன் என்று அது தெரிவித்தது. அவர் பெயர் மற்று காடி எண் குறிப்பிட்டு நன்றி பாராட்டி, மின்மடலில் தேசியப் பத்திரிகையான தி ஸ்ட்ரெய்ட் டைம்ஸ்க்கு மறுநாள் அனுப்பி வைத்தாள்.
அதற்கு பின் அவள் அரவிந்தனிடம் அடிக்கடி தொலைபேசியில் பேச நேரம் கிடைக்கவில்லை, எஸ். எம். எஸ் அல்லது மின் மடல்தான். அரவிந்தன் அவளது தொண்டிற்கு மிகவும் உற்சாகம் அளித்தான்.
சிரித்த முகத்துடன் பணி புரிபவளுக்கு நோயாளிகளைக் கையாள்வதோ ஆக்கபூர்வமாகவோ ஆறுதலாகவோ பேசிவது புதிதல்ல, ஆனால் கடுமையான தொற்றுநோய் என்பதால், மிக நெருங்கிய உறவினர் கூட பார்வையாளராக வர இயலாத சூழல், இது மருத்துவர்உலகுக்குக்கே சவாலாக இருந்தது. "நீ என் தாய், என் மகள், என் சகோதரி என்று ஒவ்வொரு நோயாளியின் கதறலும் கண்ணீரும், அவளுக்கு சில புதிய சிந்தனைகளை தோன்றுவித்தது. பணிகளைச் செவ்வனே செய்து வந்த அவள் போன்றவர்களுக்கு மனைதெம்பை அளித்தது எம். ஆர். டி. நிலையத்தில் நன்றி தெரிவித்து பொதுமக்கள் எழுதிக்குவித்த கையெழுத்துக்கள், மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட வாழ்த்துக்கள், மலர்க்கொத்துக்கள், அதிலும் ஒரு ஆறு வயது சிறுமி தானே தயாரித்து வண்ண அட்டையில் fly fly letter fly for all your service no money can buy என்று தாதியர் படம் வரைந்து அதில் மருத்துவ உபகரணங்களின் படங்கள் வரைந்து அலங்கரித்து அனுப்பியது அந்த மருத்துமனையின் அறிவிப்புப் பலகையிலிருந்து எடுக்க யாருக்கும் மனம் வரவில்லை.
உண்மையில் முதலிய தயங்கிய ஒருசிலர் கூட வெகுவிரைவில் மருத்துவத்துரை, மற்று சுகாதாரப் பணியாளர்களின் சேவையை பார்த்து மனம் மாறினர், ஆனால் கூடப்பிறந்த சொந்த ரத்தம், ஒரு வினாடிதான் நினைத்தாள், மறுகணம் பொதுச்சேவையில் இருக்கும் நான், சொந்த பிரச்சனைகள் இருந்தாலும் , கடமையை உற்சாகத்துடனும், ஆக்கபூர்வமாகவும் அனைவரிடமும் பேசுவேன் என்று உறுதி பூண்டது நினைவுக்கு வர, சிந்தனையை மாற்றினாள். இந்த மூன்று மாதங்களில் சார்ஸ் மட்டுமா உலக நாடுகளை உலுக்கியது, ஈராக் போர், இந்தோனிய கலவரங்கள், மற்றும் அங்கங்கே தீவிரவாதிகளின் தாக்குதல்கள், வெள்ளம், பூகம்பம் என்று இயற்கையில் சீறல்கள், மூன்று மாதங்கள் மூன்று நொடிகளாகப் பறந்தன.
சிங்கப்பூர் சீரடைந்து வந்தது அறிவிக்கப்பட்டது. அரவிந்தன் அன்று அவளை தன்னுடன் உணவுக்கு அழைத்திருந்தான். அரவிந்தன் ஏதோ முக்கியமாக பேச வேண்டும் என்று வேறு கூறியிருந்தான். எல்லாம் அவர்களது வருங்கால நடவடிக்கைகளை பற்றி பேசுவதற்காக என்றான்.
அன்று தன்னை எளிமையாக ஆனால் அழகாக அலங்கரித்துக் கொண்டாள். அவளுக்கும் ஒரு முக்கிய நோக்கம் இருந்தது. சார்ஸ் பிடியிலிருந்து நாடு விலகி "கூல் சிங்கப்பூர்", "சிங்கப்பூர் இஸ் ஓகே" என்ற வாசகங்கள் அங்கங்கே முழங்கிக்கொண்டிருந்தன. அதோ, அரவிந்தன் அங்கு ஒரு காலி மேசையருகில் அமர்ந்திருந்தான். இருவரும் சுருக்கமாகப் பேசி உணவு உண்டு முடித்தனர்.
"யூகனேஷ்வரி, வாழ்வின் உச்சகட்டத்தில் நாம் உள்ளோ¡ம், இப்போது நம்மிடம் ஒரு பெரிய சொத்து உள்ளது அது நம் இளமை , கல்வியில் மேம்படுத்திக்கொண்டோம், இதோ இது நம் வாழ்வில் பல பல சாதனைகளுக்கும் புரட்சிகளுக்கு நம்மை அழைத்துச் செல்லப்போகிறது, இளையரான நமக்கு மிகச் சிறந்த உடல் நிலை, ஆரோக்கியம், மனத்திண்ணம் நினைத்ததை செயல் படுத்தும் ஆற்றல், இதெல்லம் இந்த பருவத்தின் உச்சகட்டத்திலிருக்கும், அந்த சக்தி வீணாகக்கூடாது, நாளைய உலகை வளமாக அமைதியாக ஆக்குவது இளையரான நம் கையில்தான் இருக்கிறது. ஆக்கபூர்வமாகச் செயல் படலாம். இந்தக் கவிதையைப் பார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் எழுதியது,

"தன் பெண்டு தன் பிள்ளை சோறு வீடு,
சம்பாத்தியம், இவையுண்டு தானுண்டு என்போன்
சின்னதொரு கடுகு போல் உள்ளம்கொண்டோன்
தெருவார்க்கும் பயனற்ற சிறிய வீணன்
கன்னலடா என் சிற்றூர் என்போன் உள்ளம்
கடுகுக்கு நேர் மூத்த துவரை உள்ளம்
தொன்னையுள்ளம் ஒன்றுண்டு தனது நாட்டுச்
சுதந்திரத்தால் பிற நாட்டைத் துன்புறுத்தல்."


"மருத்துவமனையில் என் பணியில் இரண்டு ஆண்டு விடுப்பு பெற்றுக் கொண்டு, தொண்டூழியராக பதிவு செய்து கொண்டு வியட்நாம் செல்லப்போகிறேன், மருத்துவ உதவி குழுவினருடன். அங்கு என் பணி நிரந்தரம் அன்று, கம்போடியா , நேப்பாள், எங்கெல்லாம் தேவைபடுகிறதோ அங்கு செல்லும் குழுவில் சேர விருப்பம் தெரிவித்துள்ளேன். அவன் பேசிக்கொண்டே போனான், யுகனேஸ்வரியின் இரண்டு கண்களிலுருந்து தாரை தாரையாக கண்ணீர், வாயிலிருந்து ஒரு கேவல் சத்தம் கூட இல்லை, அப்படியே அவன் கையைப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். பேசு யூகனேச்வரி எதாவது பேசு, என்று எனக்குத் தெரியும் , இதோ பார் என்று அவள் முகத்தை மெல்லத்திருப்ப, அவள் தன் கைப்பையிலிருந்து அதே தொண்டூழியத்திற்கு (volunteer) விருப்பம் தெரிவித்து தான் கையெழுத்திட்ட விண்ணப்பத்தை எடுத்து அவன் முகமெதிரில் காட்டிவிட்டு கண்ணீரோடு சிரித்தாள் யுகனேஸ்வரி. அரவிந்தன் அவளுக்காக கொண்டு வந்த விண்ணப்பம் அவன் சட்டைப்பையிலிருந்து மேசைமீது விழுந்தது.

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ஆம் ஆண்டு மூன்றாம் பரிசு பெற்றது.

1 comment:

ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

அன்பு மாதங்கி,
இந்தக் கதை சிங்கப்பூரில் சார்ஸ் சமயத்தில் நிலவிய சூழலையும், என்னுள் நீண்டிருந்த சிந்தனையோட்டத்தையும் மீண்டும் ஒரு முறை ரீவைண்ட் செய்ததுபோலிருந்தது.

அச்சமயத்தில் மருத்துவர்கள் மர்றும் தாதியரின் சேவையை என்னசொல்லிப் பாராட்டினாலும் போதாது. மறக்கக்கூடியதேயன்று.

நல்ல கதை.

வாழ்த்துக்கள்.

அன்புடன், ஜெ