Tuesday, August 31, 2010

வெளிச்ச இடுக்கில் இந்த ரோஜாச்செடி

மண்சட்டியில்
பத்து பதினைந்து ரோஜாப்பூக்கள்
ஒரே நேரத்தில் பூத்திருந்தன



கண்கொட்டாமல் பார்த்து வருகையில்
எல்லா சாமி படங்களுக்கும்
போதுமானதாக இருக்கும்தான்
வாங்க வேண்டாம்
குரல்
பின்னணியில் ஒலிக்கும்



சாமிக்கு வைக்கலாம்தான்
ஆனால் அங்கிருப்பதைக்காட்டிலும்
இங்கு இன்னும் பொலிவோடு
இருக்கின்றனவே



இடுக்கு வெயில், தண்ணீர்
வேர்ச்சத்து, காற்று
எதற்கும் இணையாகாதே



பக்கத்துவீட்டுக்குக்
கொடுக்கலாம்தான்
அவர்கள் வாங்கிக்கொள்பவர்களாக இல்லை
கொடுப்பவர்களாக அண்மையில்
மாறிவிட்டார்கள்



இலைகளுக்கும் மலர்களுக்கும்
இலவச நிகோட்டின் படலங்கள்
அவ்வப்வோது அளித்துவரும்
உபயதாரர்கள்



பறித்துவிட வேண்டாம்
வேண்டிக்கொண்டாள்
இவைஎதுவும் அறியாத
என் வீட்டிலிருந்த குழந்தை



ஒரு பூ
பள்ளிவளாக காவலருக்காம்
எடுத்துத்துப்போயிருக்கிறாள்
அவருக்கு
நிறைய நேரம் இருக்கிறது
என்றவாறே



இன்று
கருத்த மகரந்தமும்
வெளிறிய இதழ்களும்
காணக்கிடைக்கையில்
பறித்திருக்கலாமோ
சஞ்சலமடைகிறது மனம்



பழுத்த ஜீவரசம்
நாசியில் இனிக்க
உன்மத்தம்
கொள்ளச்செய்கின்றன



தொலைவில்
கண்ணாடி உடலுடன்
சீனத்தாத்தா
பேசிக்கொண்டிருக்கிறார்
மௌனமாய்க்
கேட்டுக்கொண்டிருக்கும்
பூங்கா பெஞ்சுகளுடன்




நன்றி: நாம்

2 comments:

நட்புடன் ஜமால் said...

பக்கத்துவீட்டுக்குக்
கொடுக்கலாம்தான்
அவர்கள் வாங்கிக்கொள்பவர்களாக இல்லை
கொடுப்பவர்களாக அண்மையில்
மாறிவிட்டார்கள்]]

மிகவும் இரசித்தேன்

priyamudanprabu said...

இன்று
கருத்த மகரந்தமும்
வெளிறிய இதழ்களும்
காணக்கிடைக்கையில்
பறித்திருக்கலாமோ
சஞ்சலமடைகிறது மனம்
///

NICE