Saturday, May 20, 2006

தேர்தல் 2060

பத்திரிகைகளில் அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து கொடுத்த விளம்பரத்தைப் பார்த்து தமிழக மக்கள் தலையைப் பிய்த்துக்கொண்டனர்.


புதிய தேர்தல் விதிமுறைகள்- தேர்தல் 2060

1.ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர் அடுத்த கட்சியின் குறைகளைப் பட்டியலிடாது, தங்கள் கட்சியின் குறைகளை முன்னிலைப்படுத்த வேண்டும்.

2. அவரவர் கட்சி பற்றி எத்தனை புகார்கள் எழுகிறதோ அதற்கு தகுந்தாற்போல் சிறப்பு மதிப்பெண் கொடுக்கப்படும்.

3.ஒரு முறை முதலமைச்சர், மந்திரி, எம்.எல்.ஏ முதலிய பதவிகளில் இருந்தவர் மீண்டும் போட்டியிடக்கூடாது. ஆறு மாதத்திலேயே பதவி இழந்தாலும் சரி, அல்லது நன்னடத்தையினால் ஐந்து வருடம் பதவியில்இருந்தாலும் சரி.

4. கிரிமினல் ரெக்கார்ட் இருப்பவர், லஞ்சம், ஊழல் செய்தவர்கள் போட்டியிட முடியாது.

5. எந்தக் கட்சியுமே தனக்கு சொந்தமான ஊடகத்தில் தனது கட்சியின் குறைகளை மட்டுமே கூற வேண்டும்.

6. தங்கள் கட்சியைப் பற்றி அதிகமான புகார்கள் கொடுப்பவர்கள் அதன் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தலில் நிற்கலாம்.

7. வேட்பாளராக நிற்க விரும்புபவர்கள் எழுத்துத்தேர்வில் 80/100 க்கு குறையாமல் மதிப்பெண் பெறவேண்டும். எழுத்துத் தேர்வின் பாடத்திட்டம் அனுபவ அறிவு, சமூக சீர்திருத்தங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். எழுதத் தெரியாதவர்களுக்கு வாய்மொழித்தேர்வு நடத்தப்படும். நேர்முகத்தேர்வும் நடக்கும். எல்லாக் கட்சித்தலைவர்களும், ஊடகத்தலைவர்களுக்கு கேள்வி கேட்பதில் பங்கு இருக்கும்.

8. வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு ஆறு மாத அவகாசம் முதலில் கொடுக்கப்படும். அவர் எத்தனைக் குறைகளைத் தீர்க்கிறார் என்பதைப் பொறுத்து அவரது அடுத்த ஆறு மாத கால பதவி நீட்டிப்பு தொடரும்.அதிக குறைகளைத் தீர்ப்பவருக்கு மதிப்பெண் கூடும்.

9. இவர்கள் பெறும் மதிப்பெண் ஒவ்வொரு செமஸ்டருக்கும் நாளிதழில் வரும்.

10. குறைந்த மதிப்பெண் பெறுபவரின் பதவி நீக்கப்படும். அவர்கள் மீண்டும் போட்டியிட இயலாது.

11. ஒவ்வொரு தொகுதியிலும் இரவு 12 மணிக்கு பெண்கள் அல்லது குழந்தைகள் தனியே சென்றால் அவர்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படக்கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாய் இருந்தாலும் அந்தத் தொகுதி வேட்பாளரின் பதவி பறிக்கப்படும். மதிப்பெண் லிஸ்டில் அடுத்த நிலையில் உள்ளவர் மறுநாளே பதவிக்கு வருவார்.

12. பணிகாலத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களின் ரேஷன் அட்டை, வீட்டுத் தொலைக்காட்சி பறிக்கப்படும்.

13. அந்தந்த தொகுதியின் காவல் நிலையத்தில் புகார் பெட்டி வைக்கப்பட்டு, தினமும் கட்சித்தலைவர்களுக்கு அனுப்பப்படும். உடனடியாக எல்லாப் புகார்களும் கவனிக்கப்படவேண்டும்.

தேர்தல் 2060 ஐ ஒட்டி தேசிய தேர்தல் ஆணையமும் முதலமைச்சரும் அறிவித்திருக்கும் மேலும் சில பொது விதிகள்:

1. சாதி, மதம் முதலிய வார்த்தைகளோ அவைகளின் பெயர்களோ எந்த ஊடகத்திலும் வரக்கூடாது.

2. அனைவரும் ஓட்டு போடவேண்டும். ஓட்டுப் போடத் தவறுபவர்களுக்கு அவர்களின் பெயரை இனி எங்கும் அவர் பயன்படுத்தக் கூடாது. எல்லோரும் அதன்பிறகு அவருக்குக் கொடுக்கப்படும் எண்ணைக்கூறியே அழைக்க வேண்டும்.

3. எந்தத் தொகுதியிலாவது யார் பெயராவது இல்லை என்றாலோ, அல்லது அவரது ஓட்டை யாராவது போட்டுவிட்டார் என்றாலோ உடனடியாக ஒரு ஓட்டுக்கு 100 ஓட்டுக்கள் என்ற முறையில் ஆளும் கட்சியிலிருந்து ஓட்டுக்கள் கழிக்கப்படும்.

4. எல்லாக் கட்சி அலுவலகங்களிலும் வீடியோ காமிராக்கள் பொருத்தப்படும். அதை பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தகுந்த சேனலைத் தட்டி வேண்டியபோது பார்த்துக்கொள்ளலாம்.

5. தேர்தல் விளம்பரங்கள் கிடையாது. அரசே வேட்பாளர்களின் பெயர், அவர் கட்சி, அவர் சின்னம் முதலியவற்றை அறிவிக்கும்.

6. தேர்தலை ஒட்டி பொதுக்கூட்டங்களில் பேசுபவர் அவையோருக்கு வணக்கம் என்று மட்டும் சொல்லிவிட்டு அவரவர் கட்சியில் எத்தனை குறைகள் என்ற எண்ணிக்கையை முதலில் சொல்லவேண்டும். அடுத்து அக்குறைகளை மட்டுமே பட்டியலிடவேண்டும். இலவசமாக எதுவும் கொடுக்கக் கூடாது.இவை ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்குப் போய்விடும்.

7. சட்டம் ஒழுங்கு, இவை அரசியல் வாழ்வில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி மக்களுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படும். பொது இடங்களில் அசுத்தம் செய்வோர், லஞ்சம் ஊழலில் ஈடுபவோர், கட்சியின் பெயரால் அடித்துக்கொள்வோர் மீது உடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

ரமி, இலோவைப்பார்த்து சைகை செய்தாள். "ஆயிற்று நம் திட்டத்தின் படி. தமிழகத்தின் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் அவர்கள் உதவியாளர்களுக்கும் போலிஸ்காரர்களுக்கும், எல்லா ஊடகங்களின் தலைவர்களுக்கும் , உதவியாளர்களுக்கும் திட்டமிட்டபடி அவரவர் மூளையில் சில முக்கிய சில்களைச் சேர்த்தாயிற்று. அவர்கள் நினைத்தாலும் ஊழல் பண்ண முடியாது. இனி அவர்களுக்குத் தெரியாத ஒரு வடிவில் உருமாற்று செய்து கொண்டு வேடிக்கையைப் பார்க்கலாம். அதுதான் நம் தலைமையகம் நமக்குக் கொடுத்த வேலை. நமக்கு 5 வாரங்கள், பூமியினருக்கு 5 வருடங்கள்; ஏதேனும் உருப்படுகிற வழி இருக்கிறதா, இல்லையென்றால் நமது தலைவரின் பிரதிநிதிதான் ஆட்சி செய்ய வேண்டும். " என்று ரமி இலோவிற்குத் தெரிவித்தாள்.

பி. கு. இவர்கள் இருவரும் வேறு கிரக வாசிகள்.

2 comments:

வல்லிசிம்ஹன் said...

என்ன அருமையான கற்பனை!இப்படியும் நடக்கும் மாதங்கி.நம்பிக்கையோடு இருப்போம்.

சிங். செயகுமார். said...

இந்த மாதிரி எழுதுனவங்க கடந்த எலக்ஷன்ல ஓட்டு போடலையாமே அவங்களுக்கு ஒங்க சட்டத்தில என்ன சொல்ராங்க?